Search This Blog

Tuesday 31 December 2013

உலகெங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டம்



2014 -ஆம் வருடத்தை வரவேற்கும் பொருட்டு உலகெங்கும் கொண்டாட்டங்கள் களை கட்டி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன் போன்ற முக்கிய நகரங்களில் வண்ணமயமான வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.

நியூசிலாந்தில் புது வருடத்தை வரவேற்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கை நிகழ்வுகள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.

ஆக்லாந்தின் ஸ்கை டவரில் நிகழ்த்தப்பட்ட இந்த வண்ணமயமான நிகழ்வை நகரின் பல பகுதிகளில் இருந்தும் கண்டு களித்த மக்கள் உற்சாகக் குரலெழுப்பி புத்தாண்டை வரவேற்றனர்.

தூக்கமும் நீங்களும்...




உலகில் சரிபாதிப் பேர், நிம்மதியான உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இருட்டு- வெளிச்சம், இன்பம்- துன்பம், கஷ்டம்- நஷ்டம், நன்மை- தீமை, சந்தர்ப்பம்- சூழ்நிலை இவற்றோடு சம்பந்தப்பட்டது, தூக்கம். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தூக்கத்தை வரவழைக்க முடியாது.


அதேமாதிரி நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் வருகிற தூக்கத்தை நிறுத்தவும் முடியாது. தூக்கமின்மை, அதாவது போதிய நேரம் தூங்காததை மருத்துவ மொழியில் ‘இன்சோம்னியா’ என்று சொல்கிறார்கள். தூங்கப்போவதற்கு முன்பு தீவிரமான யோசனை, மூளையைக் கசக்கி சிந்திப்பது என்று சொல்வார்களே,


அந்த மாதிரி எண்ணங்கள் உருவாவது, உடலை அதிகமாக வருத்திக்கொள்வது, உடலுக்கு அதிகமாக வேலை கொடுப்பது, தூங்கும் இடம் ஒரு நல்ல சூழ்நிலையில் அமைந்திராமல் இருப்பது, தூங்கும் நேரம் ஒத்துப் போகாமல் இருப்பது, நாள்பட்ட உடல் நோய்கள், தாங்க முடியாத வலி, மன அழுத்தம்,


மன உளைச்சல் இவை அனைத்துமே தூக்கத்தைப் பாதிக்கும். தூக்கத்தை வரவழைக்க பலரும் பலவித முறைகளைக் கையாளுகிறார்கள். சிலர் யோகா செய்கிறார்கள். சிலர் தியானம் பண்ணுகிறார்கள். சிலர் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள்.


சிலர் மது அருந்துகிறார்கள். இப்படி பலவிதமான முறைகளைக் கையாண்டு தூக்கத்தை வரவழைக்கிறார்கள். தூக்கமின்மைக்கும் மதுவுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. மது அருந்தினால் நல்ல தூக்கம் வரும் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள்.


தூக்கம் வர வேண்டும் என்பதற்காகவே மதுபானம் அருந்த ஆரம்பித்தவர்கள் நிறைய பேர். ஆரம்பத்தில் மதுபானம் நல்ல தூக்கத்தைத் தருவதைப் போலத் தோன்றினாலும், நாளடைவில் அது தூக்கத்தைக் குலைக்கும். முன்னிரவில் தூக்கத்தை கொடுத்து பின்னிரவில் தூக்கத்தைக் கெடுத்துவிடும் தன்மையுடையது மது பானம்.


மேலும் கண்கள் சுற்றிக்கொண்டே தூங்கும் தூக்கத்தையும் (ஆர்.இ.எம். தூக்கம்) மது குறைத்து விடும். வயதானவர்களுக்கு ஒரு சிறிய சத்தம் கூட தூக்கத்தை கெடுத்துவிடும். அதற்குப் பிறகு தூக்கத்தை வரவழைக்க அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.


மறுபடியும் தூங்குவதற்கு ரொம்ப நேரம் ஆகும். மனிதனுடைய பழக்கவழக்கங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் தூக்கத்தைப் பற்றிய பலவிதமான விஷயங்கள் நமக்குத் தெரியவருகின்றன. செயற்கை வெளிச்சங்கள் அதிகமில்லாத பழைய காலத்தில், சூரியன் மறைந்த கொஞ்ச நேரத்திலேயே தூங்கப் போய்விடுவார்கள்.


ஆனால் இரவில் நிறைய தடவை விழிப்பார்கள். மறுபடியும் தூங்குவார்கள். முன்னிரவில் ஆழ்ந்த தூக்கமும், பின்னிரவில் லேசான தூக்கமும் இவர்களுக்கு இருக்கும். பின் னிரவில் கண்கள் சுற்றும் (ரேபிட் ஐ மூவ்மெண்ட்) தூக்கமும் இவர்களுக்கு இருக்கும். தூங்குகிற நேரத்தில் உடம்பும், மூளையும் வேலை பார்ப்பதில்லை, இரண்டும் ஓய்வெடுக்க ஆரம்பித்து விடும் என்று நீங்கள் நினைக்கலாம்.


இது சரியல்ல. நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், விளையாடிக் கொண்டிருந்தாலும், படித்துக் கொண்டிருந்தாலும் நமது மூளை ‘பிசி’யாக வேலை பார்த்துக் கொண்டு தான் இருக்கும். நமக்கு தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படும் நேரத்தில், மூளையும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும்.


ஆனால் ஓரளவுதான் மூளை ஓய்வு எடுத்துக் கொள்கிறது. நாம் தூங்கும்போது மூளை அதுபாட்டுக்குச் செயல்பாட்டில் இருக்கிறது. அன்றைய பொழுதுக்கும், அடுத்தடுத்த நாட்களுக்கும் உங்களை தெம்பாக வைக்க, உங்களை தேக ஆரோக்கியத்தோடு உற்சாகமாக வைக்க, உடலுக்குள் என்னென்ன ரசாயன மாற்றங்கள் பண்ண வேண்டுமோ அதையெல்லாம் பண்ணி, உடம்பை மூளை தயாராக வைத்திருக்கிறது.

வெற்றிப் படிக்கட்டுகள் - இவ்வளவுதான்..?





