Search This Blog

Thursday 12 December 2013

இத்தனை பெயர்களா?



அடிசில்,

அமலை,

அயினி,

உண்டி,

 உணா,

 ஊண்,

கூழ்,

சொன்றி,

 துற்றி,

பதம்,

பாளிதம்,

 புகா,

புழுக்கல்,

புற்கை,

பொம்மல்,

 மடை,

மிசை,

மிதவை,

மூரல்...

இவை எல்லாம் என்ன?

ரொம்ப யோசிக்காதீங்க நண்பர்களே...

நாம் தினமும் சாப்பிடும் 'சோறு’க்கான தமிழ்ப் பெயர்கள்தான் இவை.

ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்களைச் 'சொல்லாட்சி’ என்பர்.


 இத்தகைய சொல்லாட்சிச் சிறப்பு கொண்ட முதல் மொழி, நம் தமிழ் மொழிதான்.

ஐந்துக்கு முன் உள்ள ஐந்தினைப் பேணிக் கொள்ளுங்கள்.!




1) முதுமைக்கு முன் உள்ள வாலிபம்


2) வறுமைக்கு முன் உள்ள செல்வம்


3) நோய்க்கு முன் உள்ள ஆரோக்கியம்


4) வேலைக்கு முன் உள்ள ஓய்வு


5) மரணத்திற்கு முன் உள்ள வாழ்வு



எனவே மேலே கூறியது போன்று நோய்க்கு முன் உள்ள ஆரோக்கிய வாழ்வினைப் பெற்று அதனைத் தக்க வைத்துக் கொள்ள மரணத்திற்கு முன் உள்ள வாழ்வில் வேலைக்கு முன் உள்ள ஓய்வினை உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தாது நமக்கும், நம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், படைத்த இறைவனுக்கும் ஆற்ற வேண்டிய நற்செயல்களை கருத்தில் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சி செய்து நோயற்ற வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு உதவி செய்வானாக!


நாம் எதையும் மனம் வாக்குக் காயங்களாகிய திரிகரணங்களைக் கொண்டு அறிகிறோம். திரிகரணங்கள் சடப்பொருள்கள். சடப்பொருள்களைக் கொண்டு சடப்பொருள்களை யறியக்கூடுமேயன்றி சித்துப்பொருளாகிய கடவுளை யறிய முடியாது. திரிகரணங்களால் கடவுளை அறியக்கூடுமாயின் கடவுள் என்பது சடப்பொருள்களுள் ஒன்றாய்விடும். அன்றியும், கடவுள் என்னுஞ் சொல்லுக்குக் "கடந்துநிற்றலையுடையது" என்பது பொருள். எதைக் கடந்து நிற்றலையுடையதெனில் தத்துவங்களைக் கடந்து நிற்றலையுடைய தென்போம்.


எனவே, தத்துவாதீதமாயிருக்கும் பொருள் எதுவோ அது கடவுள் என்பது பெறப்பட்டது. மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றும் திரிகரணங்கள் என்ப்படும் தத்துவங்களாம். ஆதலினால் மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் அறியப்படாத பொருள் எதுவோ அது கடவுள் என்பது பெறப்பட்டது. அத்தகைய பொருளை நாத்திகர் காட்டச் சொல்வது அவர்கள் "மனம் வாக்குக் காயங்களால் அறியக் கூடாத பொருளை நாங்கள் எங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம்வாக்குக் காயங்களைக் கொண்டு காட்டுங்கள்" என்று கேட்பது போலாம். இக்கேள்வி மூடக்கேள்வியாகையால், அவ்வாறு கேட்கும் மூடர்களைத் தெருட்டுவது எவ்வாற்றானும் கூடாதென்பதை என்னியே நாம் முதலில் அவர்களுடன் உரையாடாமல் மெளனமாயிருப்பது.


இடுப்பு வலி குறைய:


சலபாசனம் என்ற யோகாசன முறை இதற்கு நல்ல தீர்வு. முதலில் கைகளை வயிற்றுப் பகுதிக்கு அடியில் வைத்து கைகளின் மேல் படுக்க வேண்டும். பிறகு கைகளை தரையில் அழுத்தி, சுவாசத்தை உள்ளே இழுத்து, இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். 20 நொடிகள் சுவாசத்தை அடக்கி வைத்துவிட்டு பின்பு வெளியேற்றி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியை செய்யும்போது அடி வயிற்றையும் முதுகுத் தண்டின் கீழ் பாகத்தையும் நினைக்க வேண்டும். சலபாசனம் இதயத்தையும் ஜீரண உறுப்புகளையும் பலப்படுத்துகிறது. மேலும் முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் அதிகரிக்கும்.

மெட்டி அணிவது ஏன்?




பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது.


கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.


அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்..


ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்.


பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும்.


இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.


 காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்

இன்சுலின் சுரக்க ‘வாழைப்பூ’!



வாழை முழுவதுமாக மனிதர்களுக்கு பயன்படக்கூடியது. வாழை யின் தண்டு, பூ, காய், பழம், இலை, நார், பட்டை எல்லாவற்றை யும் நாம் பயன்படுத்துகிறோம்.


பெரும்பாலானவற்றில் அதிக சத்து இருக்கிறது. வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம். மொந்தன் வாழைப்பூ, நாட்டு வாழைப்பூ, ரஸ்தாளி வாழைப்பூ ஆகியவை ரொம்பவும் துவர்க்காது.


அவை அதிக சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைக்கிறோம். வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம்.


வாழைப்பூவில் இருக்கும் மருந்துவ குணங்கள்:


 * வாழைப்பூ சாப்பிட்டால் கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.


 * பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.


 * உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும்.


 * மூலநோய் கட்டுக்குள் வரும்.


 * வாழைப்பூவில் உப்பு போட்டு அவித்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.


 * ஆண்களுக்கு தாது விருத்தி அடையும்.


 * மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது. வாழைப்பூவை வாழையில் இருந்து முறித்து எடுத்த இரண்டு நாட்களுக்குள் சாப்பிடவேண்டும்.

எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து!



 எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.


தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம்.


 இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.


வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.


 இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.


வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.

தழும்புகளை தலைமறைய செய்ய சூப்பர் டிப்ஸ்!




பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் இந்த தழும்புகள் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும்.


இந்த மாதிரியான தழும்புகள் நமது உடலின் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதால், அதனை போக்குவதற்கு கடைகளில் பல க்ரீம்கள், ஆயின்மெண்ட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. என்ன தான் விலை உயர்வான அந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், அது முற்றிலும் அந்த தழும்புகளை போக்காமல், சில சமயங்களில் அவை சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, வேறு வித சரும பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன.


எனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமல் எளிதில் தழும்புகளைப் போக்க, ஒரு சில இயற்கை பொருட்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம்.


எலுமிச்சை சாறு


எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.


பாதாம் எண்ணெய்


தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

கற்றாழை



கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

பால்


தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.


ஆலிவ் ஆயில்


ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.


தக்காளி சாறு



தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும்.

அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.

நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த இருவர் !


நான் சிறுவயது முதலே என் மனதில் ஏற்றிப்  போற்றும் நட்பிற்கு உதாரணமாக கூறப்படும்  இச்சங்ககால உண்மைக் கதையினை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமை அடைகிறேன். இவ்வுலகில் உண்மையான நட்பு இல்லை என்று நினைக்கும் சிலருக்காக இந்த கதையை இங்கே பிரசுரிக்கிறேன். இக்கதையில் வரும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதில்லை. ஆனாலும் தன் நண்பனின் நம்பிக்கை வீண்போகாமல் அவர்களின் நட்பின் பொருட்டு அவனோடு உயிர்துறந்த இந்நிகழ்ச்சியை இப்போது நினைத்தாலும் மயிர் கூச்செறிகிறது. அக்கதை இதோ...


கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்  நட்பு


     பாண்டிய நாட்டில்  உள்ளது  பிசிர்  என்ற  ஊர்.  ஆந்தையார்  என்பது  இவரது  இயற்பெயர்.  ஆதலால்  பிசிராந்தையார்  என்று  அழைக்கப்பெற்றார்.  இவர்  சோழ  மன்னன் கோப்பெருஞ்சோழன்  மீது  அன்பு  கொண்டு  அவனைப்  பற்றிய  பாடல்களைப்  பாடியுள்ளார்.  சோழனைக்  காணவேண்டும்  என்னும்  பேரவா  கொண்டிருந்தார்.  ஆனால்  பாண்டிய  நாட்டிலுள்ள  பிசிர்  வெகு  தொலைவு  உள்ளதால்  இவரால்  சோழ  நாட்டுக்குச்  செல்ல  இயலவில்லை.


     இவரது புகழையும்  தமிழையும்  கேள்விப்பட்ட  சோழனும்  இவரைக்  காணவேண்டும்  என்னும்  அவா  கொண்டிருந்தான்.  எனவே  இருவரும்  உயிர்  ஒன்றாகவும்  உடல்  வேறாகவும்  வாழ்ந்து  வந்தனர். இருவரும்  தாம் ஒருவருக்  கொருவர் சந்திக்கும்  திருநாளை  ஆவலுடன்  எதிர்  பார்த்துக்  கொண்டிருந்தனர்.


     கோப்பெருஞ்சோழனின்  தலைநகர்  உறையூர்.  இம்மன்னன்  பிசிராந்தையாரை  நேரில்  காணாமலேயே  அவருடன்  நட்புக் கொண்டவன்.  இவனது  ஆட்சி  நடந்துகொண்டிருக்கும்  போதே  இவனது  இரண்டு  புதல்வர்களும்  சோழ  ஆட்சிக்  கட்டில்  ஏறுவதற்காக  தந்தையுடன்  போரிடத்  துணிந்தனர்.


     இதை  அறிந்த  கோப்பெருஞ்சோழன்  ஆட்சியை  விட்டு  வடக்கிருந்து  உயிர்  விடத்  துணிந்தான்.  அப்போது  தன்  மந்திரியிடமும்   மற்றையோரிடமும்   பிசிராந்தையார்  என்னைக்  காண  வருவார்.  என்னுடன்  வடக்கிருப்பார்.  அவருக்கும்  ஓர்  இடத்தைத்  தயார்  செய்யுங்கள்  எனக்  கூறினார்.    அதேபோல்  பிசிராந்தையாருக்கும்  ஒரு  இடம்  அமைக்கப்பட்டது.  நாட்கள்  கடந்தன.  சோழன்    பிசிரந்தையாரைக்  காணாமலேயே  வடக்கிருக்கத்  துணிந்தான்.   எப்படியும்  ஆந்தையார்  வந்து  விடுவார்  எனக்  கூறித்  தன்  தவத்தை  மேற்கொண்டான்.  


(குறிப்பு: இவ்வுலக  வாழ்வைத்  துறக்க  விரும்பும்  மன்னவர்  வடக்கிருந்து  உயிர்  விடுதல்  அக்கால  மரபு.  வடக்கிருத்தல்  என்பது  தன்நாட்டில்  உள்ள  ஆறு  குளம்   போன்ற    நீர்  நிலைக்குச்  சென்று  அதன்  இடையே  மணல்  திட்டு  ஒன்றை    அமைத்து   வடக்கு  திசை  நோக்கி  அமர்ந்து  உண்ணாநோன்பிருந்து  உயிர்  விடுதல்.  தன்  மக்கள்  மீது  இருந்த   மனக்  கசப்பின்  காரணமாக  கோப்பெருஞ்சோழனும்   வடக்கிருந்தான்.)


     இதனைக்  கேள்விப்பட்டார்  பிசிராந்தையார்.  உடனே   சோழ  நாட்டை  நோக்கி  ஓடி  வந்தார்.


வழியில்  எதிர்ப் பட்டவர்  இவரைப்  பார்த்து  மிகவும்  ஆச்சரியப்  பட்டனர்."புலவரே!  நான்  என்  சிறுவயது  முதலே  தங்களைப்  பற்றி  என்  தந்தையார்   கூறக்  கேட்டிருக்கிறேன்.  தங்கள்  மிகவும்  வயதானவராக  இருப்பீர்கள்  என்று  எண்ணியிருந்தோம்.  தங்களோ  மிகவும்  இளமையாக  இருக்கின்றீர்களே, அது  எப்படி?"என்று  வியந்து  கேட்டனர்.  அதற்கு  மறுமொழியாக  ஆந்தையார்   ஒரு  பாடல்  பாடினார்.  புறநானூற்றில்  உள்ள  இப்பாடல்  நமது  வாழ்வியலுக்கு  மிகவும்  தேவையான  ஒன்று.


