Search This Blog

Saturday 26 October 2013

Samsung Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் கசிந்தன!

சம்சுங் நிறுவனமனது அண்மையில் Samsung Galaxy S4 ஸ்மார்ட் கைப்பேசியினை வெளியிட்டிருந்தது.

இக்கைப்பேசி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்தும் தற்போது Samsung Galaxy S5 கைப்பேசி உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.


இதன் உற்பத்தி தற்போது முடிவடையும் நிலையில் இருப்பதாக தெரியவருவதுடன், இக்கைப்பேசி பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது இதில் 64-bit Exynos 5430 Processor - இனை கொண்டுள்ளது எனவும், அடுத்த வருட ஆரம்பத்தில் விற்பனைக்கு வரும் எனவும் தெரியவருகின்றது.






எப்படியெல்லாம் பேசக்கூடாது?

மனிதனுக்கு மட்டும் உள்ள சிறப்புத்தன்மை பேச்சு. இது வரை எவ்வளவோ நாம் பேசியிருப்போம், கேட்டும் இருப்போம். நம்மை சுற்றி எங்கும் பேச்சு தான் நிறைந்து இருக்கிறது. வகுப்பறையில் வாத்தியார் பேசியே தூங்கவைக்கிறார். ஆபீஸில் மேலதிகாரி பேசி கடுப்பேத்துகிறார், இரவு மனைவி காதருகே கிசுகிசுத்து பட்டுப் புடவை சம்பாதித்து விடுகிறாள். காதலர்கள் கைப்பேசியில் பொய் பேசியே டைம் பாஸ் பண்ணுகிறார்கள். டிவியை போட்டால் அங்கேயும் பேச்சு தான். நாலு பேர் கூடினாலே நாக்குக்குத் தான் வேலை. எல்லோரும் அலட்சியமாகக் கொட்டும் வார்த்தைகளில் சில பேரழிவு ஏற்படுத்தும், சில ஆளை காலியாக்கும், சில வழி கெடுக்கும், சில வழி காட்டும், சில நன்மை தரும், சில நோய் வாய்ப்படுத்தும, சில குணமாக்கும். எனவே கம்யூட்டருக்கு உள்ளது போல் நம் மூளக்கும் ஒரு ஃபயர்வால் தேவை. இல்லாவிட்டால் நச்சு வார்த்தைகள் நம்மை நாசம் செய்து விடும்.

மனதை தகர்க்கும் பேச்சு:


குழந்தைகள் கேட்க நேரும் வார்த்தைகள் ,டிவி,சினிமாக்களின் வசனங்கள் அவனை எப்படி எல்லாம் பாதிக்கும் என்று யார் கவலைப்படுகிறார்கள்.


"என் மகன் சாப்பிடுவதே இல்லை" என்று சொல்லி கவலைப்படும் அன்னயின் சிம்பதியை பெற வேண்டி அவன் சாப்பிட அடம் பிடிப்பான்.



"உன் தம்பியப் பாரு எவ்வளவு நல்லா படிக்கிறான் நீ என்னடா மக்கு,

சோம்பேறி மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று ஒரு தாய் அடிக்கடி திட்டுவதே அவனை மக்கு பிள்ளையாக்கி விடும்.



"மூணு கண்ணன் வரான், பூச்சாண்டி வரான் சாப்பிடு" என்று பயப்படுத்துவது அவர்களை கோழையாக்கும்.


"அவன் பிடிவாதக்காரன்","தலை போனாலும் அவன் பால் சாப்பிட மாட்டான்","சோம்பேறி" ,"முட்டாள்,"தூங்கு மூஞ்சி" என்று திரும்பத் திரும்ப பிள்ளைகளை பார்த்து கூறினால். அவர்களும் அப்படியே ஆகி விடுவார்கள்.


எதிர் மறையான பேச்சுக்கள் தன்னம்பிக்கையை இழக்கச்செய்யும்.சுய மரியாதயை பலவீனமாக்கும்.


 நோயாளியை பார்க்கப் போகும் போது




"அட கடவுளே உனக்கா இப்படி வரவேண்டும்?"



"எதற்கும் ஸ்கேன் எடுத்துப் பாரு ப்ரெய்ன் ட்யூமராயிருக்கப் போகுது"


"இப்படித் தான் என் மாமனாரின் தம்பி பையனுக்கு லேசா வயித்து வலிதான் வந்தது, மூணாம் நாளே ரத்தம் ரத்தமா வாந்தி எடுத்து செத்துப் போனான், கேன்சராம்"


"நெஞ்சு வலி வந்தா இங்க்லீஸ் டாக்டரிடம் போனால் அறுத்து தைத்து விடுவான்.

பெரியப்பாவுக்கு அட்டாக் வந்தபோது நம்மூர் வைத்தியருகிட்ட ஒரு தடவை தான் கஷாயம் குடிச்சாரு அப்புறம் வரவே இல்லை"


தாயத்து கட்டிக்கோ, காத்து கருப்பு அடிச்சிருக்கும், சாமி குத்தம், அம்மன் விளையாட்டு என்று எத்தனையோ அபத்தங்களை உளறிக் கொட்டி நோயாளியின் BP எகிறச்செய்து குழியில் தள்ளி மண்ணை மூடுகிறார்கள்.


"என்ன உடம்புக்கு இளைச்சிருக்கே, அன்னிக்கு பாத்தப்போ நல்லாத் தானே இருந்தே"


"என்ன கலர் ட்ரெஸ் இது நல்லாவே இல்ல,எங்கெயிருந்து எடுத்தே விலை அதிகம்"

"இது பழைய மாடல் கார் உன் தலையிலே கட்டிட்டான்"


இனி தப்பாது , எழவு, நரகம், பிரயோஜனமில்லை, நடக்காது , சான்சே இல்லை. சுத்த வேஸ்ட். வீணா ட்ரை பண்றே ,அவளாவது உன்னப் பாக்கிறதாவது. இதப் பாருடா காமடியெ .பொளைக்கிறது கஸ்டம் தான். இது போன்ற வார்த்தைகள் முயற்சிக்கு முட்டுக் கட்டையிடும்.


 வளைந்த பேச்சுகள்:




என்னதான் நடுநிலை செய்தித் தாளானாலும் தொலைக் காட்சியானாலும் அதில் வரும் செய்திகள் பெரும்பாலும் மதம் அரசியல,மொழி இன சாயம் பூசித்தான் வரும். குறைந்த பட்சம் அந்த செய்தி ஆசிரியரின் கண்ணோட்டத்தில் தான் இருக்கும். செய்திகளில் அவர்களுக்கு ஏற்றபடி வார்த்தைகளை வளைத்து எழுதுவார்கள.சாதகமானதை கொட்டை எழுத்தில் முதல் பக்கத்திலும் பாதகமானதை மூலையில் பொடி எழுத்திலும் போடுவார்கள்.


 சில செய்திகள் மத, இனக் கலவர நெருப்பை பற்ற வைக்கும், எண்ணெய் ஊற்றும். வளைத்து எழுதப்படும் வார்த்தைகளால் அரசியல்வாதிகள் தமக்குள் அடித்துக்கொள்ள நேரிடும். சில செய்திகள் பங்கு வர்த்தகத்தை பாதிக்கும். தவறான,கற்பனையான செய்திகள் உங்கள் நம்பிக்கைகளத் திசை திருப்பிவிடக் கூடும். கேட்கும் எதையும் அப்படியே நம்பி விடக்கூடாது. நாம் தான் அதன் உண்மையை சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
வானிலை அறிக்கை, தேர்தல் ஆரூடம், ராசிபலன் , வக்கீலின் வாதம் எல்லமே ரப்பர் பேச்சுகள் தான்.


 நெருப்புப் பொறிகள்:


சில மாமியார் மருமகள் பேச்சு, தொழிலாளி முதலாளி பேச்சு, எல்லை தகராறு பற்றிய பேச்சு வார்த்தை முள் மேல் சேலை தான்.


"நான் என்ன அவனப் போய் பாக்குறது, அவன் வேணுமின்னா என்ன வந்து பாக்கட்டும்""என் குடும்ப மென்ன பாரம்பரியமென்ன" "அவர் முதல்ல பேசட்டும் அப்புறம் நாம பேசலாம்" போன்ற ஈகோ பேச்சுகளால் இழப்புகள் தான் உண்டாகும்.



சின்ன சின்ன வார்த்தைகளுக்கு விபரீத அர்த்த்ங்கள் எடுத்துக்கொண்டு "என்னை பார்த்து எப்படி அவன் அந்த வார்த்தையை சொல்லலாம்"."இதை குத்திக் காட்டத்தான் அப்படி பேசினான்" என்று மல்லுக்கு போவது. இது போல சில தீப்பொறி வார்த்த்தைகளால் பஞ்சு பொதிகள் பற்றிக்கொண்டு வெட்டு குத்து, கொலை, கோர்ட், கேஸ், ஆயுள் தண்டனை வரை போய் கடைசியில் அன்று அப்படி பேசாதிருந்தால் இன்று இப்படி களி தின்ன வேண்டி வருமா என்று தாமதமாக யோசிப்பார்கள். சிலர் அலட்சியமாக சிந்தும் வார்த்தைகளால் அன்னியோனியமாக பல வருடம் குடும்பம் நடத்திய கணவனும் மனைவியும் டைவோர்ஸ் கேட்டு கோர்ட் வாசலில் ஏறி இறங்குவார்கள். பிள்ளைகள் அனாதைகளாகும்.



 பொறுப்பற்ற பேச்சு:




சில தலைவர்கள் விடும் பொறுப்பற்ற அறிக்கைகள் மக்கள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி விடும். அமெரிக்க அதிபரின் வார்த்தைகள் உலக பொருளாதாரத்தைப் பாதிக்கும். ஒபாமாவின் அறிக்கையால் நம்மூர் சந்தையில் காய்கறி விலை எகிறக்கூடும் .இந்திய அரசியலில் பேசிப் பேசி நாட்டைக் கெடுத்தவர்களும், பேசாமலேயே நாட்டைக் கெடுத்தவர்களும் உண்டு. சில தலைவர்களின் திமிர் பேச்சால் போர் ஏற்பட்டு நாடு அழியும். அவர்களும் அழிவார்கள்..