வெற்றிப் படிக்கட்டுகள்:-



சிறு வயதிலிருந்தே நாம் பழக்கப்பட்ட ஒரு விஷயம் நேர அட்டவணை போடுவது. இந்த நேரத்துல, இந்தப் பாடத்தைப் படிக்கணும் என ஒரு டைம் டேபிள் போட்டு வைத்திருப்போம். இந்த விஷயத்தை நம்மளோட நிறுத்தினமா..? ம்ஹூம்.. நம் தங்கை, தம்பி… குழந்தைகள்.. பேரக்குழந்தைகள் அப்படினு அடுத்தடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுக்கிறோம். இந்த நேரத்துல இதைத்தான் படிக்கணும், எழதணும்னு நாம பழகற சின்ன வயது பழக்கம், வளர்ந்து பெரியவங்களானதும், இந்த சமயத்துல இந்த வேலையைத்தான் செய்யணும், செய்தாகணும்னு நம்ம மனசுல பதிவாகி நம்மளை நாமளே கட்டாயப்படுத்திக்கிறோம். இல்ல, அடுத்தவங்களை வற்புறுத்தறோம். அதிக பட்சமா, அளவுக்கதிகமா சோம்பேறித்தனத்தோட இருக்கறப்போ அல்லது பல புதிய விஷயங்களை பழக்கப்படுத்திக்கவோ இந்த கால அட்டவணை விஷயம்.


 யுக்தி உதவலாம். ஆனா, எல்லா சமயங்களிலேயும் இந்த ‘உறுதி’ உதவாது. வளைந்து கொடுக்கும். எந்த நேரத்தில் எது முக்கியம் என யோசித்து செயல்படும் தன்மை, தொழில்சார்ந்த நடவடிக்கைகளில் மிகவும் முக்கியம். நேரநிர்வாகத்தின் ஒரு அம்சமான இந்தப் பண்பைப் பற்றி நாம் முழுதாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஏனெனில், நாம் இப்பொழுது விவாதித்துக் கொண்டிருக்கின்ற அத்தனை விஷயங்களும், ஏதோ பொழுது போவதற்கோ அல்லது வார்த்தை ஜால தோரணங்களைப் படித்து ‘அட’ என்று நீங்கள் வியப்பதற்காகவோ அல்ல, உங்களது தினசரி ‘தொழில் வாழ்க்கையில் நீங்கள் பின்பற்றியாக வேண்டிய வெற்றிக்கான கட்டளைகள், நிதர்சமன ஆலோசனைகள் (Practcal tips).


இப்ப கொஞ்சம் ப்ராக்டிக்கலா யோசிச்சுப் பார்க்க பார்க்கலாமா? நீங்க உங்களோட ‘அட்டவணைப்படி’ வேலை செஞ்சுட்டிருக்கீங்க. உங்க ‘நேர அட்டவணை’யிலேயே இல்லாத, ஆனால் உடனே சரிசெஞ்சே ஆகணும்ங்கற விதத்துல ஒரு பிரச்சனை அல்லது இக்கட்டான சூழ்நிலை ஏற்படுது.


 இப்ப என்ன செய்வீங்க…? என்னோட ‘தினசரி கால அட்டவணையை ‘ எக்காரணம் கொண்டும் பிடிவாதமாக இருப்பீங்களா…? இல்ல, இந்த நெருக்கடியான சூழ்நிலையில் நாம என்ன செஞ்சா, நஷ்டம் ஏற்படாம தவிர்க்கலாம்.. அப்படினு யோசிச்சு, அதுக்கான முயற்சிகள் எடுப்பீங்களா…? நிச்சயமா இரண்டாவது முடிவைத்தான் பின்பற்றுவீங்க, இல்லையா? ஏன் இவ்வளவு உறுதியா நான் சொல்றேன். அப்படினா, எந்த வெற்றிகரமான தொழில் முனைவோரும் நீங்க வெற்றிகரமான நபர்தான்னு நான் நம்பறேன். சரியா…?


அதனால், இதுதான்.. இப்படித்தான்.. இந்த நேரத்தில் தான் செய்ய வேண்டும்…. செய்ய வேண்டிய வேலை என்ன, எதைச் செய்தால் நல்லது, எடுக்க வேண்டிய சரியான முடிவு என்ன என்பதையெல்லாம் உணர்ந்து, நேரம் உங்களை கையாளாமல், உங்களை கட்டுப்படுத்த நேரத்தை அனுமதிக்காமல், நீங்கள் நேரத்தை எப்போது கையாளத் தொடங்குகிறீர்களோ, உங்கள் கட்டுப் பாட்டுக்குள்ள் வைக்கிறீர்களோ, அது தான் சரியான நேர நிர்வாகம் ஒவ்வொரு வெற்றிகரமான தொழிலதிபரும் பின்பற்றும் விதிமுறை இதுதான்.


நேர நிர்வாகம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் அது தொடர்பான இன்னொரு முக்கியமான அம்சத்தை, கருத்தைப் (Concept) பற்றியும் பேசியே ஆக வேண்டும். நம் நாட்டில் பெரும்பாலானோர், குறிப்பாக தொழில் முனைவோர் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கும் விஷயம் இது. நிறைய கவலைப்படற, யோசிக்கற, தவறிப் போய்விடக்கூடாதேனு பதைபதைக்கிற.. அந்த விஷயம் …. சரி, உங்க இதயத் துடிப்பை அதிகரிக்க விரும்பல, சொல்லிடறேன். ‘நல்ல நேரம், கெட்ட நேரம்…’ பார்க்கறதுதாங்க. ஒரு புது தொழில் துவங்கும்போது, அது தொடர்பான பூஜை அல்லது கடைதிறப்பு விழா….


இந்த மாதிரியான சமயங்கள்ல நல்ல நேரம், நல்ல நாள் பார்க்கறது இயல்புதான். ஆனால், சிலபேர் தங்களோட தொழிலில் சின்ன சின்ன விஷயங்களுக்காகத் தொழிலில் சின்ன சின்ன விஷயங்களுக்காகக் கூட, எடுத்துக்காட்டாக, தொழில் ரீதியான சந்திப்புகள், கூட்டம், இந்த மாதிரி எல்லாத்துக்குமே நேரம் பார்த்து செயல்படனும்னு ஒரு முடிவோட இருப்பாங்க. ராகு காலத்திலயோ அல்லது செவ்வாய் கிழமை மற்றும் சந்திராஷ்டம் நாட்கள்லயோ யாராவது முக்கியமான நபர் தொழில் விஷயமா வரச்சொன்னாக்கூட, ஏதாவது காரணம் சொல்லி தவிர்த்துடுவாரு எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் ஒரு நாள் ரொம்ப சோகமான மனநிலை, முகபாவத்தோட என்கிட்ட ஆலோசனை கேட்டு வந்திருந்தார்.


