Search This Blog

Monday 23 September 2013

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை!


                                                          

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்ட தொடக்க விழாவில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா குட்டிக்கதை சொன்னார்.


வந்தாரை வாழவைக்கும் பூமி...


வந்தாரை வாழவைக்கும் பூமி தமிழ்நாடு. இன்று கூட, பல்வேறு மொழி பேசும் நடிகர், நடிகையர், பின்னணிப்பாடகர்கள், இசையமைப்பாளர்கள், தமிழ்த்திரைப்படத்துறையில் முன்னணியில் இருக்கிறார்கள். தானும் வாழவேண்டும், அடுத்தவர்களும் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழ் சினிமாத்துறை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை நான் சொல்லி, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.


இந்த உலகத்தில் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள் உண்டு. தானும் வாழ வேண்டும், அடுத்தவர்களும் வாழவேண்டும் என்று நினைக்கிறவர்களும் உண்டு. எப்படியாவது தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள், எப்போதும் அவர்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறவர்களை மட்டும் அல்லாமல், தனக்கு போட்டியாக இருப்பவர் என கருதப்படுபவரையும் அழித்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள்.


குட்டிக்கதை


ஓர் ஊரில் ஒரு மனிதர் இருந்தார். அவர் நிறைய பாவங்களை செய்ததால், நரகப்படுகுழி என்கிற கிணற்றில் விழுந்துவிட்டார். அந்த கிணற்றில், ஏற்கனவே பாவம் செய்தவர்கள் விழுந்து கிடந்தார்கள். உள்ளே ஏகப்பட்ட சத்தம். இப்பொழுது விழுந்த அந்த மனிதரின் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.


அந்த கிணற்றுக்கு பக்கத்தில் ஒரு மகான் இருந்தார். இந்த மனிதர் போடுகின்ற சத்தம் அதிகமாக கேட்டதும், கிணற்றை எட்டிப்பார்த்தார் அந்த மகான்.
மகானை பார்த்தவுடன், அந்த மனிதர், ‘‘சுவாமி! என்னைக்காப்பாற்றுங்கள்’’ என்று கத்தினார்.


அந்த மனிதரைப்பார்த்ததும், மனித சமுதாயத்திற்கு அந்த மனிதர், என்னென்ன கெடுதல் செய்திருக்கிறார் என்ற விவரம் மகானின் கண் முன்னே தெரிந்தது. இருந்தாலும், அந்த மனிதரை காப்பாற்ற ஏதாவது வழி உண்டா என்று யோசித்தார். ஏதாவது ஒரு நல்லகாரியத்தை அந்த மனிதர், தனது வாழ்நாளில் செய்திருக்கிறாரா என்று பார்த்தார்.


ஒரு சமயம், அந்த மனிதர் தன் காலடியில் மிதிபட இருந்த சிலந்தியை, தன்னை அறியாமல், மிதிக்காமல் தாண்டி போயிருந்தது தெரியவந்தது. இந்த செயலுக்காக, அந்த மனிதரை கரையேற்ற முடியுமா என்று சிந்தித்தார். உடனடியாக, அவர் கையில் சிலந்தி ஒன்று வந்து நின்றது. அதனிடமிருந்து, நூலிழை வெளிவர ஆரம்பித்தது. அந்த நூல் இழை, கிணற்றின் ஆழம் வரைக்கும் நீண்டு கொண்டே போயிற்று.


உடனே அந்த மகான், கிணற்றில் இருந்த மனிதரைப்பார்த்து, ‘‘இந்த நூலை பிடித்துக்கொண்டு மேலே ஏறி வா’’ என்றார்.


சிலந்தி நூல்


இதற்கு அந்த மனிதர், ‘‘சிலந்தி நூல், என்னைத்தாங்குமா?’’ என்று கேட்டார்.
‘‘எல்லாம் தாங்கும். அதைப்பிடித்து வா’’ என்றார் மகான்.


சந்தேகத்துடனேயே அந்த நூலிழையை பிடித்து இழுத்துப்பார்த்தார் அந்த மனிதர். நூலிழை வலுவாக இருந்தது.