 மோசடிப் பேச்சு:


சாமியார்கள்,மத குருக்கள, ஜோசியக்காரர்கள் சொல்வதை கண்னை மூடிக்கொண்டு கேட்கலாம் ஆனால் அறிவை மூடிகொண்டு அல்ல.இது தான் சத்தியத்தின் பாதை என்று தவறாக வழி காட்டும் போலி ஆன்மீக வாதிகளின் கவர்ச்சி பேச்சுகளில் கற்பழிப்பின் லட்சியங்கள் மறைந்திருக்கலாம்.
சமயவாதிகளின், அரசியல் வாதிகளின் சாதுரியப் பேச்சுகள் இளைய சமுதாயத்தை பலிகடாக்களாக மாற்றக்கூடும் .மதங்கள் உருவாக்கும் பயத்தையும், பக்தியையும், சற்று ஒதுக்கி வைத்து விட்டு தர்க்க அறிவின் ஒளியில் பார்த்தால் எல்லா மதத்திலும் அடியில் பெரும் ஓட்டை தான் தெரியும்.


மந்திரவாதி "உனக்கு பக்கத்து வீட்டுக்காரன் சூனியம் வைத்திருக்கிறான் நாற்பது நாளில் கை கால் விளங்காமல் போவாய் ’என்று சொல்வதை நீங்கள் நம்பினால் உங்கள் மனம் அதை உண்மயாக்கும.


குடுகுடுப்பைக்காரன் " நீ ரத்தம் கககி சாவாய்" என்று சொன்னால் அவன் சொல்லுக்கு அந்த பவர் உண்டு என்று மனம் நம்பி விட்டால் பயத்தில் உடனே அட்ரீனலின் சுரக்கும் இதயத்துடிப்பு தாறு மாறாகும், இரத்த அழுத்தம் கூடும்,தாக்குப் பிடிக்காமல் ஏதோ ரத்தக்குழாய் வாய் பிளக்க அவன் வார்த்தை பலித்து விடும்.


சின்ன காஸ் ட்ரபுளை பல மருத்துவ வார்த்தைகளை சொல்லி பயமுறுத்தி ஹார்ட் அட்டாக்காக நம்ப வைத்து பணம் கறக்கும ஒருசில மருத்துவர்களின் வார்த்தைகள் அது போன்றது. ஜோதிடர்களின் பேச்சைக் கேட்டு வாழ்கையை பாழக்குபவர்கள் எத்தனை பேர்கள். நம்பிக்கையை சிறிது மாற்றி வைத்து விட்டு சிறிது சிந்தித்துப் பார்த்தாலே தெரியும் அவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவே உங்கள் வயிற்றில் அடிக்கிறார்கள் என்று்.



 நீர் குமிழிகள்:


குடிகாரன் பேச்சு, கடன் கேட்பவர்கள் பேச்சு, காதலன் பேச்சு, அரசியல்வாதியின் வாக்குறுதி, சீட்டுக்கம்பனி வாக்குறுதி எல்லாவற்றுக்கும் அற்ப அயுள் தான்.


உயர்வு நவிற்சி:


கல்யாணத் தரகரின் பேச்சு, வியாபாரியின் பேச்சு, சேல்ஸ் ரெப்பின் பேச்சு, ரசிகர்கள் பேச்சு, முகஸ்துதி பேச்சு, அடிவருடி பேச்சு ,மாப்பிள்ளை தந்தையின் பேச்சு ,பிள்ளைகளைப் பற்றி பெற்றோர்களின் பேச்சு, ரியல் எஸ்டேட் காரர்கள் பேச்சு எல்லாமே 70 mm ல் DTS effect உடன் இருக்கும். அப்படியே நம்புவோர்க்கு நாமம் தான்.

வஞ்சப் புகழ்சி: 


சிலர் தமாஷ் பண்ணுகிறேன் என்று கூட இருப்பவர்களையே குத்திக் காட்டுவார்கள். நையாண்டி அடிப்பார்கள் இந்த நகைச்சுவைத் திலகங்கள் நளை வாழ்வின் சறுக்குப்பாதையில் சறுக்கி கீழே போகும் போது அனாதைகளாக மற்றவர்களின் நைய்யாண்டிகளுக்கு கதா பாத்திரமாவார்கள்.



மூடப் பேச்சுகள்:
 

பூனை குறுக்கே போனால்,விதவை எதிரே வந்தால் சகுனம் சரியில்லை.பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.போன்ற மூட நம்பிக்கைகளை தனிப் பதிவுதான் போட வேண்டும்.முன்னோர்களின் சாத்திர சம்பபிரதாயாங்கள் அவர்கள் காலத்தில் எதோ ஒரு தேவைக்கு உருவாக்கப்பட்டது,அதை கண்மூடி பின் பற்றாமல் ஏன் எதற்கு எப்படி என்று கேட்டு இப்போதும் அந்த தேவை உண்டா என் ஆய்ந்து அவற்றின் உண்மையான நோக்கமறிந்து செயல் படவேண்டும்.


காதல் பேச்சு:காதலிப்பதை சொல்லி கெட்டவர்களை விட சொல்லாமலேயே கெட்டவர்கள் அனேகம் ."உன்னை விட அழகி யாரும் இல்லை", "நீ தான் நான் பார்த்த முதல் பெண்", "உனக்காக உயிரையும் தருவேன்", நீயின்றி நான் இல்லை" இப்படி எத்தனை பொய்களில் காதலை கட்டி எழுப்புவார்கள், கல்யாணம் என்றால் காணாமல் போவார்கள். அப்படியே கல்யாணம் செய்து கொண்டால் பொய்கள் எல்லாம் சாயம் வெளுக்கும் போது காலம் கடந்திருக்கும்.


குதர்க்கப் பேச்சு: தர்க்கம் ஆரோக்கியமானது,ஆனால் முயலுக்கு மூணுகால் பார்ட்டிகளின் "அதான் அந்த இன்னொரு வாழைப்பழம்" டைப் குதர்கங்களை விட்டு விலகுவது நேரம் மிச்சப்படுத்தும்.


 

கோப்புகளை மாற்ற இதோ புதிய வழி!




Cloud-Convert


மன்னிக்கவும் இந்த வடிவில் கோப்புக்களை உங்களால் பயன்படுத்த முடியாது , இதற்கு நீங்கள் பொருத்தமான சாப்ட்வேரை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற வாசகத்தை கம்ப்யூட்டர் திரையில் பார்க்கும் அனுபவத்திற்கு இலக்காகாத இணையவாசி தான் உண்டா சொல்லுங்கள்.ஏன், இந்த அனுபவம் உங்களுக்கே கூட ஏற்பட்டிருக்கலாம்.


இமெயிலில் ஒரு கோப்பு இணைப்பாக வரும். அந்த கோப்பு ஜிப் பைல் வடிவில் இருக்கலாம். அதை கிளிக் செய்யும் போது உடனே ஒபன் ஆகாமல் மேலே சொன்ன வாசகத்தை எதிர் கொள்ளலாம். பிடிஎப் கோப்புகள், ஒலி வடிவிலான கோப்புகள் , புகைப்பட கோப்புகள் என பலவகையான கோப்புகளை டவுண்லோடு செய்ய முயலும் போது இத்தகைய சோதனையான அனுபவம் ஏற்படலாம்.




இது போன்ற நேரங்களில் எல்லாம் குறிப்பிட்ட வடிவிலான அந்த கோப்பை பொருத்தமான வடிவத்திற்கு மாற்ற வேண்டும் என்னும் எளிமையான இணைய நடைமுறையை நீங்களும் கற்று கொண்டிருக்கலாம்.


இதற்கு தேவையான மென்பொருள்களும் இணையத்தில் இருக்கின்றன என்பதையும் நீங்கள் தெரிந்து கொண்டிருக்கலாம்.



மென்பொருள் கூட தேவையில்லை, கோப்புகளை மாற்றித்தரும் இணையதளங்களும் அநேகம் இருப்பதை நீங்கள் அறிந்து வைத்திருக்கலாம்.




கிளவுகன்வர்ட்.ஆர்ஜி தளமும் இதே வகையான சேவையை வழங்குகிறது.பெரும்பாலான கோப்பு மாற்று சேவை போல இந்த தளத்திலும் எதையும் டவுண்லோடு செய்ய வேண்டியதில்லை. மாற்ற வேண்டிய கோப்பை பதிவேற்றினால் போதுமானது.கிளவுட் முறையில் செயல்படும் சேவை இது.


இப்படி 148 வகையான கோப்புகளை இந்த சேவை விரும்பிய கோப்பு வடிவில் மாற்றித்தருகிறது. எந்த வகையான கோப்புகளை எல்லாம் மாற்ற முடியும் என்பதற்கான பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் பொதுவாக இல்லாமல் , எந்த எந்த பிரிவில் என்ன வகையான கோப்புகளை மாற்றலாம் என அழகாக துணைத்ததலைப்புகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஒலி கோப்பு என்றால் எம்பி3 , எம்4ஏ, எ.எ.சி என வரிசையாக ஒரு சின்ன பட்டியல் வருகிறது.



கோப்புகளை கம்ப்யூட்டரில் இருந்தோ அல்லது கூகுல் டிரைவி இருந்தோ பதிவேற்றலாம். மாற்ற வேண்டிய கோப்பு எந்த வடிவில் ,எப்படி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடும் வசதி இருக்கிறது. மாறிய் கோப்பை இமெயில் பெறலாம். அல்லது கூகுல் டிரைவில் வந்து உட்கார செய்யலாம்.டிராப் பாக்சிலும் தான்.



ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தலாம் .எனவே மெயிலில் பார்க்க முடியாத கோப்பு வந்தால் இந்த சேவை மூலம் மாற்றி கம்ப்யூட்டரில் பார்த்து கொள்ளலாம்.



சாதாரண பயனாளிகள் நாள் ஒன்றுக்கு 5 கோப்பு வரை மாற்றிகொள்ளலாம். பதிவு செய்து உறுப்பினரானால் கூடுதல் வசதி உண்டு.


பதிவேற்றப்படும் எந்த கோப்பையும் சேமித்து வைப்பதில்லை என்று உறுதிமொழி தருகிறது.இணைய கண்காணிப்பு யுகத்தில் இது மிகவும் முக்கியம்.


இணைய முகவரி:     https://cloudconvert.org/

ஜமைக்காவும், கீரிப்பிள்ளையும்...