         " யாண்டு  பலவாக  நரையில வாகுதல்
          யாங்காகியர்  என வினவுதிராயின்,
           மாண்ட  என்  மனைவியொடு  மக்களும்  நிரம்பினர்
           யான்  கண்டனையர்  என்  இளையரும்   வேந்தனும்
          அல்லவை  செய்யான்   காக்கும்  அதன்  தலை
           ஆன்று  அவிந்து  அடங்கிய  கொள்கைச்
           சான்றோர்  பலர்  யான்  வாழும்  ஊரே."  


என்று  பாடிய  பாடல்  மூலம்  " வயோதிகரானாலும்  இளமையோடிருக்கும்  காரணத்தைக்  கேட்பீரானால்   சிறந்த  பண்புள்ள  மனைவி,  மக்கள்  குறிப்பறிந்து  பணி  செய்யும்  பணியாளர்கள்  அறத்தையே  நாடிச்  செய்யும்  மன்னன்  இத்துணை  பேருடன்  நன்கு  கற்று    நல்ல  பண்புகளுடன்  விளங்கும்  சான்றோர்  பலரும்  எம்மைச்  சூழ்ந்து  இருக்க  நான்  வாழ்வதால்  எனக்கு  நரை  தோன்றவில்லை.  மூப்பும்  எம்மை  அணுகவில்லை."   என்று  விளக்கினார்.
 

     சோழனின்  இறுதி  நேரம்  வந்துற்றபோது  பிசிராந்தையார்  ஓடிவந்தார்.  நண்பனைக்  கண்டார்  தனக்காகத்  தயாராக  அமைக்கப்பட்ட  இடத்தில்  வடக்கிருந்து  சோழனுடன்  தானும்   தன்  இன்னுயிர்  விடுத்தார்.


     இச்செய்தியை    இக்காட்சியைக்  கண்ட   பொத்தியார்  என்னும்  புலவர்   தன்  பாடலில்  இதனைக்  கூறுகிறார்.


      "இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக
       இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்
       வருவன்  என்ற  கோனது  பெருமையும்
       அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்
       வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே."


பிசிராந்தையார்  என்ற  புலவரும்  கோப்பெருஞ்சோழன்  என்ற  மன்னனும்  தம்முள்  காணாமலேயே  நட்புக்  கொண்டு  ஒன்றாக  உயிர்  நீத்த  இச்சிறப்பினை  இலக்கியங்கள்  நமக்கு  எடுத்து  இயம்புகின்றன.  இத்தகு  நண்பர்களை  நம்மால்  மறக்க  இயலுமா?

ஐஃபோன் & ஸ்மார்ட் ஃபோன் மூலம் அல்ட்ரா சவுண்ட்!




 மனிதர்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிப்பதில் மருத்துவ விஞ்ஞானம் மாபெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. மனித ஆரோக்கிய மேம்பாட்டிற்காக உலகளாவிய நிலையில் நாளுக்கு நாள் மருத்துவ விஞ்ஞானத்தில் நவீன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இன்னொருபுறத்தில் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், வேலை முரண்பாடுகள், அதிகரிக்கும் மன அழுத்தம் போன்றவைகளால் நோய்களும் வந்து கொண்டே இருக்கின்றன.


அந்த நோய்களை உடனடியாக கண்டுபிடித்து, அதன் பாதிப்பின் அளவை நுட்பமாக கண்டறிந்து, சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும் விதத்தில் தற்போது நவீன எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனிங் கருவிகள் உள்ளன. இதனை மனித குலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம்.


பெரும்பாலான நோய்களை கண்டறிவதற்காக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், மோமோகிராம், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன் போன்றவை பெருமளவு பயன்படுகின்றன. இவைகளில் சில எக்ஸ்ரே கதிர்களை அடிப்படையாகக் கொண்டவை. சில காந்தத் தன்மையை அடிப்படையாகக் கொண்டவை. ஒலி அலைகளை அடிப்படையாகக் கொண்டும் சில இயங்குகின்றன. இவைகளை தேவைக்கு தக்கபடி பயன்படுத்தி எல்லாவிதமான நோய்களையும் கண்டறிகிறோம்.


இந்நிலையில் கத்தாரில் நடைபெறும் குறைந்த விலை மருத்துவ சம்மிட்டில் நேற்றும் அமெரிக்காவின் பென்ஸில்வேனியா பல்கலைகழகமும், பால்டிமோர் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவகல்லூரி மாணவர்கள் சேர்ந்து சாதாரண ஐஃபோன் மற்றும் முக்கிய ஸ்மார்ட் ஃபோன் மூலம் ஒரு சாதனை படைத்து அசத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் உங்களின் ரத்த அழுத்தம் / ஹார்ட் ரேட் / இனிப்பு நீர் வியாதி / மற்றும் அல்ட்ரா சவுண்ட் எனப்படும் டெஸ்டிங் கூட எளிமையாய் நீங்கள் செய்து கொள்ள முடியும். அதிலும் இந்த டெக்னாலஜி வந்தால் தாய்மார்கள் எல்லோரும் தன் கர்ப்ப கால குழந்தையை ஒரு ரூபாய் செலவு இல்லாமல் வீட்டிலே தினமும் பார்த்து கொள்ள முடியும்.


இது பற்றி நான் மேலும் கூறுவதை விட மேலே உள்ள வீடியோ லிங்க்கை க்ளிக் பண்ணி பாருங்கள்.

உருளை கிழங்கின் மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!


உருளைக் கிழங்கைத் தோலுடன் சமைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்னைகள் தீரும். சருமம் பளபளப்பாகும்.


உருளைக்கிழங்கு, காரத்தன்மை நிறைந்த கிழங்கு. புளித்த ஏப்பம் பிரச்னையால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும்.


உருளை அற்புதமான சிறுநீர்ப்பெருக்கி


 காலையில் வெறும் வயிற்றில், உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து, சாறு எடுத்து சாப்பிட்டு வர, வயிற்றுப்புண் குணமாகும்.