எனவே, அதைப்பிடித்துக்கொண்டு மெதுவாக ஏறி வர ஆரம்பித்தார். பாதி தூரம் வந்தவுடன், அந்த மனிதரின் காலுக்கு கீழே கொஞ்சம் சத்தம் கேட்டது. கீழே குனிந்து பார்த்தார் அந்த மனிதர். வேறு சிலரும், அந்த நூலிழையை பிடித்துக்கொண்டு மேலே வந்து கொண்டிருந்தார்கள்.


உடனே அந்த மனிதருக்கு கோபம் வந்தது. தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, தன் காலுக்கு கீழே உள்ள நூலிழையை வெட்டிவிட்டார். இனிமேல், தான் மட்டும் மேலே ஏறிவிடலாம் என்று நினைத்தார் அந்த மனிதர்.


ஆனால் நடந்தது என்ன தெரியுமா?


மொத்த நூலிழையும் அறுந்து விழுந்தது. அந்த மனிதரும் பொத்தென்று கீழே விழுந்துவிட்டார். மறுபடியும் கத்த ஆரம்பித்தார். ஏற்கனவே தன்னை அறியாமல், அந்த மனிதர் செய்த ஒரு நற்செயல், அந்த நூலிழைக்கு உறுதியை கொடுத்தது. இப்போது அவர் செய்த பாவம் அந்த நூலிழையை வலுவிழக்க செய்துவிட்டது.


அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணம் அந்த மனிதருக்கு இருந்திருந்தால், அந்த மனிதர் கரையேறியிருப்பார். ஆனால், அவர் அதை செய்யவில்லை. எனவே அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டார் அந்த மனிதர்.


அரசு உதவும்


திரைப்படத்துறையால், தானும், தன் குடும்பமும் மட்டும் செழிப்படைய வேண்டும் என்று நினைத்தவர்கள் இந்த நிலைமையில் தான் இன்று இருக்கிறார்கள். திரைப்படம் என்பது, பல்வேறு கலைஞர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் ஒரு கருவி என்றாலும், நல்ல கருத்துகளையும், முற்போக்கு சிந்தனைகளையும், எண்ணங்களையும், இளைய சமுதாயத்தினரிடம் எடுத்துச்செல்லும் வகையிலும்;
சாதி மற்றும் மத ரீதியிலான வகையில், பிறர் மனம் புண்படாமல் இருக்கும் வகையிலும்; வன்முறை மற்றும் ஆபாச காட்சிகளை தவிர்த்தும் படங்களை எடுக்கவேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களை இந்த தருணத்தில் அன்போடு கேட்டுக்கொள்வதுடன், திரைப்படத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது தலைமையிலான அரசு நல்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா குட்டிக்கதை கூறினார்.


தலைமைச்செயலாளர்


முன்னதாக தமிழக தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆற்றிய வாழ்த்துரை வருமாறு:–


திரைப்படங்கள் வெறும் பொழுது போக்குக்காக மட்டுமல்ல சமுதாயத்தை மாற்றும் சக்தியாகவும் உள்ளது. இந்திய திரைப்பட வரலாற்றில் தென்னிந்திய திரைப்படங்கள் குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. திரைப்பட உலகம் பற்றி முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறும்போது, ‘திரையுலகம் எனது தாய்வீடு’ என்று பெருமையோடு குறிப்பிட்டுள்ளார். எனவேதான் இந்திய திரையுலகத்தின் இந்த கோலாகல நூற்றாண்டு விழாவுக்காக தானே முன்வந்து பல உதவிகளை வழங்கியுள்ளார்.


அவர் தனது அயராத உழைப்பால், அனைத்துத்துறைகளிலும் தமிழகம் முதல் மாநிலமாக திகழும் நிலையை உருவாக்கி வருகிறார். சிறந்த திரைப்படங்களுக்கான மானியம் வழங்குதல், புதிய விருதுகளை உருவாக்குதல், சினிமாவின் திருட்டு சி.டி. குற்றத்தை ஒழித்தல் போன்ற பல எண்ணற்ற திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார்.


திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அவர் இருப்பதால், சினிமா துறையினர் அவருக்கு நன்றிகடன் பட்டவர்களாக இருக்கிறார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும் திரைப்படத்துறையில் இருந்து வந்தவர் என்பதால், அந்தத்துறையை சேர்ந்தவர்கள் மீது தனி அன்பும், பாசமும் கொண்டுள்ளார்.