நாம் கீரிப்பிள்ளை என்று சொல்லும் உயிரினம் இந்தியாவைத்தவிர மற்ற நாடுகளில் இல்லை. கீரிக்கும் பாம்புக்கும் ஒத்துவராது என்பது நமக்குத் தெரிந்ததுதான். ஒரு சமயம் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்காவில் ‘‘பெரிதிலேன்ஸ்’’ என்று அழைக்கப்படும் விஷப்பாம்புகள் அதிகம் இருந்தன. அவற்றால் கடிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம். பெருகி வந்த அந்த பாம்புகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று அங்கு வசித்தவர்கள் தவித்தனர்.



அப்போதுதான் இந்தியாவில் கீரிப்பிள்ளை என்ற உரியினம் இருப்பதும், அதற்கு பாம்புகள்தான் பிடித்தமான உணவு என்பதும் அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இந்தியாவை தொடர்பு கொண்டார்கள். இங்கிருந்து நூற்றுக்கணக்கான கீரிப்பிள்ளைகள் கப்பலில் அனுப்பப்பட்டன. அங்கு இறங்கிய கீரிப்பிள்ளைகளுக்கு அந்த நாடு மிகவும் பிடித்துப்போனது. காரணம் எங்கு பார்த்தாலும் அவற்றுக்கு பிடித்த உணவான பாம்புகள் சுற்றிவந்ததுதான்.



வயிறு நிறைய பாம்புகளை பிடித்துச்சாப்பிட்ட அவை காடு நிறைய குட்டிகளையும் போட்டது. இதனால் ஒரு சில ஆண்டுகளில் ஜமைக்கா முழுவதும் கீரிப்பிள்ளைகள் அதிகரித்து பாம்புகளின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் மிகவும் சந்தோஷப்பட்ட அங்குள்ள மக்கள் கீரிகளை தங்கள் செல்லப்பிள்ளைகளாக வளர்க்கத் தொடங்கினர். ஆனால் அந்த சந்தோஷம் சிறிது காலத்திற்குத்தான் நீடித்தது.



காரணம் பாம்புகளை ஒட்டுமொத்தமாக அழித்த கீரிப்பிள்ளைகள் உணவின்றி தவித்தன. இதனால் வீடுகளில் மக்கள் வளர்த்த கோழி, வாத்துகளை பிடித்து சாப்பிடத்தொடங்கின. இதுதொடர்ந்த நிலையில் அவற்றிடம் இருந்த தங்கள் வளர்ப்பு பறவைகளை காப்பாற்றுவது அங்கிருந்தவர்களுக்குபெரிய வேலையாகிப்போனது.



பாம்பை எப்படி ஒழிப்பது என்று யோசித்து கீரிப்பிள்ளைகளை நாட்டுக்குள் கொண்டு வந்த அவர்கள், பின்னர் கீரியை எப்படி ஒழிப்பது என்று யோசிக்கும் நிலை உருவானது. இதன் மூலம் ஒன்று மட்டும் அந்த நாட்டு மக்களுக்கு தெளிவாக புரிந்தது. பாம்புகளை ஒழிப்பது சுலபம்...ஆனால் கீரிகளை அதுபோல ஒழிக்க முடியாது என்பதுதான் அது.

அவ்வையின் நையாண்டி !


நமது பழந்தமிழ் புலவர்கள் பாடல் எழுதுவதற்கு எழுத்துகளை மட்டும் பயன்படுத்தவில்லை , எண்களையும் அதிலும் குறிப்பாக பின்னங்களையும் பயன்படுத்தி இருக்கின்றனர். இதற்கு அவ்வை பாடிய பாடல் ஒரு நல்ல உதாரணம். தன்னை நையாண்டி செய்த புலவர் ஒருவரை பார்த்து அவ்வை வசை பாடிய ஒரு வசைப்பாட்டை இப்போது பார்ப்போம்.


எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே,  முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!


இதில் முதல் வரியில் வரும் “ எட்டேகால்“ என்பதை எட்டு + கால் அதாவது 8 + 1/4 என்று பிரித்து படிக்க வேண்டும்.


அப்படி படித்தால் 8 என்பதற்கு உரிய தமிழ் எண் “ அ“ அதே போல் கால் 1/4  என்னும் பின்னத்துக்கு உரிய தமிழ் எண் “ வ “ . எட்டேகால் = எட்டு + கால் அதாவது அ + வ = அவ


அந்த பாடலின் முதல் வரியை படியுங்கள். ‘அவ‘ லட்சணமே என்று பொருள் வருகிறதா?


அடுத்த வரி, எமனேறும் பரியே - எருமை மாடே



3-வது வரி 'மட்டில் பெரியம்மை வாகனமே'  மூத்த தேவி என்னும் மூதேவியின் வாகனமான கழுதையே



'முட்டமேல் கூரையில்லா வீடே'  மேல் கூரையில்லா வீடு அதாவது குட்டிச்சுவரே




'குலராமன் தூதுவனே' - ராமன் தூதுவனே - அதாவது  குரங்கே



கடைசி சொல்லான ‘ஆரையடா சொன்னாயடா ‘ என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரும்.




“ நீ ஆரைக் கீரையைத்தான் சொன்னாய் அடா! “ என்பது ஒரு பொருள்.



இதில் இப்போது ‘சொன்னாய்‘ என்பதை மட்டும் பிரித்தால்



‘சொன்னாய்‘ = சொன்ன + நாய் என்று நாயயையும் குறிக்கும்


அல்லது




யாரை பார்த்து சொன்னாய் என்று கேட்பது போலவும் குறிக்கும்.




எப்படி இருக்கிறது பாருங்கள், நம் புலவர்களின் நையாண்டி!

இடது பக்க போக்குவரத்து!














ந்தியாவின் சாலை போக்குவரத்தில், வாகனங்கள் சாலையின் இடது புறம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும், ஒரு சில நாடுகளைத் தவிர சாலைப் போக்குவரத்து இடது புறமாகவே உள்ளது. இந்த பழக்கம் எப்படி வந்தது என்று பார்த்தால் நாம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி போக வேண்டும்.


இங்கிலாந்தின் முதல் விக்டோரியா மகாராணி காலத்தில் இந்த பழக்கம் வந்தது. அப்போது அரச குடும்பத்தினரும், நிலச்சுவான்தாரர்களும் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டிகளில் போவது வழக்கம். இந்த வண்டிகளில் குதிரை ஓட்டுபவர் வண்டியின் வலது புறம் உட்கார்ந்திருப்பார். இது குதிரைகளை கையாளுவதற்கு வசதியாகவும், சுலபமாகவும் இருந்தது. மேலும் அதுவே ஒரு பாரம்பரிய மரபாகவும் மாறியது.



குதிரைகளை அதட்டி ஓட்டுவதற்கு கையில் உள்ள நீளமான சவுக்கை சுழற்றும் போது, அது சாலை ஓரத்தில் உள்ள மரக்கிளையில் சிக்கி சிறு சிறு விபத்துகள் ஏற்படுவதுண்டு. மேலும் அரச குடும்பத்தினர் பயணம் செய்யும் போது சவுக்கு சிக்கிக் கொண்டால், கால தாமதத்திற்கும், அரசரின் கோபத்திற்கும் ஆளாக நேரிட்டது. இதனால் சவுக்கு, சிக்காத அளவுக்கு வலது புறம் இடம் விட்டு சாலையில் இடது புறம் வண்டியை செலுத்தினார்கள்.
பின்பு பல ஆண்டுகள் கழித்து மோட்டார் வாகனங்கள் அறிமுகப்படுத்தபட்டவுடன், இதே முறை நடைமுறை படுத்தப்பட்டது. இங்கிலாந்து ஆட்சி செய்த நாடுகளில் இதே சாலை விதிமுறை கடைபிடிக்கப்பட்டது.



இப்போது உலகில் பெரும்பான்மையான நாடுகளில் இந்த முறைதான் நடைமுறையில் உள்ளது. அமெரிக்கா போன்ற சில நாடுகளில் மட்டுமே வலது புறத்தில் வாகனங்கள் செல்லும் விதி இருக்கிறது. அதனால் தான் அமெரிக்க வாகனங்களில் டிரைவர்களின் இருக்கை வலது புறத்தில் உள்ளது.
இந்தியாவில் இருந்து செல்பவர்கள் சர்வதேச ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே அமெரிக்காவில் வாகனங்கள் ஓட்ட முடியும். ஏனென்றால் இடது புறம் ஓட்டி பழக்கப்பட்டவர்கள் வலது புறம் ஓட்டுவது சிரமம்.

ஆயுர்வேதம் கற்றுத்தரும் பாடம்!















மனிதனிடம் தோன்றும் இயற்கையான உணர்வுகளை வேகம் என்று அழைக்கிறது ஆயுர்வேதம். இந்த வேகம் உடல் சம்மந்தமாகவோ அல்லது மனம் சம்மந்தமாகவோ இருக்கலாம்.


வேகத்தை தாரணீய வேகம் என்றும் அதாரணீய வேகம் என்றும் பிரிக்கிறார்கள். தாரணீய வேகம் என்றால் அடக்க வேண்டிய உணர்வுகள் என்றுபொருள். உதாரணமாக கோபம், போட்டி, பொறாமை, வஞ்சகம், காமம் போன்றவை அடக்கி நெறிமுறைப்படுத்த வேண்டியவை. அதாரணீய வேகம் என்றால் தடுக்கக்கூடாத உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் என்று பொருள். பசி, தும்மல், தண்ணீர் தாகம், அபான வாயு, மலம், சிறுநீர், இருமல், தூக்கம், மேல்மூச்சு, கொட்டாவி, கண்ணீர், வாந்தி, சுக்லம் ஆகியவையாகும்.


அபான வாயுவையும், மலத்தையும் அடக்கினால் வயிற்றுவலி, பசியின்மை, பார்வைக்குறைவு, இருதய நோய்கள், தலைவலி போன்றவை ஏற்படும். மலத்தை அடக்குவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். சிறுநீரை அடக்கினால் நீர்க்கடுப்பு, எரிச்சல், வலி, சக்தியின்மை போன்றவை ஏற்படும். அவ்வாறு அடக்க நேர்ந்தால் உடனடி பாதிப்பு தெரியாவிட்டாலும் நிறைய நோய்கள் வந்தடையும். ஏப்பம், தும்மல் அடக்கினால் தலைவலி, கழுத்துவலி போன்றவை ஏற்படும். தலைவலி, ஜலதோஷம், மூச்சு முட்டு, ஆசனக்கடுப்பு, நெஞ்சுவலி போன்றவை படையெடுக்கும்.