ரொம்ப ரொம்ப கவலையா, தனக்கு கிடைத்திருக்க வேண்டிய இரண்டு லட்ச ரூபாய் கான்ட்ராக்ட்டை தான் இழந்துட்டதா சொன்னார். அவர் சொன்ன காரணம் என்னை ரொம்பவே யோசிக்க வெச்சது. “நான் சந்திக்க வேண்டிய கெம்பெனியோட முதலாளி கல்கத்தாவில இருக்கிறவர். மாசத்துல ஒருநாள், இரண்டு நாள் மட்டும்தான் சென்னை ஆபீசை பார்வையிட வருவார். நேத்து மத்தியானம் என்னை சந்திக்க வருவார். நேத்து மதியானம் என்னை சந்திக்க வருவார். நேத்து மதியானம் என்னை சந்திக்க நேரம் கொடுத்திருந்தார். ஆனா, அது சரியான எமகண்டம். ரொம்ப முக்கியமான தொழில் விஷயங்கறதால, எமகண்டம் முடிஞ்சு போலாமேனு நான் ஒரு மணி நேரம் லேட்டா போனேன்.


அதுக்குள்ள, அவர் ஊருக்குக் கிளம்பி போய்ட்டதா அவரோட ஆபீஸ் வேலையாட்கள் சொல்லிட்டாங்க. உண்மையிலேயே அவர் ஊருக்குப் போய்ட்டாரா, இல்ல ரொம்ப முக்கியமான அவரோட நேரத்தை நான் வேஸ்ட் பண்ணிட்டேன்ங்கற கோபத்துல என்னை சந்திக்கிறதை தவிர்த்துட்டாராங்கறது தெரியல. அதுவே எனக்கு பெரிய குழப்பமா இருக்கு. ஆனா, அன்னைக்கு எனக்கு சாதகமா முடிஞ்சிருக்க வேண்டிய அந்த தொழில் ஒப்பந்தம் நடக்காமலேயே போயிடுச்சு.. அதுக்கப்புறம் எத்தனை முறை முயற்சி செய்தும் அவரோட பேசவே முடியல….” அப்படினு பெருமூச்சோட, தனது சோகத்திற்கான, கவலைக்கான காரணத்தை சொல்லி முடித்தார்.


ஒரு செயலோட சந்திப்போட முக்கியத்துவம் என்ன, நாம சந்திக்க நேரம் வாங்கியிருக்கற நபரோட அந்தஸ்து என்ன..? அவர் வேலையோட தன்மை… வேலை பளு… இந்த அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்து, சீர் தூக்கிப் பார்த்து அதன் அடிப்படையில்தான் நீங்க அவரை சந்திக்கிற நேரத்தை, அதன் முக்கியத்துவத்தை உணரனும். ரொம்ப, ரொம்ப உண்மையான, அதி முக்கியமான, தவிர்க்க முடியாத காரணமா இருந்தாலொழிய, வேறெந்த சின்ன, சின்ன காரணத்துக்காகவும் நீங்க வாங்கின முன் அனுமதியை ரத்து செய்யக் கூடாது.


மத்தவங்களோட நேரத்தை வீணடிக்கிற இந்த மாதிரியான செயல்களுக்கு, ‘கெட்ட நேரத்த’ காரணமா காட்டாதீங்க. அப்படி நீங்க முயற்சி போட்டுக்கற அடிக்கல். உங்களைப் பத்தி ரொம்ப ரொம்ப தவறான, கேலிக்குரிய அபிப்ராயம் அடுத்தவங்க மனசில ரொம்ப சுலபமா ஏற்பட்டுவிடும். இது நிச்சயமா உங்களோட தொழில் முன்னேற்றத்துக்கு வேகத்தடையா அமையும்.


சமீபத்துல நான் படிச்ச ஒரு விஷயம். நல்ல நேரம், கெட்ட நேரம் குறித்த ஒரு ஆய்வு என்னை ரொம்பவே யோசிக்க வெச்சது. சொல்லப் போனா, ரொம்ப அதிர்ச்சியாகூட இருந்தது. பெரும்பாலான நேரங்கள்ல, எந்த ஒரு சின்ன வேலையை, ஆக்கபூர்வமான வேலையைத் தொடங்கறதுக்கும் நாம நல்ல நேரம், காலம் பார்க்கிறோம். கெட்ட நேரத்துமேல பழியைப் போட்டுட்டு ஒரு செயலைத் தொடங்க லேட் பண்றோம்… பல சமயங்கள்ல, அப்படியே அது துவங்கப்படாமலேயே போய்டுது. நீங்களும் அந்த ரக மனிதரா…? அப்ப நான் சொல்லப் போற அந்த ஆய்வை நீங்க அவசியம் படிக்கனும். ஆனால் அதுக்கு நீங்க இன்னும் ஒரு மாதம் காத்திருக்கணுமே…!

நியூசிலாந்து தொடரில் இந்திய அணி: யுவராஜ்சிங் சிங் மிஸ்ஸிங்!



இந்திய அணி வரும் ஜனவரி 19 ஆம் தேதி நியூசிலாந்தில் நடைபெறும் ஒரு நாள் போட்டி தொடரில் கலந்து கொள்கிறது.


அங்கு 5 ஒரு நாள் போட்டியிலும், இரண்டு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கிறது. இதில் பங்கற்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

 
இந்த தொடரில் அதிரடி வீரர் யுவராஜ்சிங் தேர்வு செய்யப்படவில்லை. அறிமுக வீரர் ஈஸ்வர் பாண்டே ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டி அணியில் இடம் பிடித்துள்ளார். மற்றொரு அறிமுக வீரர் பின்னி ஒரு நாள் போட்டி அணியில் இடம் பிடித்துள்ளார்.


வரும் ஜனவரி மாதம் நியூசிலாந்து செல்ல உள்ள இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த ஒரு நாள் போட்டி தொடர் ஜனவரி 19ம் தேதி நேப்பியரில் துவங்க உள்ளது.