என்றென்றும் புகழ்ந்து பேசப்படும் இந்த விழாவில் வாழ்த்துரை வழங்குவதற்கு எனக்கு வாய்ப்பு அளித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
 

முத்துவீரப்பநாயக்கன் சத்திரம் வீரப்பன்சத்திரமாக மாறியது எப்படி?



 கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்ததில் விஜய நகர பேரரசு வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பரவியிருந்தது. கிருஷ்ண தேவராயர் தனது ஆட்சி காலத்தில் தனது பகுதிகளை ஆறு ராஜ்ஜியங்களாக பிரித்து அந்த பகுதிகளை ஆட்சி செய்ய 6 பிரதிநிதிகளை நியமித்தார். மதுரை ராஜ்ஜியத்திற்கு நாகமநாயக்கரை நியமித்தார். நாகமநாயக்கர் விஜய நகர பேரரசிற்கு உரிய வரிப்பணத்தை செலுத்தாமலும், ஆணைக்கு கட்டுப்படாமலும் இருந்துள்ளார்.


இதையடுத்து நாகமநாயக்கரின் மகன் விசுவநாத நாயக்கர் மதுரைக்கு படை எடுத்து சென்று தனது தந்தையை வென்று அவரை விஜய நகரத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து விசுவநாத நாயக்கரை மதுரை நகர பிரதிநிதியாக கிருஷ்ணதேவராயர் நியமித்தார். 1529ம்ஆண்டு முதல் 1682ம் ஆண்டு வரை 8 நாயக்கர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் ஆட்சி காலத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகள் நாயக்கர்களின் ஆளுகையின்கீழ் இருந்து வந்தது.



நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகளில் ஈரோடு, விஜயமங்கலம், நாயக்கன்கோட்டை, சத்தியமங்கலம், அந்தியூர், குன்னத்தூர், பெருந்துறை, கோசனம், கொளாநல்லி, பாலத்தொழுவு போன்ற இடங்களில் கோட்டைகள் இருந்தது. நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் 1609ம்ஆண்டு முதல் 1659ம்ஆண்டு வரை முதலாம் முத்துவீரப்பநாயக்கர் ஆட்சி செய்து வந்தார்.



இவரது ஆட்சி காலத்தில் நிறைய சத்திரங்களை கட்டி வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்கி வந்தார். இவர்கள் தங்கி செல்ல சத்திரமும், குளங்களையும் அமைத்து கொடுத்தார். ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தனது படைகள் தங்குவதற்கும், வழிபோக்கர்களுக்காகவும் சத்திரங்களை கட்டினார். மேலும் ஒரு குளத்தையும் அமைத்து கொடுத்தார்.



அவர் ஆட்சி செய்த காலக்கட்டத்தில் வீரப்பன்சத்திரம் முத்துவீரப்பநாயக்கன் சத்திரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. நாளடைவில் முத்துவீரப்பநாயக்கன் சத்திரம் வீரப்பன்சத்திரமாக பெயர் மாறியது. நாயக்கர்கள் அமைத்து கொடுத்த சத்திரங்கள் நாளடைவில் அழிந்து போனது. நாயக்கர்கள் ஆட்சி செய்ததற்கு அடையாளமாக இன்றும் வீரப்பன்சத்திரத்தில் தெப்பக்குளம் என்று அழைக்கப்படும் குளம் சாட்சியாக உள்ளது.

மைக்ரோசாப்ட் Surface 2 டேப்லெட் இன்று வெளியீடு!





மைக்ரோசாப்ட் நிறுவனம் டேப்லெடின் அடுத்த படைப்பான Surface 2 மற்றும் Surface Pro 2 இன்று நியூயார்க் நகரத்தில் வெளியிடப்படுகிறது. Surface 2 பார்க்கவும் மற்றும் பணிபுரிவதும் கிட்டத்தட்ட அதன் முந்தைய படைப்புகளை போலவே இருக்கும், ஆனால் இதில் வேகமான TEGRO 4 செயலி(processor) மற்றும் 1080p திரை அம்சங்களை கொண்டுள்ளது.