தண்ணீர் தாகத்தை அடக்க பழகிவிட்டால் நாவறட்சி ஏற்பட்டு ‘டீஹைட்ரேஷன்’ உண்டாகும். தலைசுற்றல், மயக்கம் வரும். தூக்கம் என்பது மனித ஆரோக்கியத்தின் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. தூக்கம் வரும்போது உடனே தூங்கிவிடுவது நல்லது. இரவில் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி விடியற்காலை குறிப்பிட்ட நேரத்தில் எழுந்தரிக்க பழகுவது சிறப்பானது. வேலைக்காக இரவில் விழித்திருப்பது பின்னாளில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.


இதைத்தான் தலாய்லாமா மனிதனின் விசித்திர பழக்கம் என்று குறிப்பிட்டார். இளமையில் இரவு பகல் பாராமல் உழைத்து பணத்தை சேர்க்கிறான். சரியான தூக்கம், ஓய்வு இல்லாததால் விரைவிலேயே உடல்நலத்தை கெடுத்துக்கொள்கிறான். பின் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் செலவு செய்து தொலைந்த உடல்நலத்தை மீட்கிறான் என்றார். உண்மைதான். மனிதன் சரியான ஓய்வு, சரியான தூக்கம் போன்றவற்றை இளமையில் இருந்தே கடைபிடித்தால் பின்னாளில் உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய வேண்டியதில்லை. கூட்டிக்கழித்துபார்த்தால் உடலை கெடுத்து இளமையில் சம்பாதிக்கும் பணம் பின்னாளில் அந்த உடல் ஆரோக்கியத்திற்கு செலவாகிறது. அதனால் தேவையான அளவு உழைத்து ஆரோக்கியத்தை காப்போம் என்கிறது ஆயுர்வேதம்.

பாலைவனங்கள்!















செடிகளோ, உயிரினங்களோ வளர முடியாத பாலைவனங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலில் வருவது வெப்பப் பாலைவனங்கள். இவை வெப்ப மண்டலத்தில் காணப்படும். ஆப்பிரிக்காவில் அரேபியன், நமீப், காலஹாரி போன்ற பாலைவனங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.



இரண்டாவதாக குளிர் பாலைவனங்கள். இவை கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இருப்பவை. மலைத்தொடர்களின் அடிவாரங்களில் உருவாகும் இதுபோன்ற பாலைவனங்களில் பகலில் அதிக வெப்பம் காணப்பட்டாலும், இரவில் கடும் குளிர் வாட்டும். ஆண்டுக்கு 25 செ.மீ. மழை பெய்யும். இந்த காலநிலை காரணமாக ஏராளமான செடி, கொடிகள் இங்கே வளர்கின்றன. மத்திய ஆசியாவில் சோபி, தென்அமெரிக்காவில் பட்டகோனியன் போன்றவை சில குளிர் பாலைவனங்கள்.



துருவப் பாலைவனங்கள் மூன்றாவது வகை. அண்டார்டிகா, யூரேஷ்யா, வட அமெரிக்காவின் வடபகுதி, கிரீன்லாந்து போன்ற இடங்களில் உள்ள பனி நிறைந்த பாலைவனங்களைப் போல அதிக அளவில் மணல் காணப்படாவிட்டாலும் பாறைகள் இருக்கும். மிகக் குறைந்த அளவில் உயிரினங்கள் காணப்படும்.



உலகிலேயே சகாரா பாலைவனத்தை விட வறண்ட பகுதி அண்டார்டிகா. பாலைவனங்களில் உயர்ந்த பட்ச வெப்பநிலை 58 டிகிரி செல்ஷியஸ் வரை செல்லும். குளிர் மைனஸ் 88 டிகிரி. அதற்கு கீழேயும் சென்று விடும். பாலைவனங்களில் 259 மி.மீக்கு மேல் மழை பெய்வதில்லை.


பாலைவன மேகங்களை அவற்றின் தோற்ற வடிவிற்கு ஏற்ப பலவாறாகப் பிரிக்கலாம். சிரஸ் வகை மேகங்கள் வளையல் பூச்சிகள் வடிவில் சுருண்ட வடிவில் காணப்படும். இவை சுமார் 12 கி.மீ. உயரம் வரை பரவி நிற்கும்.
‘குமுலஸ்’ வகை மேகங்கள் வட்டவடிவக் குவியல்களாய் உருண்டு திரண்டு நிற்கும். ‘ஸ்ட்ராயஸ்’ வகை மேகங்கள் ஆகாயத்தில் சிதறிக் கிடக்கும் பஞ்சுகள் போல் காணப்படும். ‘நிம்பஸ்’ வகை மேகங்கள் பயங்கர இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய கார்மேகங்களாகும்.

ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட்!

கம்ப்யூட்டரில், விண்டோஸ் சிஸ்டத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கையில், சற்று நேரம் ஓய்வெடுக்க விரும்பினால், அதன் இயக்கத்தை முடிவிற்குக் கொண்டு வராமல், சற்று நேரம் செயலற்ற நிலையில் வைத்திருக்கலாம். இதனால், மின் சக்தி மிச்சமாகும். அனைத்து சாதனப் பிரிவுகளும் ஓய்வெடுக்கும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான வழி முறைகளை இரண்டு வகைகளில் தருகிறது. அவை ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் (Sleep மற்றும் Hibernate) விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Hybrid Sleep என்ற வசதியும் தரப்பட்டுள்ளது. இந்த வசதிகள், லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு, மின் சக்தி மிச்சப்படுத்துவதில் அதிக உதவி செய்கின்றன. லேப்டாப் கம்ப்யூட்டர்களைப் புதியதாகப் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக நம் மாணவர்களுக்கு இந்த தகவல்கள், முதல் முதலாகப் பெறுபவையாக இருக்கும். இவற்றைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

 



1. ஸ்லீப் மோட் (Sleep mode):


 இது மின்சக்தியை மிச்சப்படுத்தும் ஒரு சிறந்த வழி. டிவிடியைப் பயன்படுத்தி திரைப்படங்களைப் பார்க்கையில், வேறு ஒரு சிறிய வேலைக்குச் செல்ல வேண்டும் என எண்ணினால், pause பட்டன் போட்டு நிறுத்துவது போல இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறது. இதனை இயக்குகையில், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படுகின்றன. திறந்து வைத்து செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் டாகுமெண்ட்கள், இயங்கும் அப்ளிகேஷன்கள் அனைத்தும் மெமரியில் வைக்கப்படுகின்றன. இவற்றை மீண்டும் கொண்டு வர விரும்பினால், அவை சில நொடிகளில் இயக்கத்திற்குக் கிடைக்கும். இது ஏறத்தாழ "Standby” என்பது போலத்தான். சிறிய காலப் பொழுதிற்கு நம் கம்ப்யூட்டர் வேலையை நிறுத்த வேண்டும் எனில், இந்த வழியை மேற்கொள்ளலாம். இந்த நிலையில் (Sleep mode) கம்ப்யூட்டர் அவ்வளவாக, மின் சக்தியைப் பயன்படுத்துவதில்லை.



2. ஹைபர்னேட் (Hibernate):


இந்த நிலையில், திறந்து வைத்து நாம் பயன்படுத்தும் டாகுமெண்ட்கள் மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன்கள் அனைத்தும், ஹார்ட் டிஸ்க்கிலேயே சேவ் செய்யப்படுகின்றன. மின்சக்தி பயன்படுத்துவது அறவே நிறுத்தப்படுகிறது. மீண்டும் சக்தி அளிக்கப்படுகையில், செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்தும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு கிடைக் கின்றன. அதிக நேரம் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற சூழ்நிலையிலும், அதே நேரத்தில், பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை நிறுத்தி மூடி வைக்கும் எண்ணம் இல்லை என்றாலும், இந்த நிலையையே பயன்படுத்த வேண்டும்.



3. ஹைப்ரிட் ஸ்லீப் (Hybrid Sleep):


மேலே 1 மற்றும் 2 நிலைகளில் சொல்லப்பட்ட ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் நிலைகள் இரண்டும் இணைந்த நிலையே இது. இது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கானது. இந்த நிலையை மேற்கொள்ளும் போது, திறந்திருக்கும் டாகுமெண்ட் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தும், மெமரியிலும் ஹார்ட் டிஸ்க்கிலும் சேவ் செய்து வைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் மிகவும் குறைவான மின்சக்தி செயல்பாட்டில் வைக்கப்படுகிறது. இதன் மூலம், மீண்டும் கம்ப்யூட்டர் செயல்பாட்டிற்கு வர, மிக மிகக் குறைவான நேரமே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த நிலை, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் சிஸ்டத்தில், மாறா நிலையில் செயல்பாட்டு நிலையில் அமைக்கப் படுகிறது. லேப்டாப் கம்ப்யூட்டரில், இது செயல்பாடு இல்லா நிலையில் உள்ளது. இதனை இயக்கியவுடன், இது உங்கள் கம்ப்யூட்டரைத் தானாகவே, ஹைப்ரிட் ஸ்லீப் நிலையில் வைக்கிறது.

இந்த நிலை, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், மின்சக்தி பிரச்னை ஏற்பட்டால் உதவியாய் இருக்கும். மின்சக்தி மீண்டும் கிடைக்கும் போது, மெமரியிலிருந்து பைல்கள் கிடைக்காத நிலையில், விண்டோஸ், ஹார்ட் டிஸ்க்கிலிருந்து அவற்றை எடுத்து இயக்குகிறது.


4. எப்படி பெறுவது?:

Sleep மற்றும் Hibernate நிலைகளை, ஷட் டவுண் பட்டன் அருகே உள்ள ஆரோ பட்டனை அழுத்தி, ஆப்ஷன் மெனுவில் பெறலாம்.இவை காணப்படவில்லை என்றால், அதற்கான காரணங்கள் கீழே குறிப்பிட்டவற்றில் ஒன்றாக இருக்கலாம்.


1. உங்களுடைய வீடியோ கார்ட், ஸ்லீப் நிலையை சப்போர்ட் செய்திடாமல் இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், வீடியோ கார்ட் நிறுவன இணைய தளத்தில், இதனை சப்போர்ட் செய்திடும் ட்ரைவர் புரோகிராமை இறக்கி இயக்கவும்.



2. உங்கள் கம்ப்யூட்டரில், உங்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டிவ் உரிமை இல்லாத பயனாளராக நீங்கள் செயல்பட்டாலும், இந்நிலை உங்களுக்குக் கிடைக்காது.