வாரத்துக்கு 2,3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர, பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்.


நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும் இந்தக் கிழங்கு.


குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்புச் சக்தியும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.


உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும். தடமும் விரைவில் மறைந்துவிடும்.


குறிப்பு :


வாய்வு தொல்லை உள்ளவர்கள் இதய நோய் உள்ளவர்கள் உருளை கிழங்கை தவிர்ப்பது நல்லது சொல்லுகிறார்கள்

சடங்குகள் நியாயமானவை என்று நிரூபிக்க முடியாது - மகாத்மா காந்தியடிகள்!



யக்ஞம் என்பது அழகும் சக்தியும் நிறைந்த ஒரு சொல்லாகும். யக்ஞம் என்பதற்கு நேர் பொருள் வழிபாடு என்பதே. அதாவது தியாகம் என்பதுதான். எவ்விதத் தியாகமும், எவ்விதத் தொண்டும் யக்ஞம்தான். யக்ஞத்தினால் அதாவது யாகத்தினால் மனித வர்க்கமே வாழ்கின்றது.


ஹோமத் தீயில் நெய்யையும் மற்றப் பொருட்களையும் கொட்டுவதைக் காட்டிலும் யக்ஞத்திற்கு ஆழ்ந்த அர்த்தம் உண்டென்று உங்களுக்குக் கூற விரும்புகிறேன். மானிட வர்க்கத்திற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்வதே யக்ஞம் ஆகும். என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆஹீதிகளுக்கு குறிப்பான அர்த்தம் உண்டு. தூய்மைப்படுத்தும் அக்னியில் நமது பலவீனங்களையும், வெறிக்குணங்களையும், குறுகிய புத்தியையும் எரித்து நாம் நம்மைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். அப்போதுதான் நம் பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்ப்பார்.


சாஸ்திரங்களில் விவரங்களாக்கிய எல்லா யக்ஞங்களையும் மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. உயிர்ப்பிக்க வேண்டாம். அப்பெயரில் நடக்கும் சில சடங்குகள் நியாயமானவை என்று நிரூபிக்க முடியாது. இன்று அச்சடங்குகளில் சிலவற்றிற்குக் கூறப்படும் பொருள் வேதகாலத்தில் எப்போதாவது கூறப்பட்டதா என்பது எனக்குச் சந்தேகமாகவே உள்ளது. அவற்றில் சில பகுத்தறிவு அல்லது தர்மம் எனும் சோதனைக்கு முன் நிற்க முடியாது. இடம், காலம் எவையாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் சமயத்தின் கொள்கைகள் என்றென்றும் நிலைத்திருப்பவை. ஆனால் அவற்றை அடிப்படையாகக் கொண்ட வழக்கங்கள், இடம், காலம் இவற்றிற்குகந்தவாறு மாறுகின்றன.

                                                                                                  
                                                                           -மகாத்மா காந்தியடிகள்

பழந்தமிழர்களின் விநோத தண்டனைகள்!



சங்க காலத் தமிழகத்திலும் அதற்குப் பின்னரும் விநோதமான தண்டனைகள் வழக்கத்தில் இருந்தன. அரசன், போரில் வெற்றி பெற்றால் தோல்வியுற்ற மன்னர்களின் ஊரைத் தீக்கிரையாக்குவது, அவன் மனைவியரின் கூந்தலை அறுத்துக் கயிறு திரிப்பது, தோல்வியடைந்த மன்னரின் திருமுடிகளை அல்லது மகுடங்களை உருக்கிக் காலடியில் பலகையாகப் போடுவது, தோற்ற மன்னரின் அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கி அவ்விடத்தில் கழுதை பூட்டிய ஏரால் உழுவது, யவனர் போன்ற வெளிநாட்டினர் பிடிபட்டால் அவர்கள் தலையை மொட்டையடித்து நெய்யை ஊற்றி அவமதிப்பது, பெண்ணைத் திருமணம் செய்யவில்லை என்று பொய் சொன்னவனை மரத்தில் கட்டிச் சாம்பல் பூசுவது, மாற்று மன்னர்களின் குழந்தைகளை யானையின் காலால் இடறச் செய்து கொல்வது, ஒற்றர்களுக்கு மரண தண்டனை அளிப்பது, கொலைத் தண்டனை கிடைத்தோருக்குச் செம்மாலைகளை அணிவிப்பது - இப்படி எத்தனையோ விசித்திரமான வழக்கங்களைக் காண முடிகிறது.


1. சிறுமிக்கு மரண தண்டனை


சங்க இலக்கியத்தில் மிகவும் கொடுமையான செய்தி, ஒரு சிறுமிக்கு மரண தண்டனை கொடுத்ததாகும். நன்னன் என்ற கொடுங்கோலன் ஆட்சியில் இது நடந்தது. இதனால் அவனைக் கண்டித்த பரணர் போன்ற புலவர்கள் அவன் பரம்பரையில் வந்த மன்னர்களைக் கூடப் பாட மறுத்து விட்டனர். பெண் கொலை புரிந்த நன்னன் மரபில் வந்த இளம் விச்சிக்கோ என்ற மன்னனைப் பாட மறுத்து விட்டார் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் (புறம் 151).

நன்னன் என்பவன் பூழி நாட்டையாண்ட (கேரளாவின் ஒரு பகுதி) ஒரு சிற்றரசன். நன்னனது தோட்டத்திலுள்ள மரத்திலிருந்து விழுந்த மாங்காய் ஒரு கால்வாயில் மிதந்து வந்தது. அதனை அங்கு நீராடச் சென்ற ஒரு பெண் எடுத்துத் தின்று விட்டாள். உடனே அப்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தான் நன்னன். இதை எதிர்த்த நல்லோர் அனைவரும் கொதித்து எழுந்தனர். அப்பெண்ணின் நிறைக்கு நிறை (துலாபாரம்) தங்கம் தருவதாகவும், 81 யானைகள் தருவதாகவும் பெண்ணின் தந்தை கெஞ்சிப் பார்த்தார். ஆனால் ஈவு இரக்கமற்ற நன்னன் அப்பெண்ணின் மரண தண்டனையை நிறைவேற்றினான். இதைப் பரணர் குறுந்தொகைப் பாடலில் (292) விரிவாக எடுத்துரைக்கிறார்.