மைக்ரோசாப்ட் Surface RT மற்றும் Surface Pro tablets புதுப்பிக்கப்பட்டு Surface 2 மற்றும் Surface Pro 2 வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்த இரண்டு புதிய சாதனங்களையும் அனுசரிக்கக்கூடிய இரண்டு-கட்ட கிக்ஸ்டேன்ட்(two-stage kickstand), மற்றும் மேம்படுத்தப்பட்ட விவரக்கூற்றுகள் (updated specifications) இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள Surface சாதனங்கள் பணிபுரிவது போலவே இருக்கும், மேலும் அது கூட புதிய அக்சசரி பாகங்கள்(accessories) உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஒரு புதிய பவர் கவர்(Power Cover) கொண்டு பேட்டரி ஆயுளை அதிகரிக்க முடியும், மற்றும் மைக்ரோசாப்ட் இறுதியாக Surface Docking Station வெளியிடும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : இனிப்பு சீடை (கோகுலாஷ்டமிக்கு)





சிலபேர் வீட்டுச் சமையல் மிகவும் மணமாகவும் பார்க்கும்போதே பசியைத் தூண்டும் வகையிலும் சுவைத்தால், மீண்டும் சுவைக்கும் ஏக்கத்தை வளர்ப்பதாகவும் பலநாட்கள் அந்த மணம், குணம், சுவையை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையிலும் அமைந்திருக்கும். சில ஓட்டல்களிலும் இதே போன்ற உணர்வினை அங்கே கிடைக்கும் உணவுப் பொருட்கள் தரும். ஆனால், ஓட்டல்களில் அவை வியாபார நோக்கத்தோடு தயாரிக்கப்படுபவை. வீடுகளில் தயாரிக்கப்படுபவை நம் பெண்களின் உள்ளன்போடு உருவானவை. தான் சமைக்கும் இந்தப் பொருட்கள் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் இதைச் சாப்பிட வரும் விருந்தினருக்கும் எந்தக் கெடுதலையும் உண்டாக்காதபடியும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கும்படியும் அமையவேண்டுமே என்ற அக்கறை மணம் நிறைந்திருக்கும்.


இதைத்தான் ‘கை மணம்’ என்கிறார்கள். சில வீடுகளில் சில சமயங்களில் பாராட்டும்படியாகவும் சில சமயங்களில் முகம் சுளிக்கவைக்கும்படியாகவும் உணவுப் பொருட்கள் அமைவது அவற்றைத் தயாரிக்கும் பெண்களின் உள் உணர்வுகளைப் பொறுத்திருக்கிறது என்றே சொல்லலாம். சமைக்கும்போது நம் நினைவுகள் பலவாறாக அலைமோதும். அப்படி விடாமல், ஆன்மிக நெறியோடு தயாரிப்போமானால், என்றென்றுமே அவை மணம், நிறம், குணம், சுவை ஆகியவற்றை நிறைவாகக் கொண்டிருக்கும். ஏதேனும் ஸ்லோகத்தை உச்சரித்துக்கொண்டே அல்லது மனதில் பாடிக்கொண்டே சில பெண்கள் இப்படித் தயாரிக்கும் உணவுப் பொருட்களில் இந்த உயர்வான வித்தியாசத்தைக் காணலாம்.

சந்திரலேகா ராமமூர்த்தி

இனிப்பு சீடை (கோகுலாஷ்டமிக்கு)

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 2 கப், ரவை - அரை கப்,  உளுந்து மாவு - அரை கப், வெல்லத்தூள் - 1 ஒரு கப், ஏலக்காய் தூள் - சிறிது, எண்ணெய் - தேவைக்கேற்ப, கெட்டியான தேங்காய்ப்பால் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?  

உளுந்தை சிவக்க வறுத்து பொடித்து நன்கு சலித்துக் கொள்ளவும். ஏலக்காய் தூள் சேர்த்து வெல்லத்தை உருக்கி வடித்து, தேங்காய்ப்பால் சேர்த்து வைத்துக் கொள்ளவும். இப்போது வெல்லத்துடன் வறுத்த ரவை, அரிசிமாவு, உளுத்தம் மாவு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொண்டு, ஒரு துணி கொண்டு சிறிது நேரம் மூடி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு தட்டில் எண்ணெய் தடவி பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

அமாவாசையில் குழந்தை பிறக்கக்கூடாது என கூறுவது ஏன்?