இந்த தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


 இந்த போட்டியில் தோனி, ஷிகார் தவான், ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி, ராஹானே, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்குமார், முகமது சமி, இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, இஷ்வர் பாண்டே, வருண் ஆரோன், ஸ்டுவர்ட் பின்னி ஆகியோர் அடங்கிய இந்திய அணி விளையாட உள்ளது.

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் ஆன்லைன் ஷாப்பிங்!!!




பெட்ரோல் விலை உயர்வு காரணமாக கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபோதிலும், ஆன்லைன் மூலமாக பொருள்களை ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளது. இது மிக சௌகர்யமாக உள்ளதாகக் கருதுவதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

 மேலும் பணம் செலுத்துவதற்கு பல்வேறு வகையான வாய்ப்பு, வசதிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள நிலையில் ஆன்லைன் வர்த்தகம் இந்த ஆண்டு (2013) 85 சதவீத அளவுக்கு அதிகரித்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆன்லைன் வர்த்தகம் இந்த ஆண்டு (2013) 85 சதவீத அளவுக்கு அதிகரித்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் நடைபெற்ற மொத்த வர்த்தகம் 850 கோடி டாலராகும்.

 இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் இதற்கு முக்கியக் காரணமாகும். ஆன்லைன் ஷாப்பிங் குறித்த ஆய்வறிக்கையை அசோசேம் வெளியிட்டது.

இதில் 2009-ம் ஆண்டு 250 கோடி டாலராக இருந்த ஆன்லைன் வர்த்தகம் 2011-ம் ஆண்டில் 630 கோடி டாலராக அதிகரித்தது. இது 2013-ம் ஆண்டில் 1,600 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் ஆன்லைன் வர்த்தகம் 5,600 கோடி டாலர் அளவுக்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த சில்லறை வர்த்தகத்தில் ஆன்லைன் வர்த்தகம் 6.5 சதவீத அளவுக்கு வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மின்னணு பொருள்கள் தவிர, ஆடைகள், அணிகலன்கள், வீட்டுக்கு குறிப்பாக சமையலறை சாமான்கள், பிற உபகரணங்கள், கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், அழகு சாதனப் பொருள்கள், வாசனை திரவியங்கள், குழந்தைகளுக்குத் தேவையான பொருள்கள் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்புக்கு டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஆமதாபாத், கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் உள்ள 3,500 வர்த்தகர்களிடம் கருத்து கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு ...?




தொலைபேசி கட்டணங்கள் நாளை புதன்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளன.தொலைத்தொடர்பு வரியினை 20 – 25 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்திருந்தார்.

இதற்கமையவே தொலைபேசி கட்டணங்கள் நாளை புதன்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தயிரின் அற்புதங்கள் !!!!




தயிரின் அற்புதங்கள்

''புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே... உடம்புக்கு ஆகாது!'' என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே.

நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா?'' என்று தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.'

நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லி மாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும். இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம். நம்முடைய செரிமான மண்டலத்தில் மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன. இவை உணவு செரித்தலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

நன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.

இந்த நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும்போது, வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும். நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

ப்ரோபயாடிக் உணவு இயற்கையாக இருப்பது மிகவும் நல்லது. பாலை உறைவிட்டு சில மணி நேரங்கள் கழித்துப் பார்த்தால், தயிராக உறைந்து இருக்கும். இந்தச் செயல்தான், முதல் நாள் அரைத்துவைக்கும் இட்லி மாவை, அடுத்த நாள் காலையில் புளிக்க வைத்து, பொங்கி நுரைத்து வரச் செய்கிறது. இதற்குள் தான் 'பைஃபைடோ’ மற்றும் 'லாக்டோ’ என்ற நல்ல பாக்டீரியா உருவாகி இருக்கும்.

இதைத் தவிர ப்ரோபயாடிக் என பிராண்ட் செய்து கடைகளில் விற்கப்படும் பானங்களில் கூட நன்மை செய்யும் பாக்டீரியா கிடைக்கும். தயிரில் ப்ரோபயாடிக் இருப்பதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தயிர், மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுப்பது, யோகர்ட் போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு.


நன்மைகள்

வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தம், ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோயைத் தவிர்க்க வல்லது.

தாகத்துக்கு ஏற்ற பானம் மோர். இது உடனடியாக உடல் சோர்வை நீக்கி, சக்தி தரும்.

உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ப்ரோபயாடிக் உணவு மிகவும் நல்லது.

கற்றாழையுடன் சேர்த்து ப்ரோபயாடிக் உணவுகளைக் கலந்து தந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.

சமீபத்திய ஆய்வுகள் மூலம் ப்ரோபயாடிக் உணவுகளில் கான்சரைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

கர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கு நல்லது.

குளத்தில் சங்கு பிறக்கும் அதிசய கோவில்!




வேதமே, மலையாய் இருப்பதால் ‘வேதகிரி’ எனப் பெயர் பெற்றது. வேதாசலம் கதலிவனம் கழுக்குன்றம் என்பன இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள்.

மலைமேல் ஒரு கோயில் உள்ளது.  ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில் தாழக்கோயில் என்றழைக்கப்படுகின்றன. மலையில் தினமும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்குப் ‘பட்சி தீர்த்தம்’ என்று பெயர். மலைமீது உள்ள கோயிலில் வீற்றிருந்தருளும் இறைவன் – வேதகிரீஸ்வரர் (சுயம்பு மூர்த்தி), இறைவி – சொக்கநாயகி. இங்கு சுனை ஒன்றும் உள்ளது.

திருக்கயிலையில் பரமேஸ்வரன்–

பார்வதி திருமணம் நடைபெற்றவுடன், ஈசன் பார்வதி தேவியுடன் தனியாக எழுந்தருளி அருள்புரிந்த இடம் திருக்கழுக்குன்றம். மேலும் திருவாலங்காட்டில் காளியுடன் போட்டியிட்ட சிவன், ஊர்த்துவ தாண்டவம் ஆடிய களைப்புத் தீர, இத்தலத்திலேயே இளைப்பாறியதாகவும் புராண தகவல்கள் கூறுகின்றன.