2. எடைக்கு எடை தங்கம்


அரசனுக்குத் தீங்கிழைப்பவர் அவர்களுடைய நிறைக்குத் தங்கத்தால் உருவம் (பாவை) செய்து கொடுப்பது அக்கால மரபு. இதைக் குறுந்தொகையிலும் (பாடல் 292) பெருங்கதையிலும் காணலாம்.

2300 ஆண்டுகளுக்கு முன் வடமொழியில் நாடகம் எழுதிய பாஷை என்ற அறிஞன் 'தூத வாக்ய' என்ற அவனது நாடகத்தில் ஒரு சுவையான சம்பவத்தைக் கூறுகிறான். பாண்டவர்க்காகக் கிருஷ்ணன் தூது வருகிறார் என்று அறிவிக்கப்பட்டவுடன், சபைக்குள் கிருஷ்ணன் நுழைகையில் எவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்யக் கூடாதென்றும் அப்படி எழுந்து நிற்போருக்கு 12 தங்கக் காசு அபராதம் என்றும் துரியோதனன் கூறுகிறான். ஆனால் கிருஷ்ணன் சபைக்குள் நுழையும் போது துரோணர், பீஷ்மர், விதுரன் போன்ற பெரியவர்களும் கூட அவர்களை அறியாமலே எழுந்து நிற்கின்றனர். துரியோதனனோ ஆசனத்திலிருந்து கீழே விழுகிறான்!! அரசன் கட்டளையை மீறும் அமைச்சருக்கு 12 பொற்காசு தண்டனை என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
   
3. பெண்கள் முடியில் கயிறு திரித்தல்


சங்க கால மன்னர்கள், அவர்களிடம் தோற்றுப் போன அரசனின் மனவியரை இழுத்து வந்து அவர்களுடய தலைமுடியைச் சிரைத்து அதிலிருந்து கயிறு திரித்து அக் கயிற்றால் பகையரசரின் யானையப் பிடித்து இழுத்து வந்தனர். நன்னன் என்ற கொடுங்கோலரசன் இப்படிச் செய்ததைப் பரணர் என்னும் புலவர் நற்றிணைப் பாடலில் (270) குறிப்பிட்டுக் கண்டித்துள்ளார்.

4. பாவங்களுக்குப் பரிகாரம் (கழுவாய்)

பசு மாட்டின் மடியினை அறுத்தவர்க்கும், பெண்களின் கருவைச் சிதைத்தவர்க்கும், பார்ப்பனர்களுக்குக் கொடுமை செய்தவர்களுக்கும் பரிகாரம் (கழுவாய்) உண்டு. ஆனால் செய்ந்நன்றி கொன்றவர்க்குக் கழுவாயே இல்லை என்று ஆலத்தூர்க் கிழார் (புறம் 34) என்ற புலவர் பாடுகிறார். இதே கருத்தை வால்மீகி ராமாயணத்திலும் பஞ்ச தந்திரக் கதைகளிலும் காண்கிறோம்.

இதிலிருந்து அக்காலத்தில் சில குற்றங்கள் இருந்ததையும் அதற்குப் பரிகாரமாகக் கடுமை குறைந்த தண்டனைகள் அளிக்கப்பட்டதையும் அறிகிறோம்.

புறம் 34-வது பாடலில் மூன்றாவது வரியில் பார்ப்பனர் (அந்தணர்கள்) என்ற சொல்லைச் சில புதிய பதிப்புக்களில் குரவர் (அறிஞர்/ஆசிரியர்) என்று திருத்தியுள்ளனர். இது சரியில்ல என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. பசுவையும், பார்ப்பனரையும் அடுத்தடுத்துக் கூறுவது சங்க இலக்கிய மரபு. எட்டுத் தொகையிலும் பத்துப் பாட்டிலும் ஏராளமான இடங்களில் பசு-பார்ப்பனை என்ற சொற்றொடர் வருகிறது. இது வடமொழி இலக்கியங்களில் வரும் 'கோப்ராம்மணஸ்ய' என்ற சொற்றொடரின் மொழி பெயர்ப்பு. கண்ணகி மதுரை நகரைத் தீக்கிரையாக்கிய போது பசு, பெண்டிர், பார்ப்பனர் உள்ள பக்கம் எரியக் கூடாது என்று அக்கினி தேவனுக்குக் கட்டளையிடுகிறாள். ஞானசம்பந்தரும் வாழ்க அந்தணர், வானவர், ஆவினம் என்று பாடுகிறார்.


5. ஊரைத் தீக்கிரையாக்குதல்


பழந்தமிழர்கள் செய்த பெரிய தவறுகளில் ஒன்று பகையரசர்களின் ஊரைத் தீக்கிரையாக்குவதாகும். இதனால் வரலாற்றுத் தடயங்கள் ஏதுமின்றி, இன்று நாம் தவிக்கிறோம். சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களில் இப்படித் தீக்கிரையாக்கப்பட்டுப் பகையரசர்களின் ஊர்கள் பாழாய்ப் போனதையும் அவ்விடங்களில் ஆந்தையும் கூகையும் அலறுவதையும் படித்தறிகிறோம். தனி ஒருத்திக்கு இழைக்கப்பட்ட தீங்கிற்காக மதுரை நகரையே கண்ணகி தீக்கிரையாக்கியதைச் சிலப்பதிகாரம் அறிவிக்கிறது.



6. கழுதை ஏர் பூட்டி உழுவது


அதியமான் அஞ்சியின் மகன் பொருட்டெழினியைப் புகழ்ந்து பாடிய ஒளவையார் (புறம் 39) ''திறை கொடாத மன்னனின் மதில்களை வஞ்சனையின்றி அழித்துக் கழுதை பூட்டி உழுது வரகும் கொள்ளும் விதைக்கும் மன்னன்'' என்று கூறுகிறார். இவ்வாறு எதிரியின் நிலத்தைக் கழுதை கொண்டு உழுவதைக் கி.மு. முதல் நூற்றாண்டில் ஒரிஸ்ஸாவை ஆண்ட காரவேலன் என்ற கலிங்க மன்னனும் அவனுடய கல்வெட்டில் கூறுகிறான். ஆக இது பரவலாக இருந்த வழக்கம் என்று தெரிகிறது. சிலப்பதிகாரத்தில் நீர்ப்படக் காதையில் மருதப் பண்ணிலும் கழுதை பூட்டிய ஏரால் உழுது வரகு பயிரிடுவது  குறிப்பிடப்பட்டுள்ளது.