திங்கட்கிழமையன்று வரும் அமாவாசை நாளில் புத்திர பாக்யம் வேண்டுபவர்கள் காலை 6 லிருந்து 11 மணிக்குள் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட  வேண்டும். தெய்வங்களை வழிபட உகந்தது என அமாவாசையை சாஸ்திரம் கூறுகிறது. 


நல்லடக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் பித்ருக்களுக்கும் தர்ப்பணம், திதி கொடுப்பதை இந்த நாளில்தான் செய்ய வேண்டும். அமாவாசையில் பிறந்த குழந்தைக்கு சாந்தி செய்ய வேண்டும். 



இல்லையெனில் வாழ்வினில் தவறான வழியை அந்தக் குழந்தை பின்பற்றக்கூடும் என ‘சாந்தி குஸுமாகரம்’ என்ற நூல் கூறுகின்றது. 


பிறப்பதை நாம் தடுக்க முடியாதே! ஆனால், பரிகாரம் செய்து நல்வாழ்வு வாழ முடியுமே! நாம் அனுபவிக்கும் சுகத்தில் சாஸ்திர விரோதமான காரியங்களை விலக்க வேண்டும் என ஆதிசங்கரர் கூறியுள்ளார்.

இறைவனை வழிபட என்ன வழிகள்?



ஒருவனால் நாள் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட முடியாது. பணிபுரியும் நேரத்திலும் பக்தி உணர்வுடன் செயல்பட்டால் மனம் தூய்மை பெறும். 


உயிர்களில் ஏதாவது ஒன்றுக்காவது மகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமானால், வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று பொருள். குணத்தையோ, குற்றத்தையோ எங்கு விவாதித்தாலும் அங்கே இருக்கும் ஒவ்வொருவருக்கும் அதில் சிறிதளவாவது பங்கு வந்து சேர்ந்துவிடும். 


எதையாவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டால், தனியான இடத்தில் தங்கிக் கண்ணீர் மல்க, இறைவனை வேண்டுங்கள், அவன் உங்கள் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான். 


இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை, இறைவனை மட்டும் நேசிப்பவன் புண்ணியவனாகிறான். உலகம் முழுவதும் பரந்து நிற்கும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள், அவன் தனது கருணையை உங்கள் மீது பொழிவான். 

காலத்தால் செய்த உதவி -நீதிக்கதை.


 
 
பிரதீப் நன்கு படிக்கும் மாணவன்.அவனது லட்சியமே நன்கு படித்து டாக்டராக ஆகி ஏழைகளுக்கு இலவச வைத்தியம் பார்க்க வேண்டும் என்பதே.


ஆனால் அவனது குடும்பத்தில் அவன் உடன் பிறந்தவர்கள் ஐந்துபேர்.ஆகவே அவனுக்குத் தேவையானதைத் தரக்கூட அவனது பெற்றோர்களால் முடியவில்லை.


இந்நிலையில் ஒருநாள் சரியான சாப்பாடுக் கூட சாப்பிடாது..பள்ளி பரீட்சைக்குக் கிளம்பினான் அவன்.


வெளியே நல்ல வெயில்..பசி வேறு வயிற்றைக் கிள்ள..தெரு ஓரம் மயங்கி விழுந்தான்.


தெருவில் வந்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருத்தி அதைப் பார்த்தார்.உடன்..தன் கையில் வாங்கி வந்துக் கொண்டிருந்த பாலை ஒரு தம்ளரில் ஊற்றி அவனுக்கு அளித்தாள்.அதைப் பருகிய பிரதீப் பின் தெம்புடன் தேர்வுக்குச் சென்றான்.


காலம் ஓடியது..


அந்த மூதாட்டி நோய் வாய் பட்டாள்.ஒரு மருத்துவமனையில் அண்டை வீட்டார் அவளைச் சேர்த்தனர்.அவளுக்கு நல்ல சிகிச்சைக் கொடுக்கப் பட்டது.உடல் நன்கு தேறியது..பின்னரே அவளுக்கு மருத்துவ மனைக்கான செலவை எப்படிக் கொடுப்பது என்ற எண்ணம் வந்தது.