3. மின்சக்தி மிச்சப்படுத்தும் வழிகள் (powersaving modes), கம்ப்யூட்டரின் பயாஸ் சிஸ்டத்தால், இயக்கவும் மூடவும் செய்யப்படு கின்றன. இவற்றை இயக்கத்திற்குக் கொண்டு வர, உங்கள் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடுங்கள். அடுத்து பயாஸ் செட் அப் புரோகிராம் செல்லுங்கள். ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இதற்கான கீ வேறுபடும். எனவே, எந்தக் கீயை அழுத்தினால், பயாஸ் புரோகிராமிற்குச் செல்ல முடியும் என்பதனை அறிந்து செல்லவும். பொதுவாக, கம்ப்யூட்டர் பூட் செய்யப்படுகையிலேயே, பயாஸ் புரோகிராம் செல்ல என்ன செய்திட வேண்டும் என்பதற்கான வழிமுறை காட்டப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு, கம்ப்யூட்டருடன் வந்த குறிப்பு ஏட்டினைப் பார்க்கவும். அல்லது கம்ப்யூட்டரைத் தயார் செய்த நிறுவனத்தின் இணைய தளம் செல்லவும்.


4. கம்ப்யூட்டரை எழுப்புதல்: இந்த செயல்படா நிலையிலிருந்து எந்த வழிகளில், கம்ப்யூட்டரைச் செயல்படும் நிலைக்குக் கொண்டு வரலாம்? பெரும்பாலான கம்ப்யூட்டர்களில், பவர் பட்டனை அழுத்துவதன் மூலம், செயல்படும் நிலைக்குக் கொண்டு வரலாம். சிலவற்றில், கீ போர்டில் ஏதேனும் ஒரு கீ அல்லது மவுஸ் பட்டன் அழுத்துவதன் மூலம் இயக்க நிலைக்குக் கொண்டு வரலாம். சில லேப்டாப் கம்ப்யூட்டர்களில், அதன் மூடியைத் திறந்தாலே, செயல்நிலைக்குக் கம்ப்யூட்டர் மாறிவிடும். இந்த வழியையும், கம்ப்யூட்டர் நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து அறியலாம்.


5. ஹைப்ரிட் ஸ்லீப் நிலையை அமைத்தலும் நீக்கலும்:


ஹைப்ரிட் ஸ்லீப் நிலையை கம்ப்யூட்டர் ஒன்றில் அமைத்திட, ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் செல்லவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில் Power Options என்பதில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில், Power Options காணப்படவில்லை என்றால், கண்ட்ரோல் பேனல் மேலாக வலது பக்கம் உள்ள வியூ (View) என்பதில் உள்ள கீழ் விரி மெனுவினைத் திறக்கவும். இதில் Large icons அல்லது Small icons என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். கேடகிரி (Category) வியூவில், System and Security என்பதில் கிளிக் செய்து, இதில் Power Options என்ற தலைப்பில் கிளிக் செய்திடவும்.


இங்கு Select a power plan என்ற பகுதி காட்டப்படும். இதில் அப்போதைய மின்சக்தி கட்டுப்பாடு குறித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தின் அருகே, Change plan settings என்பதற்கான லிங்க் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். இங்கு Change advanced power settings என்ற லிங்க்கும் கிடைக்கும். Sleep என்பதில் உள்ள ப்ளஸ் அடையாளத்தில் கிளிக் செய்தால், அனைத்து ஆப்ஷன்களும் காட்டப்படும்.
ஏற்கனவே, விரிக்கப்பட்டிருந்தால், அப்படியே அதில் உள்ள ஆப்ஷன்களைக் காணவும். Allow hybrid sleep என்பதன் அருகே உள்ள ப்ளஸ் அடையாளத்தினைக் கிளிக் செய்திடவும்.



பொதுவாக, பவர் சேவிங் திட்டத்தில், கம்ப்யூட்டர் தூங்கும் போது, அதனை இயக்கத்தில் கொண்டு வர முயற்சிக்கையில், விண்டோஸ் சிஸ்டம் பாஸ்வேர்ட் ஒன்றைக் கேட்கும். இது தேவை இல்லை என எண்ணினால், பவர் ஆப்ஷன் டயலாக் பாக்ஸில், இதனை நீக்குவதற்கான வழி கிடைக்கும். அதனைச் செயல்படுத்தவும்.



அனைத்தையும் அமைத்த பின்னர், சேவ் பட்டனில் கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் கட்டத்தில் மேல் வலது மூலையில் உள்ள எக்ஸ் அடையாளத்தில் கிளிக் செய்து வெளியேறவும்.


6. கம்ப்யூட்டர் தானாக இந்த நிலைகளை எடுப்பதனை எப்படி தடுப்பது? 


முன்பு கூறியபடி, கம்ப்யூட்டர் இந்த நிலைகளில் இருந்து மீள்கையில், பாஸ்வேர்ட் கேட்பதனை நாம் தடுக்கும் வகையில் செட் செய்திட முடியும். ஆனால், பேட்டரியில் இயங்கக் கூடிய லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இதில் ஒரு பிரச்னை உள்ளது. இத்தகைய கம்ப்யூட்டர்களில், ஸ்லீப் அல்லது ஹைபர்னேட் நிலையை முடிக்கையில், கவனமாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணியாற்றுகின்ற வேளையின் நடுவே, பேட்டரி முழுவதுமாகத் தன் சக்தியை இழப்பதாக இருந்தால், நாம் பயன்படுத்திய அல்லது உருவாக்கிய டேட்டாவினை இழந்துவிடுவோம்.



கம்ப்யூட்டர் ஸ்லீப் அல்லது ஹைபர்னேட் நிலைக்குச் செல்லுவதற்கான நேரத்தினை மாற்றலாம். கீழ்க்குறித்தபடி செயல்பட்டு மாற்றலாம்.
கண்ட்ரோல் பேனலில், Power Options என்ற பிரிவிற்குச் செல்லவும். Select a power plan திரையில், தற்போதைய பவர் ஆப்ஷன்ஸ் நிலைக்கு அருகே உள்ள Change plan settings என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.


On the Change settings for the plan என்ற விண்டோவில், Change advanced power settings என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு Sleep என்ற தலைப்பில் டபுள் கிளிக் செய்திடவும். நீங்கள் லேப்டாப் பயன்படுத்துபவராக இருந்தால், On battery or Plugged in என்பதில் கிளிக் செய்திடவும். இதனால், எடிட் பாக்ஸ் இயக்கப்படும். இங்கு கிடைக்கும் கீழ் நோக்கிய அம்புக் குறியை, Never என்பது தேர்ந்தெடுக்கப்படும் வரை அழுத்தவும்.


குறிப்பு:

  நீங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவராக இருந்தால், Setting கிளிக் செய்து, Never என்பது தேர்ந்தெடுக்கப்படும் வரை, இங்கு கிடைக்கும் கீழ் நோக்கிய அம்புக் குறியை அழுத்தவும். பின்னர், ஓகே கிளிக் செய்து, நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் அனைத்தையும் சேவ் செய்திடவும். பின்னர், முன்பு கூறியபடி கண்ட்ரோல் பேனல் விண்டோவையும் மூடவும்.
நீங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கு Hibernate நிலைதான் மிகச் சரியான தேர்வாக அமையும். ஏனென்றால், மற்ற இரு நிலைகளுடன் ஒப்பிடுகையில், இதுவே, அதிகமான மின் சக்தியை மிச்சம் செய்திடும்.

நோபல் பரிசு!

டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் பெயரில் 1901-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு  தினமான டிசம்பர் 10-ஆம்  தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடனிலும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் பரிசுத்தொகையாக தலா ரூ. 7 கோடியே 75 லட்சம் வழங்கப்படுகிறது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு

 பிரிட்டனைச் சேர்ந்த பீ ட்டர் ஹிக்ஸ் (84 வயது), பெல்ஜியத்தைச் சேர்ந்த ஃபிராங்கா எங்க்லர்ட் (80 வயது) ஆகியோர் இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிரபஞ்சம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத 16 துகள்கள் உள்ளன. கண்ணுக்குத் தெரியாமல் 17-ஆவதாக மேலும் ஒரு துகள் இருந்தாக வேண்டும் என்று 1964-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் கோட்பாட்டு ரீதியில் கண்டறிந்தனர். இது ‘ஹிக்ஸ் போஸான்’ அல்லது ‘கடவுள் துகள்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோட்பாடு ஸ்விட்சர்லாந்தில் உள்ள சிஇஆர்என் பரிசோதனைக்கூடத்தில் கடந்த ஆண்டு நிரூபிக்கப்பட்டது. இந்தத் துகள் இன்றி மனிதர்கள் உள்பட எவரும் வாழ முடியாது. இந்தத் துகளுடன் தொடர்பு இருப்பதால்தான், அ னைத்துப் பொருள்களுக்கும் எடை கிடைக்கின்றன. இந்த ஆராய்ச்சிக்காக இவர்கள் இருவரும் நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பீட்டர் ஹிக்ஸ், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை கௌரவப் பேராசிரியர்.    பெல்ஜியத்தில் உள்ள லைப்ரி டி பிரக்ஸல்ஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் எங்க்லர்ட்.     

மருத்துவத்துக்கான முதல் நோபல் பரிசு

அமெரிக்கப் பேராசிரியர்கள் ஜேம்ஸ் இராத்மேன், ரேண்டி டபிள்யூ.சேக்மேன், ஜெர்மன் பேராசிரியர் தாமஸ் சி.சூடாஃப் ஆகியோர் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டலின் செல்களுக்கு இடையே நடைபெறும் மூலக்கூறு பரிமாற்றத் தன்மையை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்து நோய்த் தடுப்புக்கு உரிய மருத்துவ வழிமுறைகளை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சர்க்கரை நோய்,  நரம்பியல் தொடர்பான உடல் நலப் பிரச்சினைகள், உடலின் நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு ஆகியவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் இவர்களின் செல் ஆராய்ச்சி இருந்தது.