சிவலிங்கத்தின் முன் மார்க்கண்டேயரும், பின்புறச் சுவரில் திருமாலும், திருமகளும் தம்பதியராக பரமேஸ்வரன்– பார்வதியை வணங்கிய வண்ணம் உள்ளனர். ஆலயக் கருவறை வெளிச்சுவரில் யோக தட்சிணாமூர்த்தியும், பிரம்மதேவரும் உள்ளனர். வேதகிரீஸ்வரர் முன் மண்டப வாசலின் இருபுறமும் விநாயகரும், முருகனும் அருள்பாலிக்கின்றனர்.

இந்த கோவிலில் உள்ள அம்மன் பாதாள அம்மன் என்னும் சொர்க்கநாயகி அம்மன். இவரது கருவறை வேதகிரீஸ்வரரை பார்த்த வண்ணம் பாதாளத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஈசன் கோவில் கொண்டுள்ள இந்த மலை 500 அடி உயரம் கொண்டது. 650 திருப்படிகள் இந்த மலைக்குச் செல்ல அமைக்கப்பட்டுள்ளன.

இடி வழிபாடு:

 வேதகிரீஸ்வரர் கருவறைக் கூரையில் சிறிய துவாரம் ஒன்று உள்ளது. அதன் வழியாக இந்திரன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடி மூலமாக ஈசனை வழிபடுவதாக ஐதீகம். ‘இடி வழிபாடு’ மறுநாள் ஆலயக் கருவறையில் கடுமையான அனல் இருக்குமாம். இடி பூஜை மூலம் ஆலயத்திற்கோ, பக்தர்களுக்கோ பாதிப்பு ஏற்படாது. மழைக்காலங்களில் மின்னல், இடி இவைகள் நம்மை தாக்காமல் இருக்க கழுக்குன்றத்து ஈசனை நினைத்து வழிபட்டாலே போதும். மலைக் கோவில் அடிவாரத்தில் இரண்டு விநாயகர்கள் தனித்தனி சன்னிதியில் வீற்றிருக்கின்றனர். பூரணை புஷ்கலா தேவி சமேதராக சாஸ்தாவும் எழுந்தருளியுள்ளார்.

கழுகுகளுக்கு விமோசனம்:

கிருதயுகத்தில் சிரவர முனிவரின் மகன்களான சண்டன், பிரசண்டன் தீய குணங்களுடன் இருந்தனர். அடுத்தடுத்து வரும் யுகங்களில் கழுகாய் பிறந்து, கலியுகத்தில் கழுக்குன்றத்து ஈசனை வழிபட்டு சாப விமோசனம் அடையலாம் என அறிந்து, அவ்விருவரும் கழுகாகப் பிறந்து தினமும் காலையில் காசி விஸ்வநாதரையும், பகலில் கழுக்குன்ற நாதனையும், இரவில் ராமேஸ்வரத்து மகாதேவரையும் வணங்கி, மறுநாள் காலை காசி என ஈசனை வழிபட்டு வந்தனர். இதில் பகலில் திருக்கழுக்குன்ற ஈசனை வழிபட்டு, பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் தரும் நைவேத்தியப் பிரசாதத்தையும் அக்கழுகுகள் உண்டு வந்தன. சிறிது நாட்களில் அக்கழுகுகள் சாபம் நீங்கப்பெற்றன.

வேதங்களே இங்கு மலையாக இருப்பதால் இத்தலத்தில் கிரிவலம் செய்வது சிறப்பாகும். புத்திர பாக்கியத்துக்கான பிரார்த்தனை தலமாக இது உள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அல்லது பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது உகந்தது. 48 நாட்கள் அதிகாலை வேளையில் திருக்கழுக்குன்ற மலையை வலம் வந்து வேதகிரீஸ்வரரை வழிபட்டால் புத்திரப் பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மாணிக்கவாசகருக்கு இத்தல இறைவன் தனது பற்பலத் திருக்கோலங்களைக் காட்டி குருவடிவாக காட்சியளித்துள்ளார். பிரகஸ்பதி இத்தல ஈசனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார்.

தாழக்கோவில்:


மலைக் கோவிலில் வேதகிரீஸ்வரராக அமர்ந்த ஈசன், பக்தர்களுக்காக மலையின் கீழே தனிக்கோவிலில் பக்தவச்சலேஸ்வரராக அருள்பாலிக்கிறார். அருகிலேயே பார்வதி தேவிக்காக காட்சியளிக்கும் பொருட்டு மலைக்கோவிலில் வேதகிரீஸ்வரரே பிரத்யட்ச வேதகிரீஸ்வரராக எழுந்தருளியுள்ளார். இந்தக் கோவிலை ‘தாழக்கோவில்’ என்று அழைக்கின்றனர். இந்த கோவிலில் அம்பாள் திரிபுரசுந்தரி என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

இந்த ஆலயத்தில் நெடிதுயர்ந்த நான்கு கோபுரங்கள் உள்ளன. இதில் வடக்கு கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. மேற்கு கோபுரம் 6 நிலைகளையும், கிழக்கு மற்றும் தெற்கு கோபுரங்கள் 7 நிலைகளைக் கொண்டது. கிழக்கு கோபுரமே ராஜ கோபுரமாகும். ராஜ கோபுரத்தின் உள்ளே கோபுரச் சுவரில் திருவண்ணாமலையைப் போல் கோபுரத்து கணபதி உள்ளார்.

சனி பகவான் வழிபாடு:


கோபுரத்தை அடுத்து உள்ளே சென்றால் பதினாறு கால் மண்டபம் உள்ளது. அதில் உள்ள சனிபகவான் சிலை அழகு. இவரை சனிக்கிழமைகளில் 5 நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 5 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால் சகல விதமான சனிக்கிரக தோஷங்களும் அகலும்.

அடுத்ததாக நான்கு கால் மண்டபம் உள்ளது. அதன் இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர். இருவரையும் வணங்கி நிமிர்ந்தால், 5 நிலை கொண்ட உள்கோபுரத்தைத் தரிசிக்கலாம். அங்கிருக்கும் அனுக்கிரக நந்திகேஸ்வர தம்பதியரை வணங்கி உள்ளே சென்றால் கொடி மரம், பலிபீடம், நந்தி உள்ளது. அருகில் அகோர வீரபத்திரர் உள்ளார். இவருக்கு பவுர்ணமி நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது சிறப்பாகும். அப்படியே உள்ளே நுழைந்தால் மூலவர் பக்தவச்சலேஸ்வரரை தரிசிக்கலாம்.