அவளை வீட்டிற்குப் போகலாம் என்ற மருத்துவர் ஒருவர் கட்டணத்திற்கான பில்லைக் கொடுத்தார்.அதில் கட்டணம் ஒரு தம்ளர் பால்..அதுவும் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு விட்டது என்றிருந்தது.


புரியாத மூதாட்டி..அந்த மருத்துவரைப் பார்த்தாள்.அவர் "அம்மா..நான் யார் என்று தெரியவில்லையா...நான் தான் அன்று ஒருநாள் பரீட்சைக்குப் போனபோது மயங்கி விழுந்து..உங்களால் பாலை வாங்கி அருந்தி புத்துயிர் பெற்று பரீட்சைக்கு சென்ற மாணவன்.அன்று உங்கள் உதவி எனக்கு மிகவும் பெரிதாய் இருந்தது' என்றார்.


காலத்தால் செய்த உதவி சிறிதாய் இருந்தாலும்..அதைப் பெரிதாக நினைத்து மறக்கக் கூடாது.
 

தமிழ் மொழியில் இயங்கும் Galaxy Note 3!


சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்சை இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நேற்று வெளியிட்டுள்ளது.


இந்த கேலக்ஸி நோட் 3 யை தமிழ் மொழியிலும் இயக்கலாம். இதன் முக்கிய சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.


சாம்சங் கேலக்ஸி நோட் 3யின் விலை ரூ. 49,990 ஆகும். கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 22,990 ஆகும்.


5.7இன்ஞ் 1080p சூப்பர் அமோலெட் பேனல் கொண்ட கேலக்ஸி நோட் 3, 1.9GHZ எக்ஸ்னோஸ் ஆக்டா கோர் பிரசாஸர் உடன் வந்துள்ளது.


13 மெகாபிக்சல் கமெரா, 2 மெகாபிக்சல் Front கமெரா உள்ளன. ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கேலக்ஸி நோட்3யில் 3ஜிபி ராம் உள்ளது.


கேலக்ஸி நோட்3யில் 4k வீடியோக்களை படம்பிடிக்கலாம். இது 32ஜிபி மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மெமரியுடன் கிடைக்கிறது.




IR LED, WiFi 802.11a/b/g/n/ac, MHL 2.0, புளுடூத் 4.0, 3,200mAh பேட்டரி, LTE Cat4 support apart DC-HSPA+ 42Mbps GSM / EDGE ஆகிய சிறப்புகள் இதில் உள்ளன.


கேலக்ஸி நோட்3 லெதர் பினிஷிங்குடன் அழகிய வடிவில் வந்துள்ளது. இதன் கவர்கள் கண்களை கவரும் வகையில் 10 வண்ணங்களில் உள்ளன.




கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்சில் 320*320 பிக்சல்ஸ் ரெசலூஸன் கொண்ட 1.63 இன்ஞ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே உள்ளது.


800MHZ பிராசஸர், 512எம்பி ராம், 4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ளன.


கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் 1.9 மெகாபிக்சல் கமெரா மற்றும் 315mAh பேட்டரி கொண்டுள்ளது.


உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள ரப்பர் வாரை பல வண்ணங்களில் மாற்றிக்கொள்ளலாம்.


இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள சிறப்பான விஷியம், சாம்சங் நிறுவனம் 70க்கும் அதிகமான அப்பிளிகேஷன் தயாரிப்பவர்களுடன் இணைந்து நிறைய அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யும் வகையில் ஸ்மார்ட்வாட்ச்சை உருவாக்கியுள்ளது.


சாம்சங் கேலக்ஸி நோட் 10.1 ஒக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

வேகம் கூடிய இணைய உலாவி வெளியிட்டது மைக்ரோசொப் ( IE 11 )!


                                            
                                                     

இயங்குதள உற்பத்தியில் முன்னணியில் திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய உலாவியே Microsoft Internet Explorer ஆகும்.


உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இணைய உலாவிகளில் ஒன்றான இதன் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


Microsoft Internet Explorer 11 எனும் இப்பதிப்பானது முன்னைய பதிப்புக்களை விடவும் 30 சதவிகிதம் வேகம் கூடியதாகக் காணப்படுகின்றது.
எனினும் இந்த உலாவியானது விண்டோஸ் 7 இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடியவாறே வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

HP அறிமுகப்படுத்தும் புதிய மடிக்கணனி!