ஜேம்ஸ் இ.ராத்மேன் (62 வயது), மெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தில் செல் உயிரியல் துறைத் தலைவர். ரே‘ண்டி டபிள்யூ.சேக்மேன் (64 வயது),  அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழக செல் உயிரியல் துறைப் பேராசிரியர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தாமஸ் சி.சூடாஃப் (57 வயது), அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயிரி-வேதியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

வேதியியலுக்கான நோபல் பரிசு

அமெரிக்காவைச் சேர்ந்த  மைக்கேல் லெவிட், மார்ட்டின் கார்ப்ளஸ், ரீக் வார்ஷெல் ஆகியோர் இந்த ஆண்டு  வேதியியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வேதியியல் செய்முறைகளை கம்ப்யூட்டர் மாதிரிகள் மூலம் உருவாக்குவதற்கு அடித்தளமிட்டதற்காக இவர்கள் இந்த  விருது பெறுகிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு ஸ்கூல் ஆஃப் மெடிசினில் பணியாற்றி வரும்  மைக்கேல் லெவிட், இங்கிலாந்து, இஸ்ரேலிய, அமெரிக்கா  குடியுரிமை பெற்றவர். ஸ்ட்ராஸ்போர்க்  பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மார்ட்டின்  கார்ப்ளஸ், மெரிக்காவில் வசிக்கும் ஆஸ்திரியர். தெற்கு கலிபோர்னியா  பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ரீக்  வார்ஷெல்,  அமெரிக்காவில் வசிக்கும் இஸ்ரேலியர்.

இயற்பியலில் முதல்  நோபல் பரிசு பெற்றவர்
வில்ஹம் கான்ட்ராட் ராண்டஜன்
ஜெர்மன்
கண்டுபிடிப்பு: எக்ஸ்ரே
விருது ஆண்டு:  1901


இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்
மேரி கியூரி
திருமணத்திற்கு முன்பு: போலந்து
திருமணத்திற்குப் பின்பு: பிரான்ஸ்
கண்டுபிடிப்பு: கதிர்வீச்சு
விருது ஆண்டு: 1903
வேதியியலுக்காக 1911இல் நோபல் பரிசு பெற்றவர்.


இயற்பியலில் மிகக்குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர்
லாரன்ஸ் பிராக் -  25 வயது
பிரிட்டன்
கண்டுபிடிப்பு: எக்ஸ்ரேக்களுக்குப் பயன்படும் கிரிஸ்டல் அமைப்பு.
மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவரும் இவர்தான்.
விருது ஆண்டு: 1915


இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற அதிக வயதானவர்
ரேமண்ட் டேவிஸ் ஜூனியர்
அமெரிக்கா
88 வயது
கண்டுபிடிப்பு:  காஸ்மிக் நியூட்ரினோஸ்
விருது ஆண்டு: 2002
 
மருத்துவத்துக்காக  முதல் நோபல் பரிசு  பெற்றவர்
எமில் டாலப் வான் பெங்ரிங்
ஜெர்மனி
கண்டுபிடிப்பு : சீரம் தெரபி
விருது ஆண்டு: 1901


மருத்துவத்துக்காக  நோபல் பரிசு பெற்ற முதல் பெண்
ஜெர்ட்டி கோரி
அமெரிக்கா  
கண்டுபிடிப்பு: கிளைக்கோஜன் குறித்த ஆய்வு
விருது ஆண்டு : 1947


மருத்துவத்துக்காக  மிகக் குறைந்த வயதில்  நோபல் பரிசு பெற்றவர்
பிரெடரிக் பாண்டிங்
கனடா
வயது :32  
கண்டுபிடிப்பு: இன்சுலின்
விருது ஆண்டு: 1923


மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்றஅதிக வயதானவர்
பெடன் ரூஸ்
அமெரிக்கா
87 வயது
கண்டுபிடிப்பு: வைரஸை தூண்டும் கட்டி குறித்த ஆய்வு
விருது ஆண்டு: 1966


இயற்பியலில் இதுவைரை நோபல் பரிசு பெற்றவர்கள்  107 பேர்.
அதில் பெண்கள் 2 பேர்  
இயற்பியலுக்காக 2 முறை நோபல் பரிசு பெற்றவர்   ஜான் பர்டீன்
மருத்துவத்துக்காக இதுவைரை நோபல் பரிசு பெற்றவர்கள்  105 பேர்
அதில்  பெண்கள்  10 பேர்
 

போய் வா தலைவா!


24 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டின் இணையற்ற நட்சத்திரமாக ஒளிர்ந்த  சச்சின் தெண்டுல்கர், விரைவில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப்போகிறார்.  அவரது பயணத்தின் சில தடங்கள்

துவங்கியது டென்னிஸ் பந்தில்

மும்பையின் முன்னணி கோச்  அச்ரேக்கரிடம் கிரிக்கெட் பயிற்சியில் குட்டிப்பையன்  சச்சினை சேர்த்துவிட அழைத்துச்சென்றார் அண்ணன் அஜித். பவ்யமாக கையைக் கட்டிக்கொண்டு பம்மிப் பம்மி நின்ற சச்சினிடம் அச்ரேக்கர் கேட்ட முதல் கேள்வி. ‘நீ கிரிக்கெட் பால்ல விளையாடிருக்கியா பையா?’

‘விளையாடியதில்லை சார். டென்னிஸ் பந்தில் மட்டும்தான் தெருவோரம் விளையாடியிருக்கேன்’ என்றான் குட்டிப்பையன். அவ்வளவுதான் போச்சு என அண்ணன் உள்ளுக்குள் உதறிக் கொண்டிருக்க
‘அப்படீனா நாளைலருந்து பயிற்சிக்கு வந்துடு’ என்றார் அச்ரேக்கர்.

அடுத்த நாள்...

அச்ரேக்கரை அசத்த வேண்டும், அதற்கு  எப்படியெல்லாம் ஷாட்கள் அடிக்க வேண்டும் என்று இரவெல்லாம் தூங்காமல் யோசித்துக்கொண்டிருந்தான் குட்டிப்பையன் சச்சின். முதன்முதலாக பயிற்சிக்குச் செல்லும்போது அண்ணன் அஜித்திடம் ‘அண்ணா! அச்ரேக்கர் சாருக்கு எந்த ஷாட் ரொம்பப் பிடிக்கும், நான் தூக்கி அடிக்கவா... ஸ்ட்ரைட்டா அடிக்கவா?’ எனக் கேட்டுக் கேட்டு ஒரே தொல்லை.

முதல் நாள் பயிற்சி தொடங்கியது. சச்சினால் சரியாக பேட் பண்ண முடியவில்லை. சச்சினுக்கு கண்ணீரே வந்துவிட்டது. அச்ரேக்கர், ‘இந்தப் பையன் சரியா வரமாட்டானு தோணுதேப்பா’ என்று அண்ணன் அஜித்திடம் தயங்கித் தயங்கிக் கூறினார்.

ஆனால் அண்ணன் அஜித்தோ, ‘சார்! நிச்சயமா அவன் நல்லா விளையாடுவான்.  ப்ளீஸ்!  அவனுக்கு இன்னொரு வாய்ப்புக் குடுங்க. ஏதோ பதட்டம் ப்ளீஸ் ப்ளீஸ்’ எனக் கெஞ்சினார். மீண்டும் சச்சினுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இம்முறை பட்டையைக் கிளப்பினான் பையன். சச்சின் ஆடிய விதம் அச்ரேக்கருக்கு திருப்தி அளிப்பதாக இருந்தது. சச்சின், அச்ரேக்கரின் ஆஸ்தான சிஷ்யனானான்.

அதுவரை பொழுதுபோக்கு விஷயமாக இருந்த கிரிக்கெட், சச்சினுக்கு முழுநேர விஷயமாக மாறியது.

படிப்பா? பயிற்சியா?

தினமும் காலை ஆறு மணிமுதல் எட்டு வரை கிரிக்கெட் வலைப்பயிற்சி. பிறகு பள்ளி. மீண்டும் மூன்று முதல் ஏழு வரை பயிற்சி. பிஞ்சுக் கால்கள் சோர்வடைந்து எட்டு மணிக்கே உணவுகூட எடுத்துக்கொள்ளாமல் உறங்கிவிடுவான் சிறுவன் சச்சின். அதோடு தினமும் வெகுதூரத்தில் இருந்த பள்ளிக்குச் சென்று திரும்புவது வேறு பிரச்சினையாக இருந்தது. அது மட்டுமன்றி,  பயிற்சிபெறும் கிரிக்கெட் மைதானத்திலிருந்து பள்ளி வெகுதொலைவில் இருந்தது. எத்தனை அலைச்சல்?

அதனால் அப்போது படித்துக்கொண்டிருந்த பாந்த்ரா பள்ளியை விட்டு  சாராதாஷ்ரமம் பள்ளியில் சேரும் யோசனை தோன்றியது சச்சினுக்கு. சாராதாஷ்ரமம் பள்ளி, கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரும் பள்ளியாக வேறு இருந்தது. ஆனால் சச்சினின் தந்தை ரமேஷுக்கோ சச்சின் என்ஜினீயராகவோ, டாக்டராகவோ ஆகவேண்டும் என்பதே ஆசை. பாந்த்ரா பள்ளியே அதற்கேற்ற தரமான கல்வியை அளித்து வந்தது. கிரிக்கெட்டா, படிப்பா என்பதை சச்சினும் அவனுடைய தந்தையும் முடிவுசெய்ய வேண்டிய இக்கட்டான தருணம்.

தன்னுடைய ஆசையைவிட கிரிக்கெட் வீரனாக ஆகவேண்டும் என்கிற மகனுடைய கனவே அவருக்கு முக்கியமானதாக இருந்தது. அதனால் சச்சின் விருப்பப்படியே சாராதாஷ்ரமம் பள்ளியில் சேர ஏற்பாடு செய்தார். சிக்கல் அத்தோடு தீரவில்லை. சாராதாஷ்ரமம் பள்ளியோ சச்சினின் வீட்டிலிருந்து வெகுதொலைவில் இருந்தது. தினமும் அங்கே போய்வருவது சிரமம் என்பதால் அண்ணன் அஜித் ஒரு ஏற்பாடு பண்ணினார். சச்சின், பள்ளிக்கு அருகில் இருக்கிற மாமா ஒருவரின் வீட்டில் தங்கிப் படிப்பது. விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வருவது, இதன்மூலம் ஏரியா நண்பர்களோடு சேர்ந்து வெட்டித் தனமாக சுட்டித்தனம் பண்ணாமல் இருப்பான். அதோடு, கிரிக்கெட் மற்றும் படிப்பிலும் ஆர்வம் செலுத்துவான் என்பது அவருடைய திட்டம். அது ஒரு சரித்திரத்தின் ஆரம்பம்.