7. தோற்ற மன்னர்களைச் சிறையில் அடைப்பது


சோழன் செங்கணானோடு சேரமான் கணக்கால் இரும்பொறை போர் புரிந்தான். இதில் இரும்பொறை தோற்றான். உடனே இரும்பொறையைச் சிறைப் பிடித்துக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைத்தான். தண்ணீர் தா என்று கேட்ட போது காவலாளி தண்ணீர் கொண்டு வரத் தாமதித்ததால் சேரன் அவமானம் தாளாது உயிர் துறந்தான் (புறம் 74).


8. கண்களைப் பறித்துத் தண்டனை

பயறு விளைந்த ஒரு நிலத்தில் ஒரு பசு மேய்ந்ததற்காகப் பசுவின் சொந்தக்காரர் ஒருவரின் கண்களைப் பறித்தனர் கோசர்கள். ஊர் மன்றத்தில் இந்தக் கடும் தண்டனை பற்றிக் கோசர்கள் முடிவு செய்தனர். கண்களை இழந்த தந்தைக்கு நியாயம் கிடக்கும் வரை நோன்பு இருக்க அவனுடைய மகள் அன்னிமிஞிலி முடிவெடுத்தாள். உண்கலத்தில் உண்ண மாட்டேன் என்றும் புத்தாடைகளை உடுக்க மாட்டேன் என்றும் உறுதி எடுத்தாள். பின்னர் குதிரைப் படைத் தலைவனான திதியன் என்பவனிடம் சென்று கோசர்களைப் பழி வாங்கும் படி முறையிட்டாள். திதியனும் படையெடுத்துச் சென்று கோசர்களைக் கொன்றான். அன்னிமிஞிலி சினம் தணிந்து உடல் பூரித்து நின்றாள். இந்தச் செய்தியை (அகம் 262, 196) பரணர் நமக்கு அழகிய கவிதையில் தெரிவிக்கிறார். இதைப் படிக்கையில் மதுரையை எரித்த கண்ணகியும், துரியோதனின் தொடையைப் பிளந்த போது மகிழ்ந்த திரௌபதியும் நம் மனக்கண் முன் வருகின்றனர்.


9. பல்லைப் பிடுங்கிக் கதவில் புதைத்தது


அகநானூறு 211-வது பாடலில் புலவர் மாமூலனார் நமக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறார்:

யானை பிடிக்க வருமாறு அனைத்துப் படைத் தலைவர்களுக்கும் சோழ மன்னன் உத்தரவிடுகிறான். அரச நெறிகளை அறியாத எழினி என்பவன் மட்டும் வரவில்லை. உடனே மத்தி என்ற படைத் தலைவனைச் சோழன் அனுப்புகிறான். அவன் எழினியை எளிதில் கொன்று விடுகிறான். அத்தோடு நில்லாமல் எழினியின் பல்லை எடுத்து வந்து 'பெண்மணி வாயில்' என்னும் கோட்டை வாயிலில் கதவில் அழுத்தி வைக்கிறான். இதே புலவர் மாமூலனார் பாடல் 197-ல் கண்ணன் எழினி என்று ஒருவரைக் குறிப்பிடுகிறார். அவனுடய மகன் தான் பல்லைப் பறி கொடுத்த எழினியோ அல்லது இருவரும் ஒருவரா என்று தெரியவில்லை.

பல்லையும், கண்ணையும் பறித்த சம்பவங்களைப் பார்க்கையில் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற பாபிலோனிய மன்னன் ஹமுரபியின் நீதியை இவர்கள் பின்பற்றினர் போலும்!

புத்தரின் பல்லையும் முகம்மது நபியின் முடியையும் பாக்தாத் வழிபாட்டுத் தலங்களில் வைத்திருப்பதை நாம் அறிவோம். ஆனால் அவை அவர்களின் மீதுள்ள மதிப்பின்பால் செய்யப்பட்டவை. இங்கே எழினியை அவமதிப்பதற்காக மத்தி அப்படிச் செய்தான்.


10. தலை கொண்டு வந்தால் பரிசு


குமணனுக்கும் அவன் தம்பி இளங்குமணனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, குமணனைக் காட்டிற்கு விரட்டினான் இளங்குமணன். அத்தோடு நில்லாமல் அவன் (குமணனின்) தலையைக் கொண்டு வருபவருக்கு பரிசு என்றும் இளங்குமணன் அறிவித்தான். பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் காட்டிற்குச் சென்று, குமணனைப் பாடினார். ஆனால் குமணன் கானகத்தில் வாழ்ந்ததால் அவர் கையில் பரிசு கொடுப்பதற்குப் பொருள் ஏதும் இல்லை. தன் இடுப்பிலிருந்த வாளை உருவிப் புலவர் கையில் கொடுத்தான். இதனால் என் தலையை வெட்டி எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு என் தம்பி பரிசு தருவான் என்று தன் இன்னுயிரையும் தியாகம் செய்ய முன்வந்தான் குமணன். ஆனால் புலவர் சாத்தனாரோ பெரும் அறிவாளி. கையில் வாளை வாங்கிக் கொண்டு ஒரு செவ்வாழை மரத்தை வெட்டி வாழைத் தண்டைத் துணியில் சுற்றிக் கொண்டு இளங்குமணனிடம் வந்தார். அவரைப் பார்த்த இளங்குமணன் அண்ணன் தலையோ எனத் திடுக்கிடவே புலவர் உண்மையைக் கூறி அவர்களை ஒன்று படுத்தினார்.

இதைப் புறநானூறு 165-ம் பாடலில் ஓரளவு அறிய முடிகிறது. ஏனைய கதையை உரை மூலமே அறிகிறோம். ஆனால் பகைவனின் தலைக்குப் பரிசுப் பணம் கொடுக்கும் வழக்கம் அக்காலத்திலேயே இருந்தது என்பது இதில் தெளிவாகிறது.