கணனி உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் HP நிறுவனமானது தற்போது Spectre 13 Ultrabook எனும் புதிய மடிக்கணனியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

15 மில்லி மீற்றர்கள் தடிப்புடைய இக்கணினி யானது 13.3 அங்குல IPS தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது.
மேலும் இவற்றில் Core i7 Processor பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதான நினைவகமாக 8 GB RAM காணப்படுகின்றது. 


Windows 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கணனிகளில் சேமிப்பு நினைவகமாக 256 GB தரப்பட்டுள்ளது.
இவற்றின் விலையானது 999.99 டொலர்களாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தீக்காயங்களினால் ஏற்படும் தழும்புகளை நீக்க!



உடல் அழகைக் கெடுப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும்.


இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய பெண்கள் வேலை செய்யும் போது இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள்.


அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள். இத்தகைய தழும்புகளை நன்கு தெளிவாக தெரியும்.


இதனை போக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும் அதைப் பயன்படுத்தினால் எந்த ஒரு பலனும் இருக்காது.


ஆனால் அத்தகைய தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம்.


அதற்கான சில வழிமுறைகளை காண்போம்.


* சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது.
அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.


* தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால் நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.


* கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.


* பாலில் உள்ள சத்துக்களை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெனில் அந்த அளவு அதில் நன்மையானது பாக்கெட் பாக்கெட்டாக உள்ளது.


எனவே தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.


* ஆலிவ் ஆயில் பல நன்மைகளை உள்ளடக்கியது. அத்தகைய ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது.

எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால, ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறைய வைக்கும்.


* தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால் அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி தழும்புகளை மறைய வைக்கும்.


அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டியோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.


* டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ஃப்ளேவரில் விற்கப்படும் டீயை போட்டப் பின்பு அதன் இலைகளை தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.

டோனியின் புதிய ‘ஹேர் ஸ்டைல்’





 


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் டோனி நேற்றைய போட்டியின் போது வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அவர் இந்திய அணியில் இடம்பெறும் போது நீண்ட தலைமுடியுடன் இருந்தார். இந்த நீண்ட ஹேர் ஸ்டைல் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பையும் கவர்ந்தது. இந்தியா உலக கோப்பையை வென்ற பிறகு டோனி மொட்டை தலையுடன் காட்சி அளித்தார். தற்போது அவர் வெளிநாட்டு பாணியில் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். காதுக்கு மேல் இருபக்கமும் மழித்துவிட்டு நடுவில் மட்டும் கொத்தாக முடி வைத்துள்ளார். நேற்றைய போட்டியில் அவ்வப்போது ஹெல்மெட்டை கழற்றும்போது இந்த புதிய ஹேர் ஸ்டைல் தென்பட்டது.

தெய்வீக திருவண்ணாமலை! சுற்றுலாத்தலம்!