சுயம்பு அம்பாள்:

 இத்தல அம்பாள் திரிபுரசுந்தரி சுயம்புவாய் தோன்றியவள். இதனால் வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் அம்மனின் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். நான்கு திருக்கரங்களுடன், கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் அம்பாள் வீற்றிருக்கிறார். அம்மன் சன்னிதியின் எதிரில் தனியாக கொடி மரமும், பலிபீடமும் இருக்கிறது.

சங்கு தீர்த்தம்:


மிகப் பழமையான கோயில். நாற்புறமும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன – கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம். கோயிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சந்நிதிக்கு நேர் எதிரில் வீதியின் கோடியில் மிக்க புகழுடைய ‘சங்கு தீர்த்தம்’ உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இதிற்கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்துதந்ததாகவும், அதுமுதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பது மிகவும் விஷேசமாகும்.

சங்கு தீர்த்தம் – பெரிய குளம். ஒரு பாதி படித்துறைகள் மட்டுமே செம்மையாக்கப்பட்டுள்ளன. நீராழி மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன.

செங்கல்பட்டு, திருப்போரூர், கல்பாக்கம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கழுக்குன்றம் திருத்தலம்.

முன்னேற்றத் தடைகள் மூன்று...




முன்னேற மூன்றே சொற்கள், மூன்றே பண்புகள் ஆகிய தீர்மானமான முடிவு, இடைவிடாத பெருமுயற்சி, கடின உழைப்பு எனும் இவை எப்படி ஒரு சாதனையாளருக்கு முதன்மையாகத் தேவையோ அப்படித் தேவையில்லாத, விட்டுவிட வேண்டிய, எதிர் மறையான மூன்று பண்புகளும் உள்ளன. அந்த மூன்று பண்புகளை, மூன்று தடைகளை நீக்கிவிட்டால் நம் முன்னேற்றம் உறுதியாகிவிடுகிறது, விளைவு படுத்தப்படுகின்றது. முடிவு நல்லதாக அமைகின்றது.

இவை நம்மிடையே உள்ளவை

இந்த மூன்று பண்புகளும் நம்மிடையே உள்ளவைதாம். முன்னர் சொன்ன மூன்று பண்புகளையும் முடிவு, முயற்சி, உழைப்பு ஆகிய மூன்றையும் நாம் வருந்தி வருத்திப்பெறவேண்டும். ஆனால் நம் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கின்ற இந்த மூன்று பண்புகளையும் நாம் நாம் நம்மிடமிருந்து விட்டுவிட்டால் போதும், நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கின்ற இந்தப் பண்புகளை உதறி எறிந்துவிட்டால் போதும். நாம் வெற்றி கண்டுவிடலாம்.

நாவடக்கம் என்பார்களே

நாவடக்கம் என்று கேள்விப்பட்டிருப்போம். நாவை அடக்குதல் என்பது பிறர் மனம்புண்படும்படி பேசாதிருத்தல்; வேண்டாத விவாதிதங்களில் ஈடுபடாதிருத்தல், வீணான கேளிக்கைப் பேச்சில் ஈடுபடாதிருத்த் ஆகிய மூன்றையும் விட்டு விடுவது தான். அப்படிப் பேச நேரும்போது நாவை அடக்கிவிடுவதுதான் நாவடக்கம் என்பது.

துன்பங்களுக்கு அடிப்படை

நம் முன்னோர்கள் நாவடக்கம் என்று சொன்னதை, இன்றைய அறிவியல் அறிஞர்கள், மூன்றாகப் பகுத்து மக்கள் மனங்கொள்ளும் வகையில், சமுதாயத்தில் உள்ள நடைமுறைக்கு ஏற்ற வகையில் எடுத்துரைத்துள்ளார்கள். நுணுகி நுணுகி ஆராய்ந்த பார்த்தால் நமக்கு ஏன் பலருக்கும் வருகின்ற துன்பங்களின் பெரும் பகுதி இவற்றின் வழியாகத்தான் வருகின்றன. என்பதை அறிந்துகொள்ளலாம் தவளை தன் வாயினால் கெட்டுவிடுகிறது என்று கிராமங்களில் பழமொழியாகச் சொல்வார்கள். தவளை மனிதர்கள் ஒரு காலும் மனிதர்கள் ஒரு காலும் முன்னேற முடியாது.

பிறர் பற்றிக் கருத்துரை வழங்குதல்

ஒவ்வொருவரைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் ஒரு கணிப்பு. அவரது நடை முறைகள் பற்றிய ஒரு முடிவு இருக்கவே செய்கின்றது, ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள். அல்லது ஒரு அலுவலகத்தில் 40 பேர் வேலை செய்கிறார்கள் என்றால் ஒவ்வொருவருக்கும் தன்னைத்தவிர மற்ற 36 பேரைப் பற்றிய கருத்தை, முடிவை வைத்தே இருக்கிறார்கள். நல்ல, பாராட்டக் கூடிய முடிவாக, கருத்தாக இருக்குமானால், அதுவும் தேவை நேர்ந்தால் மட்டுமே சொல்லலாம். இல்லாவிட்டால் சொல்லாமல் இருந்து விடுவதே நல்லது. தேவை இல்லாத இடத்தில், பேசாமல் இருப்பதே அறிவுடமை. மாறாக குறையான கருத்துக்களைத் தெரிவிக்க நேர்ந்து விடுவதால் அது உண்மையாக இருந்தாலும் கூட அவர் நமக்கு பகைவர் ஆகி விடுகிறார். ஒவ்வொருவரைப் பற்றிய குறைகளை வெளிப்படுத்துவோமானால் 39 பேரும் நமக்கு பகைவர்கள் ஆவதைத் தவிர வேறு வழியில்லை. நம்மைச் சுற்றிலும் பகைமைதான் மிஞ்சும்.