11. யானையின் காலால் இடறிக் கொல்லுதல்
தற்காலத்தில் தூக்குத் தண்டனை, மின்சார நாற்காலி, விஷ ஊசி போன்றவை மூலம் மரண தண்டனை அளிக்கப்படுகிறது. பழந்தமிழகத்தில் கழுவேற்றுதல், யானையின் காலால் தலையை இடறிக் கொல்லுதல், வாளால் வெட்டிக் கொல்லுதல், சுண்ணாம்புக் காளவாயில் போடுதல் முதலிய மரண தண்டனை முறைகள் இருந்தன. பகை மன்னனின் குழந்தைகளையும் கூட இப்படி இரையாக்க முயன்றதைப் புறநானூறு (46) மூலம் அறிகிறோம்.

மலையமான் மகன்களை யானையின் கால்களால் நசுக்கிக் கொல்லுமாறு சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் உத்தரவிடுகிறான். அது கண்டு வருந்திய கோவூர்க்கிழார் என்ற புலவர், ''சோழ மன்னனே! ஒரு புறாவின் உடலைக் காப்பதற்காகத் தன்னையே பருந்துக்கு ஈந்த செம்பியன் (சிபிச் சக்கரவர்த்தி) பரம்பரையில் வந்தவன் நீ. இந்தச் சிறுவர்களோ கொல்ல வரும் யானையை, அது தீங்கு செய்யப் போகிறது என்பதைக் கூட உணராமல், அதைக் கண்டு மகிழும் இளம் வயதினர்.

பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள் இவர்கள். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். இனி உன் விருப்பம்'' என்று கூறினார். இதைக் கேட்ட சோழ மன்னன் மனம் மாறி மலையமான் புதல்வர்களை விடுதலை செய்தான் என்பது வரலாறு. இவ்வாறு யானையை விட்டு ஆட்களைக் கொல்லுவதைப் பிற்கால வரலாற்றிலும் காண முடிகிறது.

அப்பரைக் கொல்வதற்காக ஏவப்பட்ட யானை, அவரை வணங்கிச் சென்றது.


12. ஒற்றர்களுக்கு மரண தண்டனை


பழந்தமிழகத்தில் ஒற்றர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதைக் கோவூர்க்கிழாரின் (புறம் 47) பாடல் மூலம் அறிய முடிகிறது. சோழ மன்னர்கள் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே சண்டை.

இந்நேரத்தில் நலங்கிள்ளியைப் பார்த்துவிட்டு இளம் தத்தன் என்ற புலவன் உறையூருக்கு வருகிறான். அவனை ஒற்றாட வந்தவன் என்று கருதிக் கொல்லும் படி உத்தரவிடுகிறான் நெடுங்கிள்ளி. உடனே கோவூர்க்கிழார் தலையிடுகிறார்.

''மன்னனே! பறவைகள் பழ மரத்தை நாடி ஓடுவது போலப் பரிசிலரைத் தேடி ஓடுவது புலவர் வாழ்க்கை. தாமும் உண்டு பிறரையும் உண்ணச் செய்வதேயன்றி எவருக்கும் தீங்கு செய்யாதார் இவர்கள்'' என்றார். இதைக் கேட்ட மன்னன், புலவர் இளம் தத்தனை விடுதலை செய்தான்.


13. பொய் சொன்ன கணவனுக்கு முகத்தில் கரி


ஒருவன் ஒரு பெண்ணைக் கள்ளத்தனமாகத் திருமணம் செய்துவிட்டுப் பின்னர் பிரிந்து சென்று விடுகிறான். அப்பெண் ஊர் மக்களிடம் முறையிடவே அவர்கள் உண்மையை விசாரித்துத் தவறிழைத்த ஆடவனை மரக்கிளையில் கட்டித் தொங்க விட்டு முகத்தில் சாம்பலைப் பூசுகின்றனர். இந்தச் செய்தியை அகநானூறு தெரிவிக்கிறது.

முற்காலத்தில் தவறு செய்தவர்களைக் கழுதை மீது ஏற்றி வைத்து மொட்டையடித்துக் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி ஊர்வலம் விடும் வழக்கமும் இருந்தது.


14. மனு நீதிச் சோழன்

சோழ மன்னர் பரம்பரையில் தோன்றிய 2 மன்னர்களைத் தமிழ் இலக்கியம் அடிக்கடி மேற்கோள் காட்டிப் பேசுகிறது. ஒருவர் புறாவுக்குத் தன் சதையை வெட்டிக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி. மற்றொருவர் ஒரு பசு மாட்டின் முறையீட்டின் பேரில் மகனையே தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழன்.

மனுநீதிச் சோழனின் மகன் ஓட்டிச் சென்ற தேரானது ஒரு கன்றின் மீது ஏறி அதைக் கொன்று விட்டது. கன்றை இழந்த பசு உடனே மன்னனின் கோட்டை வாயிலுக்குச் சென்று அங்கு கட்டி விடப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியினை அடித்தது. பசுவின் துயரத்தை அறிந்த சோழ மன்னன், அமைச்சரை அழைத்து, கன்று இறந்தது போலவே தனது மகனையும் தேர்க்காலில் இட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டான்.

பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்னும் ஹமுராபியின் சட்டமே மனுவின் ஸ்மிருதியிலும் இருந்ததாகத் தமிழர் நம்பி, அந்தச் சோழனுக்கு மனுநீதிச் சோழன் என்று பெயரிட்டனர்.

''அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்'' என்று சிலப்பதிகாரமும் ''மகனை முறை செய்த மன்னவன்'' என்று மணிமேகலையும் மனுநீதிச் சோழனைப் புகழ்ந்து பேசுகின்றன.

இலங்கையின் வரலாற்றை விரிவாகக் கூறும் மகாவம்சம் என்ற நூலும் (21 வது அத்தியாயம்) மனுநீதிச் சோழன் கதையைக் குறிப்பிடுகிறது. ஏலாரா (ஏழாரன்) என்ற சோழ மன்னன் இலங்கையை 44 ஆண்டுகளுக்கு நீதி நெறி தவறாமல் ஆண்டான் என்றும் அப்பொழுது இது நடந்தது என்றும் மகாவம்சம் கூறுகிறது. அவன் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்.