 தெய்வீக திருவண்ணாமலை
திருவண்ணாமலை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலைநகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.
ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோவில்.
திருவண்ணாமலையில் இருக்கும் ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோவில். மற்ற இடங்களில் நாம் மலைமேல் சுவாமி இருப்பதாக கேள்வி பட்டிருப்போம், ஆனால் இங்கு மலையே சுவாமியாக இருப்பது தான் விசேஷம். இந்த மலையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர்.  இந்த மலையானது கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், பின் கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளது. முக்தி தரும் இடமாக கருதப்படும் இடங்களில் இத்திருத்தலமும் ஒன்று.  திருவாரூரில் பிறக்க வேண்டும், காசியில் இறக்க வேண்டும், தில்லை சிதம்பரத்தை போய் பார்க்க வேண்டும், ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமிது.  இம்மலையில் சுற்றும் வழியில் அஷ்ட லிங்கங்கள் உள்ளது.  அவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம்.  இம்மலையை சுற்றி வந்தால் இறைவனை சுற்றுவதற்கு சமானம். அதுவும் பௌர்னமியன்று சுற்றினால் மிகவும் விசேஷம்.
இத்திருக்கோவிலில் ஆறு பிரகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பிராத்திலும் பல சந்நிதிகள் இருக்கிறது.  முதல் பிராகரத்தில் சுவாமி சந்நிதியுள்ளது.  மூன்றாவது சந்நிதியில் உண்ணாமலை அம்மன் சந்நிதி உள்ளது.  மற்ற பிராகரங்களில் வேணுகோபாலசுவாமி சந்நிதி, விநாயகர் சந்நிதி, முருகன் சந்நிதி, கால பைரவர் சந்நிதி, நவகிரக சந்நிதி,  வள்ளாள மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், அருணகிரினாதர் மண்டபம், பாதாள லிங்கம், ஆயிரங்கால் மண்டபம், மற்றும் பல சந்நிதிகள் உள்ளது.
இக்கோவிலின் ஸ்தல விருட்சம் மகிழ மரம்.  இந்த மரம் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.  குழந்தையில்லாதவர்கள் இந்த மரத்தில் சிறிய தொட்டில்கள் செய்து கட்டி வேண்டிக்கொள்வார்கள்.  குழந்தை பிறந்தவுடன் தொட்டில்களை நீக்கிவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு விட்டு செல்வார்கள்.
ஸ்தல வரலாறு  
ஒரு காலத்தில் பிரம்மாவிற்கும், விஷ்னுவிற்கும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை உண்டாயிற்று.  இதனால் இருவரும் சிவபெருமானை மத்யஸ்த்திற்கு அழைத்தார்கள்.  ஆகையால் சிவபெருமான் இவர்களின் உயர்வு தாழ்வு எண்ணத்தை போக்க ஒரு போட்டி வைத்தார்.  யார் முதலில் தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ பார்த்து சொன்னால் அவர் தான் சிறந்தவர் என்றார். பிறகு சிவன் ஜோதிமயமாக தன் உருவை மாற்றிக் கொண்டார். இதனால் விஷ்னு வராக அவாதாரம் எடுத்து அடியை காண பூமியை குடைந்து சென்றார். ஆனால் அவரால் முடியவில்லை.  தான் செய்தது தவறு என்று ஏற்றுக் கொண்டார்.  அதுபோல பிரம்மா அன்னப்பறவையாக மாறி முடியை தேடிச் சென்றார். இடையில் தாழம்பூ சிவனின் முடியிலிருந்து கீழே விழுவதை பார்த்துவிட்டு, சிவனின் முடியைக் காண இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று கேட்டார்.  அதற்கு தாழம்பூ தாம் பல்லாயிற வருஷ காலமாக கீழே விழுவதால் தனக்கு தெரியவில்லை என்றது. இதனால் பிரம்மா தாம் தோர்க்கக்கூடாது என்ற எண்ணத்தினால் தாழம்பூவை தாம் சிவனின் முடியை பார்த்ததாக பொய் சாட்சி கூற கூறினார்.  இதற்கு தாழம்பூவும் ஒத்துக்கொண்டது.  இதனால் கோவம் அடைந்த சிவபெருமான் பிரம்மாவிற்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவபூஜைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபித்தார்.  அப்படி ஜோதியாக சிவன் நின்ற அந்த இடம் தான் திருவண்ணாமலை ஸ்தலம்.
இந்திரலிங்கம்

கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது. சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.
அக்னிலிங்கம்
கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள். இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.
யமலிங்கம்.
கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பபடுகிறது.
நிருதி லிங்கம்
கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.
வருண லிங்கம்
கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.
வாயு லிங்கம்
கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையிறல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

குபேர லிங்கம்
கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.

ஈசானிய லிங்கம்
கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிருவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.

திருவிழாக்கள்
திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இதுதவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகை-யில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானாதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் அல்லது டிசம்பர்  மாதம் வரும்.
இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும். இந்த பத்தாம் நாளன்று, காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும்.[4] இந்த தீபமானது தொடர்ந்த்து பதினோறு நாட்கள் எரியக்கூடியது.
இத்திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர்.
மகான்கள்
இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்-வாழ்கின்றனர். பகவான் இரமண மகரிஷி இறக்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.மற்றும் விசிறி சாமியார் யோகிராம் சுரத்குமார்  ,சேஷாத்திரி மகரிஷி, குகை நமசிவாயர் சுவாமிகள் போன்ற எண்ணற்ற மகான்கள் வாழ்ந்த பூமி திருவண்ணாமலை.