பல அரசியல் வீழ்ச்சிக்குக் காரணமே இப்படிக் கருத்துத் தெரிவிப்பதுதான். இவர் குறையில்லாதவராக இருந்து கருத்துத் தெரிவித்தால்கூட உலகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால் ஆயிரம் குறைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களைப் பற்றிக் கருத்துத் தெரிவித்தால் யார் ஏற்றுக் கொள்வார்கள்? அதேபோல் தொழில் செய்யும் இடங்களில், குடும்பத்தில், உறவினர்களிடையில், ஏன் நாம் பழுகின்ற, பணி புரிகின்ற அனைத்து இடங்களிலும் நாம் இவ்விதம் கருத்துத் தெரிவிப்பதால் துன்பத்தை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம். விலைக்கு வாங்கிக் கொள்கிறோம்.

ஒரு மாதம் சோதனை முயற்சியாக யாரைப்பற்றியும் கருத்துத் தெரிவிப்பதில்லை என்ற முடிவோடு நடந்து பாருங்கள். துன்பங்கள் குறையும். பிறகு துன்பங்கள் இல்லாமலேயே போகும். யாராவது வற்புறுத்திக்கேட்டால் கூட மன்னிக்கவும் என்று பதில் சொல்லிவிடுங்கள். (No Comments) என்று முடிவு செய்து கொண்டே உங்கள் அன்றாடச் செயலைத் தொடங்குங்கள். ஏதேனும் கருத்துத் தெரிவிக்கும் அவசியம் நேர்ந்தால் பிறர் மனம் புண்படாத வகையில் சொல்லுங்கள்.

வீண் விவாதங்களில் ஈடுபடுதல் (Arguments)


கருத்துத் தெரிவித்தல் வேறு, விவாதித்தல் வேறு. தான் எடுத்துக் கொண்ட கொள்கை சரியா? தவறா? என்றே கருதாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பது போலப் பேசுகின்றவர்கள் உலகம் அறவே வெறுத்து ஒதுக்கி விடுகின்றது. அத்தகையவர்களைக் கண்டால் உலகம் ஒதுங்கிக் கொள்கிறது. அவர்களுக்கு எவ்வித பங்களிப்பையும் கொடுக்க நல்லவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். நாளடைவில் இத்தகைய “விவாதிகள்” (augumenters) இருந்தும் கூட வாழ்வில் எந்தத் துறையிலும் முன்னேற முடியாமல் தடைப்பட்டுப் போய்விடுகிறார்கள்.

வீண் அரட்டை (Gossip)

அதேபோல் எப்பொழுதும் பேசிப்பேசியே பொழுதைக் கழிப்பவர்கள் இருக்கிறார்கள். மணிக்கணக்காகப் பேசுவார்கள். கூட்டம் போட்டு பேசுவார்கள். ஒரு பயனும் இருக்காது. இத்தகையவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்குத் தாங்களே தடைவிதித்துக் கொள்கிறார்கள். இந்த வீண் அரட்டைகளால் கருத்து வேறுபாடுகள் தோன்றி, விவாதங்களில் ஈடுபட்டு ஒருவரைப் பற்றி ஒருவர் கருத்துக்கள் தெரிவித்து, வெளிப்படையாகச் சொல்லவோமானால் திட்டித் தீர்த்து சுற்றிலும் பகையை வளர்த்துக் கொள்வார்கள்.

ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்த மூன்று தன்மைகளும் உள்ளவர்கள் தங்கள் வளர்ச்சிக்குத் தங்களே தடைவிதித்துக் கொள்கிறார்கள். நீங்களே எண்ணிப்பாருங்கள். இந்த மூன்று குணங்களும் எந்த அளவு இருக்கிறது என்று கணியுங்கள். இதற்கு ஒரே வழி கூடுமானவரை வாய் திறவாதிருத்தல்தான்; இதனால் நன்மைகள் அதிகம். பிறர் உதவியின்றி நீங்களே செய்யக்கூடிய இந்தக் காரியத்தை நீங்கள் ஏன் செய்யக்கூடாது தினம் எழுந்திருக்கும்போதே ஒரு முறை நினைவு கூறுங்கள் (No Comments, No argumensts, No gossip) இதுவும் ஒரு வகையில் இறைவழிபாடுதான்.

உங்களை காதுகளை கொடுங்கள்

மாறாக பிறர் சொல்லுகின்ற நல்ல கருத்துக்களைக் காது கொடுத்துக் கேளுங்கள். அனுபவமும் அறிவும், பண்பும் நிறைந்த மனிதர்கள் சொல்லுகின்ற கருத்துக்கள் நம்மைச் சிந்திக்கச் செய்யும். தீமைகளிலிருந்து விலகச்செய்யும். நன்மைகளை நாடி நடக்கச் செய்யும், அதனால்தான் அறிஞர்கள் நல்லவர்களின் அறிவுரையைக் கேளுங்கள் என்று கூறியுள்ளார்கள். நாம் நம் காதுகளைக் கொடுப்போம்.

கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!



உறவை உருவாக்குவதாக இருக்கட்டும், உறவை கெடுப்பதாக இருக்கட்டும் சின்னச்சின்ன வார்த்தைகள் தான் காரணமாக இருக்கும். ஆக ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேச வேண்டியது அவசியமாகிறது.


அரட்டை அடிப்பது என்றால் நமக்குள் இயல்பாகவே ஆனந்தம் ஊற்றெடுக்கிறது.


தினமும் புதிய புதிய மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. பணி செய்யும் இடம், நடந்து செல்லும் வழி, பயணம் என ஒவ்வொரு சூழலிலும் பலவிதமான மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அலுவலகங்களிலோ ஆணும், பெண்ணும் இணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும்போது உறவுகள் நீடிக்கவும், உறவுகள் பெருகவும் மென்மையான சின்னச்சின்ன பேச்சுக்கள் அவசியமாகின்றன.


நல்ல முறையில் படித்து, நாகரீகமாக உடை அணிந்து செல்வோர்கூட புதிய மனிதர்களிடம் பேசவும், பழகவும் கூச்சப் படுவது உண்டு. கவுரவக் குறைச்சலாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். பேச்சு கொடுப்பதும், பேசி ஞானத்தை, நட்பை வளர்த்துக் கொள்வதும் நிச்சயமாக ஒரு கலைதான்.