15. ஆராய்ச்சி மணி

தமிழ் மன்னர்கள் நீதிநெறி தவறாது ஆட்சி புரிந்தனர். ஆயினும் எங்கேனும் நீதி தவறினால் மன்னரைக் காண நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. கோட்டை வாயிலில் தொங்க விடப்பட்டுள்ள ஆராய்ச்சி மணியை எவரும் வந்து அடிக்கலாம். மன்னன் ஓடோடி வந்து நீதி வழங்குவான்.

கணவனை இழந்த கண்ணகி மதுரை நகரைத் தீக்கிரையாக்கிய பின்னரும், ஆத்திரமும் வருத்தமும் தணியாமல் நின்றாள். மதுரையின் காவல் தெய்வமாகிய மதுராபதி அவள் முன் தோன்றிப் பாண்டிய மன்னனின் செங்கோல் ஆட்சியை எடுத்துரைக்கிறாள்:

''மறை நா ஓசை அல்ல தியாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே''
(சிலப்பதிகாரம் கட்டுரைக் காதை)


பாண்டிய மன்னரின் ஆட்சியில் அந்தணர்கள் ஓதும் வேதத்தைத் தான் அவன் காதுகள் கேட்டுப் பழகியிருக்கின்றன. இது வரை அவன் ஆட்சியில் எவரும் ஆராய்ச்சி மணியை அடித்துக் கேட்டதேயில்லை என்று மதுராபதித் தெய்வம் கூறுகிறது.

நீதிநெறி தவறாத ஏலாரா (ஏழாரன்) என்ற சோழ மன்னனின் ஆட்சியைப் புகழும் மகாவம்சமும் இந்த ஆராய்ச்சி மணி பற்றிக் குறிப்பிடுகிறது (21-வது அத்தியாயம்)
   

16. பொற்கைப் பாண்டியன்



சிலப்பதிகாரம் பொற்கைப் பாண்டியன் என்ற மன்னரின் சுவையான கதை ஒன்றையும் கூறுகிறது (கட்டுரைக் காதை).

கீரந்தை என்ற பார்ப்பனன் ஒருவன் ஒருநாள் வேற்றூர் செல்ல நேரிட்டது. அப்போது பாண்டிய மன்னன் அவ்வீட்டைக் காவல் காத்தான். அப்போது ஒரு நாள் இரவு நேரத்தில் அரவம் கேட்கவே அந்த வீட்டின் கதவைப் பாண்டியன் தட்டினான். "பாண்டியன் காவல் இருப்பதால் ஒன்றும் நிகழா என்று கூறி என்னை விட்டுவிட்டுச் சென்று விட்டாரே என் கணவன்" என்று கீரந்தையின் மனைவி புலம்பினாள். மன்னன் இதைக் கேட்டுத் திகைத்து, எல்லார் வீட்டுக் கதவுகளையும் தட்டி விட்டுச் செல்வோம். அப்போது தான் இப்பெண் அஞ்சாமல் இருப்பாள் என்று கருதிப் பலர் வீடுகளின் கதவுகளையும் தட்டிவிட்டுச் செல்கிறான். மறு நாள் அந்தத் தெருவைச் சேர்ந்த அந்தணர்கள் அனைவரும் அரசனிடம் முறையிடவே அரசன் தானே அத்தவறைச் செய்தவன் என்று கூறித் தனது வாளால் தன் கையை வெட்டிக் கொள்கிறான். பின்னர் அரசவை மருத்துவர்கள் அவனுக்கு பொற்கையைப் பொருத்தியதால் பொற்கைப் பாண்டியன் (GOLDEN HAND) என்று பெயர் பெறுகிறான்.

எந்த உறுப்பைக் கொண்டு ஒருவன் தவறு இழைக்கிறானோ அந்த உறுப்பை வெட்டி நீதி வழங்குவது பழந்தமிழர் கண்ட முறை போலும்.

பதிணென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழியிலும் (எனக்குத் தகைவன்றால்....) இந்தச் சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

   
17. நரைமுடி தரித்து நீதி வழங்கல்



பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் இன்றும் கூட நீதிபதிகள் நரைமுடி தரித்துத் தான் நீதி வழங்குகின்றனர். இந்த வழக்கத்தைக் கரிகால் சோழன் தான் துவக்கி வைத்தான் போலும்.

சோழ மன்னரின் தலைநகராக விளங்கிய உறையூரில் இருந்த அறங்கூறு அவையம் மிகவும் புகழ் பெற்றது. ஒருநாள் இரு முதியவர்கள் நீதி வேண்டிச் சோழனின் அரசவைக்கு வந்தனர். ஆனால் வழக்கைக் கேட்கவுள்ள கரிகாலனின் இளம் வயதைக் கண்டு இவரால் சரியான தீர்ப்புக் கூற முடியாதென எண்ணித் தயங்கினர். அவர்களுடய ஏமாற்றத்தை உணர்ந்த கரிகால் சோழன் அவர்களை மறுநாள் வரும்படிக் கூறி, அன்று ஒரு முதியவர் அவைநீதி வழங்குவார் என்றும் சொன்னான்.

மறு நாள் அவர்கள் அவைக்கு வந்த பொழுது கரிகாலனே நரைமுடி தரித்து முதியோர் போல வேடம் அணிந்து வந்து தீர்ப்புக் கூறினான். முதியோர் இருவரும் அந்தத் தீர்ப்பைப் பாராட்டினர். இச் செய்தியைப் பொருநராற்றுப் படை, மணிமேகலை, பழமொழி ஆகிய நூல்கள் எடுத்துக் காட்டியுள்ளன.

   
   
18. யவனர் தலையில் எண்ணெய் தடவி அவமதித்தது



பதிற்றுப் பத்து என்னும் நூலில் குமட்டூர் கண்ணனார் பாடிய இரண்டாம் பத்து நமக்கு ஒரு புதிய செய்தியைத் தருகிறது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற மன்னன், இனிமையற்ற கடுஞ்சொற்களை உடைய யவனர்களைச் சிறைப்படுத்தி, அவர்கள் தலையில் நெய்யினை ஊற்றி, கைகளைப் பின்னால் கட்டி அவமதித்தான். பின்னர் அவர்களிடமிருந்த விலைமிக்க அணிகலன்களையும், உயர்ந்த வைரங்களையும் பெற்று அவர்களை விடுதலை செய்தான்.