பணிச்சூழலோ, பொது இடமோ கனிவுடன் பேசுபவர்களுக்கு தனி மதிப்பு கிடைக்கும். இதற்கு முதலில் கூச்சத்தை விட்டொழிக்க வேண்டும். புதிய மனிதர்களை சந்திப்பதாக இருந்தால், நான் இங்கு உங்களை அடிக்கடி பார்க்கிறேனே, என் பெயர்... என்று அறிமுகத்துடன் பேச்சைத் தொடங்கலாம். உங்களை சந்தித்ததில் பெருமிதம் கொள்கிறேன், இன்று என்ன சிறப்பு? என்று ஆரம்பிக்கலாம். அலுவலகத்தில் பேசத்தொடங்கும் போது, நீங்கள் எந்தப் பிரிவில் வேலை செய்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள், பயண நேரம் எவ்வளவு? என்று பேச்சுக் கொடுக்கலாம்.


குழுவாக இருக்கும்போது கூச்சப்பட்டு எதுவுமே பேசாமல் இருக்கக்கூடாது. சாதாரணமாக இருந்தாலும் ஒரு சில கேள்விகளை கேட்கலாம். அது மற்றவர்கள் உங்களை கவனிக்க வைக்கும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். அதுபோல உங்களிடம் யாராவது பேச்சுக் கொடுத்தாலும், `ஒன்றுமில்லை' என்று ஒரு வார்த்தையில் பேச்சை முடித்துக் கொள்ளாதீர்கள்.


புதியவர்களுடன் பழக ஆரம்பிக்கும்போது நம்பிக்கை இல்லா தன்மையுடன், அல்லது வேண்டா வெறுப்பாக பேசுவதாக எண்ணிக் கொண்டு சிடுசிடுப்பாகவும், சில விஷயங்களில் பிடிவாதமும் காட்டுவது உங்களைப் பற்றிய தவறான தோற்றத்தை உருவாக்கி விடக்கூடும். அது பின்னால் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம். மென்மையாகப் பேசுங்கள். நான் சொல்வது உண்மை என்று நம்ப வைக்கும் முயற்சியில் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கொண்டு இருக்காதீர்கள்.


உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்ளாமலும், நீண்ட லெக்சரும் கொடுக்காமல் சுருக்கமாக தெளிவாக சொல்லுங்கள். அதாவது ஒருவர் உங்களிடம் `உங்கள் பொழுதுபோக்கு என்ன?' என்று கேட்டால், `நான் புத்தகங்கள் படிப்பேன்' என்று முடித்து விடாதீர்கள். `நான் புத்தகங்களை விரும்பி படிப்பேன். நாவல்கள், கவிதைகள், தலைவர்களின் சுயவரலாறுகளை எனக்கு மிகவும் பிடிக்கும்` என்று சொல்லுங்கள்.


அப்படி இருந்தால் தான் அவர் நீங்கள் தாகூரின் கவிதைகளை வாசித்திருக்கிறீர்களா, பாரதியின் கவிதைகளை படித்திருக்கிறீர்களா? என்பதுபோல தொடரவும், அவரும் உங்களைப் போன்ற விருப்பம் உடையவராக இருந்தால் உங்களுக்கிடையே நெருங்கிய நட்பு மலரவும் உறுதுணையாக இருக்கும்.


நிகோலஸ் போத்மேன் என்பவர் தன் நூலில், மக்களில் 90 சதவீதத்தினர் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்பதில்லை. ஆனால் அவர்கள் செய்வதையும், எப்போது என்ன செய்வார்கள் என்பதையும் கவனிக்கிறார்கள்' என்கிறார். எனவே ஒருவரது உடல் அசைவுகளும், செய்கைகளும் பேச்சுத் திறமைக்கு மிக முக்கியமானது. நீங்கள் கருத்துச் செறிவுடன் பேசும்போது அங்க அசைவிலும் கவனம் செலுத்துங்கள்.


ஒருவருடன் பேசும்போது அவருக்கு பக்கவாட்டில் நின்றோ அமர்ந்தோ பேசுவதை தவிர்த்து விடுங்கள். நேருக்கு நேராக இருந்து கண்களைப் பார்த்தபடி பேசுங்கள். அப்போதுதான் உங்கள் பேச்சின் பிரதிபலனை உணர முடியும்.


பேச்சினை எப்போது நிறுத்த வேண்டும் என்பதுவும் பேச்சுத்திறமையில் குறிப்பிடத்தக்க விஷயம். வளவளவென்று பேசிக் கொண்டிருந்தால் கேட்பவருக்கு சலிப்பு வந்துவிடும். கேட்டுக் கொண்டிருப்பவர் உங்கள் பேச்சை விரும்புகிறாரா என்பதை சில விஷயங்களை வைத்து கணித்து விடலாம். `ஓ அப்படியா, நன்றாக இருக்கிறது? தொடர்ந்து சொல்லுங்கள்' என்றால் அவர் விருப்பத்துடன் கேட்கிறார் என்று பொருள். சரி..., அப்படியா..., சரி வேற... என்று கூறினால் அவருக்கு உங்கள் பேச்சில் விருப்பமில்லை என்று அர்த்தம்.


அவர் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு இருப்பதும், கை, மூக்கு, தலையை சொரிந்து கொண்டு இருந்தாலும், நடக்கும்போது கால்களை தரையில் உரசியபடி நடந்து வந்தாலும் உங்கள் பேச்சில் நாட்டமில்லை என்று பொருள்.


எனவே கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!

ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்.....??




பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம்
.

பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில் செந்நிறமுடையதாக இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம்.


தரைப் பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ் சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும்.


இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.


ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது.


இந்தக் கீரையில் வைட்டமின் A B C சத்துகள் உள்ளன. சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்து, இரும்புச் சத்து அடங்கியது. இது தாதுவைக் கெட்டிப்படுத்தும். மூளைக்கு சக்தி கொடுக்கும். உடல் வறட்சியை அகற்றும். உள் சூட்டைப் போக்கும். மருத்துவக் குணங்கள் இதில் மிக அதிகமாக உள்ளன. பச்சையம் கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.


பசலைக் கீரை ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.


இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறைத் தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.


ஒரு கப் பசலைக் கீரையில் இருக்கும் உணவுச் சத்து: கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லி கிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.


இலையை நன்றாக அரைத்து கொப்புளம், கழலை, வீக்கம் ஆகியவற்றின் மீது பற்றிட்டால் அவை குணமாகும். இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி நீங்கும். பசலைக் கீரை ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்!