பட்டம் பணால்

பாகிஸ்தானில் விளையாட இருந்த பத்தொன்பது வயதுக்கு உட்பட் டோருக்கான அணியில் தானும் இடம்பெறுவோம் என்று ஆர்வமாகக் காத்திருந்தார் சச்சின். பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின் அதே தேதியில் சச்சினுக்கு பத்தாம்வகுப்பு இறுதித் தேர்வும் நடைபெற இருந்தது. படிப்பா, விளையாட்டா என்று மீண்டும் ஒருமுறை முடிவெடுக்க வேண்டிய நிலை. என்னதான் மகன் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரனாக வரவேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் தந்தை ரமேஷூக்கும் அம்மா ரஜினிக்கும் பையன் பரீட்சையை விட்டுவிட்டு பாகிஸ்தானில் போய் கிரிக்கெட் ஆடுவதில் விருப்பமில்லை. காரணம், கல்லூரிப்  பேராசிரியரான ரமேஷுக்கு தன்னுடைய மகன் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவன் என்கிற அவமானம் நேர்ந்து விடுமோ என்கிற பயம். குழப்பமான மனநிலையில் இருந்த அவர், இறுதியாக மகனுடைய விருப்பமே தன் விருப்பம் என்று சச்சின் பாகிஸ்தான் செல்ல  சம்மதித்தார். அந்தப் பத்தாம் வகுப்புத் தேர்வில் மற்ற எல்லாப் பாடங்களிலும் பாஸ் செய்த சச்சின், ஆங்கிலத் தேர்வில், ‘கோட்’ அடித்தார். பின் தனித் தேர்வராக எழுதி அதிலும் தேறினார். ஆனால்  இன்றுவரை அவரது அப்பாவின் ஆசையான பட்டப் படிப்பை முடிக்கவே இல்லை.

அப்பா,  ஆட்டோ கிராஃப் போடுங்க

மிகக் குறைந்த வயதில் (16) டெஸ்ட் போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட வீரர் சச்சின். இதற்கான பிசிசிஐயுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டி இருந்தபோது சச்சினால் கையெழுத்திட முடியாத சூழல். ஏனெனில், இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டுமென்றால் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். ஆனால் சச்சினுக்கு 18 வயது நிரம்பாத நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்துடனான பாகிஸ்தான் சுற்றுப்பயண ஒப்பந்தத்தில் சச்சினுடைய அப்பா ரமேஷ்தான் கையெழுத்திட்டார்.

மூக்கு உடைந்தாலும்...

 1989-ஆம் ஆண்டு, சியால்கோட்டில் பாகிஸ்தானுடனான நான்காவது டெஸ்ட் போட்டி. இந்தியாவின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டுபோல சரிந்துகொண்டிருந்தது. ஆக்ரோஷமாக பந்து வீசிக்கொண்டிருந்தனர் புயல்வேகப் பந்துவீச்சாளர்களான இம்ரான்கான், வாக்கர் யூனுஸ் மற்றும் வாசிம் அக்ரம். ஸ்கோர் 38 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள். பரிதாப நிலை. 16 வயதுப் பையன் சச்சினும் கொஞ்சம் அனுபவம் வாய்ந்த நவ்ஜோத் சிங் சித்துவும் நிலைத்து நின்று ஆடி ஸ்கோரை 104-க்கு உயர்த்தினர். அந்த நேரத்தில் வக்கார் யூனிஸ் வீசிய பந்து, சச்சினின் முகத்தை பதம் பார்த்தது (அந்தக் காலத்தில் ஹெல்மெட்டில் முகத்தை மூடும் வலைக்கம்பி பயன்படுத்துவது அரிது). பலமான அடி. மூக்கிலிருந்து கொடகொடவென ரத்தம் கொட்டுகிறது. மைதானத்தில் அப்படியே தடுமாறி விழுகிறார் சச்சின். ஸ்ட்ரெச்சர் வந்தது. முதலுதவி அளிக்கப்பட்டது. ‘நீ பெவிலியனுக்குப் போ’ என்றார்கள் டாக்டர்கள். அணி தள்ளாடிக் கொண்டிருந்தாலும் கேப்டனாக இருந்த ஸ்ரீகாந்த்தும் அதையே கூறினார். ஆனால் சச்சின் மறுத்துவிட்டார். விளையாடியே தீருவேன் என்று,  ஒரு கர்ச்சீப்பை நனைத்து மூக்கில் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார்.  ‘ஐயாம் ஆல்ரைட் ஐகேன் ப்ளே’ என்று சொல்லிவிட்டு அடுத்த பந்தை எதிர்கொள்ள ஆயத்தமானார். வந்தது பந்து... மீண்டும் வாக்கார் யூனூஸ்... எதிரில் நிற்கும் சிறுவன் அடிபட்டதைக் கண்டும் அவருக்கு இரக்கம் தோன்றவில்லை. இரக்கப்படும் இடமும் நேரமும் அதுவல்ல. சீற்றம் குறையாமல் பாய்ந்து வந்தது பந்து.  அற்புதமான ஒரு ஸ்கொயர் ட்ரைவ். பவுண்ட்ரி! அடுத்த பந்து இம்முறை இலக்கணமாக எழுதி வைக்கப்பட வேண்டிய கவர் ட்ரைவ். இன்னொரு பவுண்ட்ரி... அதற்குப் பிறகு அற்புதமாக ஆடி 57 ரன்களை எடுத்துவிட்டுத்தான் அவுட்டானார் சச்சின்.

காதல் ரோஜா

அப்போது சச்சினுக்கு 19 வயது. சச்சினின் உருவமும் புகழும் அவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகளை பெற்றுத் தந்திருந்தது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க இளம் பெண்கள் ரகசியமாக இதயத்திற்குள் சச்சினை ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்த காலம்.

ஆனால் விழாவொன்றில் ஏதேச்சையாகப் பார்த்த அஞ்சலி மீது சச்சினுக்கு காதல் அரும்பியது. சச்சின் கல்லூரிப் படிப்பைக் காணாதவர். அஞ்சலி மும்பை மருத்துவக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அதுவும் போக. அஞ்சலிக்கு சச்சினைவிட நான்கு வயது அதிகம்! தேசம் முழுக்க தொலைக்காட்சியில் பார்த்த முகம் என்பதால் எங்கே போனாலும் யாராவது ஐந்து பேர் ஆட்டோகிராஃப் நோட்டை நீட்டிக்கொண்டு நிற்பார்கள். பிரைவசி என்பதே கிடையாது. இதில் எப்படி சந்தித்துக் கொள்வது? தலையில் தொப்பி போட்டுக்கொண்டு மாறுவேடத்தில் காதலியோடு வீட்டுக்குத் தெரியாமல், ‘ரோஜா’ படம் பார்த்ததை பேட்டிகளில் குறிப்பிடுகிறார் சச்சின். தொப்பி மட்டுமல்ல, கறுப்புக் கண்ணாடி, விக் என்று மாறுவேடங்கள் போட்டுக்கொண்டு அஞ்சலியைப் பார்க்கப் போவார். 1995-இல் இருவீட்டாரும் பச்சைச்கொடி காட்ட... 22 வயதேயான சச்சினுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

ஐஸ்கட்டிகளோடு ஆட்டம்

1999. சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிரான  டெஸ்ட் போட்டி. இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது. சச்சின் மட்டும் தாக்குப்பிடித்து ஆடிக்கொண்டிருக்கிறார். அவர் வீழ்ந்தால் ஆட்டம் குளோஸ். அந்த நேரம் பார்த்து பல நாட்களாக தொந்தரவு பண்ணிக் கொண்டிருந்த முதுகு வலி உச்சமடைகிறது. நிற்கக்கூட முடியவில்லை.

ஆனாலும் முதுகில் ஐஸ்கட்டிகளை கட்டிக்கொண்டு ஆட ஆரம்பித்தார். 273 பந்துகள், 407 நிமிடங்கள் தாக்குப்பிடித்து விளையாடி சதமடித்தார். சதமல்ல முக்கியம்,  இந்திய அணியை எப்படியாவது தோல்வியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்கிற வேகமே அவரை வலியையும் பொறுத்துக்கொண்டு களத்தில் நிற்க வைத்தது. இறுதியில் வலி வென்றது. இந்தியா தோற்றது. ஒரு கட்டத்தில் தவறான ஷாட் அடித்து அவுட்ஆனார்.  சச்சினின் அர்ப்பணிப்பை பாகிஸ்தான் பத்திரிகைகளே பாராட்டின. இரண்டு முறை காயங்களால் அவதிப்பட்டபோதும் ஒவ்வொரு முறையும் மீண்டு வந்து மீண்டும் மீண்டும் சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர் சச்சின்.

தந்தையா? தாய்நாடா?

 1999 மே மாதம். இங்கிலாந்தில் உலகக் கோப்பை போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன. நாம் உலகக் கோப்பையை வென்று 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்தியா மீண்டும் வெல்ல வேண்டும் என்று நாடு முழுக்க பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்த நேரம். அந்தப் பதினாறு ஆண்டு காலத்தில் மற்ற நாடுகளும் வலுவடைந்திருந்தன. குறிப்பாக ஸ்ரீலங்கா. தகுதிப் போட்டிகளிலேயே அழுத்தம் ஆரம்பித்து விட்டது. சச்சின் களம் இறங்க வேண்டிய வேளை.  சச்சினின் அப்பா ரமேஷ் டெண்டுல்கர்,  மும்பையில் ஹார்ட் அட்டாக்கில் காலமாகிவிட்டார் எனச் செய்தி வருகிறது. அவர் சச்சினுக்கு அப்பா மட்டுமல்ல, நண்பரும் கூட. சச்சினுடைய அப்பாவிற்கு கிரிக்கெட் மீது பெரிய ஆர்வம் கிடையாது. அவர் கவிஞர். ஆனாலும் தன் கனவுகளை முறித்துப் போடாமல் அதற்கு உரமிட்டு வளர்த்தவரின் நினைவுகளால் நெஞ்சம் கனமேற கண்ணீரை விழுங்கிக்கொண்டு ஆடுகிறார் சச்சின். காரணம், தேசத்தின் மானம் அவர் கைகளில். பத்து மணி நேரப் பயணத்திற்குப் பின் இந்தியா வருகிறார். பயணக் களைப்பு. துக்கம். விதவையாகிவிட்ட  தாயைப் பார்க்கும்போது மனம் ரணமாகிறது. வாய்விட்டு அழக்கூட முடியாமல் மீடியா துரத்துகிறது. அப்போது சச்சினுக்கு வயது 26.

இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்கிறார். அடுத்த போட்டி இரண்டு நாட்களில் நடக்க இருக்கிறது. இரண்டே நாட்கள் இருந்து விட்டு  அடுத்த போட்டியில் ஆட வந்து விடுகிறார். அந்தப் போட்டியில் இந்தியா எதிர்கொள்ள இருந்த அணி கென்யா. அப்படி ஒன்றும் வலுவான அணி அல்ல. ஆனால் தகுதிப் போட்டியில் ஒவ்வொரு வெற்றியும் முக்கியம். அப்பாவின் நினைவுகளோடு ஆடினார் சச்சின். அன்று அவர் எடுத்த ரன்கள் 140 (101 பந்துகளில்) .

அதைப் பற்றி பின்னாளில் சச்சின் ஒருமுறை சொன்னார்: ‘அம்மா சொன்னார்... போ, போய் விளையாடு. தாய் முக்கியம்தான். ஆனால் தாய்நாடு அதைவிடப் பெரிது. அதைவிட முக்கியம்’.

தேசம் பெரிது. அதை மறக்காத அந்தக் குள்ள மனிதன் உண்மையில் உயரமானவன்.

இவை வெறும் எண்கள் அல்ல;24 ஆண்டுகால உழைப்பு

50024    எல்லாவித உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து அடித்த ரன்கள்
 
34273    எல்லாவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அடித்த ரன்கள்

18426    ஒருநாள்  போட்டிகளில் அடித்தவை (உலகிலேயே இதுதான் அதிகம்)
 
15837     டெஸ்ட் போட்டிகளில் அடித்த ரன்கள்

15310   ஒருநாள் போட்டிகளில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி அடித்த ரன்கள் (45 சதம் மற்றும் 75 அரைசதங்கள் இதில் அடங்கும்)
 
13408    டெஸ்ட் போட்டிகளில் 4-ஆவது ஆட்டக்காரராக களமிறங்கி விளாசியவை

  8705     வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அடித்தவை (உலகிலேயே அதிகம்)
 
  6707     ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே (ஒருநாள் மற்றும் டெஸ்ட்) அடித்த ரன்கள். சராசரி 49.68
 
  3113     இலங்கைக்கு எதிராக அடித்த ரன்கள்

  2278     உலகக் கோப்பை போட்டிகளில் குவித்த ரன்கள்

  1894     1998-ஆம் ஆண்டு மட்டுமே அடித்த ரன்களின் எண்ணிக்கை. இதுவரை ஒரே ஆண்டில் அடிக்கப்பட்டவற்றில் இதுவே அதிகம்

  1562     2010-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே   அடித்த ரன்கள்

    866     ஒருநாள் போட்டிகளில் சச்சினோடு விளையாடிய வீரர்களின் எண்ணிக்கை  (தன்னுடைய மற்றும் எதிரணி இரண்டும் சேர்த்து)
 
    673    2003 உலகக் கோப்பையில் குவித்த ரன்கள் (உலகக் கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச  ரன்கள் இதுவே)
 
    593    டெஸ்ட் போட்டிகளில் சச்சினோடு விளையாடிய வீரர்கள் எண்ணிக்கை (எதிரணி சேர்த்து)
 
    463     சச்சின் ஆடிய ஒருதினப் போட்டிகளின் எண்ணிக்கை

    264     சிக்ஸர்கள் எண்ணிக்கை

    185     ஏப்ரல் 1990 தொடங்கி ஏப்ரல் 1998 வரை ஓய்வின்றி தொடர்ச்சியாக கலந்துகொண்ட ஒருதினப்  போட்டிகளின் எண்ணிக்கை

    118     டெஸ்ட் போட்டிகளில் அடித்த 50 ப்ளஸ் ஸ்கோர்கள் (உலக சாதனை)
 
    100     அடித்த சதங்கள்

      96     ஒருதினப் போட்டிகளுக்காக ஆடிய மைதானங்களின் எண்ணிக்கை

      70     சச்சின் விளையாட இந்தியா வென்ற டெஸ்ட் வெற்றிகள்

      62     ஒருநாள் போட்டிகளில் பெற்ற ஆட்டநாயகன் விருதுகள்

      51     டெஸ்ட்போட்டிகளில் அடித்த சதங்கள்

      49     ஒரு நாள் போட்டிகளில் அடித்த சதங்கள்

      15     ஒரு நாள் போட்டிகளில் வென்ற தொடர் நாயகன் விருதுகள்
 
      14     டெஸ்ட் போட்டிகளில் வென்ற ஆட்ட நாயகன் விருதுகள்

      14     ஆஸ்திரேலியாவின் ப்ரெட்லீ சச்சினை அவுட்டாகியதன் எண்ணிக்கை

        7     நாடுகளுக்கு எதிராக சச்சின் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்

        6     முறை சிக்ஸ்ர்கள் அடித்து தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்துள்ளார்

        6     முறை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருமுறை வெற்றி.
 
        5     முறை ஒரு நாள் போட்டிகளில் 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்

        3     முறை 99 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்

        2     சதங்களாவது எல்லா டெஸ்ட் அந்தஸ்து பெற்ற எல்லா நாடுகளுடனும் அடித்துள்ளார்
 
        1     ஒரு நாள் போட்டிகளில் சதமடித்த முதல் வீரர்

       1     ரஞ்சிப் போட்டி, துலிப்ட் ராபி,ஈரானி டிராபி என மூன்றிலும் தன் முதல் போட்டியிலேயே சதமடித்து சாதனை புரிந்தவர்

        0     தன்னுடைய  முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் எடுத்த ரன்கள்!

Micromax A250 Canvas ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்!

மைக்ரோமக்ஸ் நிறுவனம் தனது புதிய வடிவமைப்பில் உருவான Micromax A250 Canvas எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.


கூகுளின் Android 4.2.1 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் இக்கைப்பேசியானது 5 அங்குல அளவுடையதும் 1920 x 1080 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது. 


இது தவிர 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடிய MediaTek Processor பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும், சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவும் காணப்படுகின்றது. 


இவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 5 மெகாபிக்சல்களைக் கொண்ட துணையான கமெரா போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. 


இதன் பெறுமதியானது 235 யூரோக்கள் ஆகும்.


கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்!

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும்.


கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம். கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன.


நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.


* கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.


* உடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது.எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் டாக்டரின் ஆலோசனை பெறலாம்.


* மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, புரோக்கோலி, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், “வைட்டமின் ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதிசெய்து, தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது.
நெல்லிக்காய், கொய்யா, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள “வைட்டமின் சி’ சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.


ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.


* பயோட்டின்’ கூந்தல், சருமம் மற்றும் நகம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் நரைப்பதை தடுக்கும் கெரட்டின் உற்பத்திக்கு இது உதவுகிறது. கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் உற்பத்திக்கு “நியாசின்’ உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு, கல்லீரல், அரிசி மற்றும் பால்பொருட்களில் “பயோட்டின்’ நிறைந்துள்ளது.


* இரும்புச்சத்து, கூந்தலுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உடைந்து உதிரத் தொடங்கும். பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், முட்டை, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.


கூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும், 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர் குடிக்க வேண்டும்.

6 பேக் நல்லதா கெட்டதா?

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சமீப காலங்களில் வந்த படங்களில் பாலிவுட்டில் அமீர்கான், சல்மான்கான், கோலிவுட்டில் சூர்யா,  பரத் போன்ற நடிகர்கள் சிக்ஸ் பேக் உடலமைப்பில் நடித்தனர். படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே நடிகர் சிக்ஸ் பேக் உடலமைப்பு கொண்டு வருவதற்காக நாள் ஒன்றுக்கு 15 நேரம் பயிற்சி எடுத்து கொண்டார் என்பது போன்ற விளம்பரங்களும் வருவதுண்டு.

இந்த சிக்ஸ் பேக் தீ, தற்போது இன்றைய இளைஞர்களிடம் பரவி உள்ளது. அழகின் முகவரி எதுவென்று கேட்டால் சிக்ஸ் பேக் என்பார்கள். அந்த அளவுக்கு சிக்ஸ் பேக் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். அதற்காக ஸ்டீராய்டு என்கிற ஊக்க மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது உயிருக்கே ஆபத்தானது என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக உடலில் சேரும் கொழுப்பு உடலியக்கத்தின் மூலம் இயல்பாகவே கரைந்து போகும். சில சமயங்களில் கரையாமல் ஆங்காங்கே சேர்ந்து போகும். இப்படி சேரும் கொழுப்பைக் கரைத்து தசைகளாக வயிற்றுப்பகுதியில் உருமாற்றுவது தான் சிக்ஸ் பேக். ஒருமுறை சிக்ஸ் பேக் கொண்டு வந்து விட்டாலும் அதை தொடர்ச்சியாக பராமரிப்பது கஷ்டம். உழைப்புக்கான சூழ்நிலை நகர வாழ்க்கையில் இல்லை. அதனால் தான் உடற்பயிற்சி மூலம் இதைப் பெற வேண்டும். அதற்காக ஒரு சிலர் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து உண்டு.
ஆண்மைக்கு காரணமாக இருக்கும் ஹார்மோன் டெஸ்டோடீரோன். இயல்பாக சுரக்கும் இந்த ஹார்மோனை அதிக அளவில் சுரக்க செய்வது ஸ்டீராய்டு.

இந்த ஹார்மோன் அதிகம் சுரந்தால் உடல் எடை கூடும். தசைகள் அளவில் பெரிதாகும். அதன்மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் மிக பயங்கரமானவை. முதலில் ஏற்படுவது ஆண்மைக் குறைவு தான்.மேலும் மலட்டுத்தன்மை, குரல் மாற்றம், கல்லீரல் கேன்சர், மார்பில் அதீத ரோம வளர்ச்சி, நரம்புத்தளர்ச்சி, பார்வைக் குறைபாடு போன்றவையும் ஏற்படும். அழகான ஆரோக்கியமான உடலுக்கு அன்றாடம் எளிதான உணவு வகைகளும் இயல்பான உடற்பயிற்சியுமே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எளிய பயிற்சிகள்: இதயப் பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர உடம்பில் உள்ள கொழுப்பின் அளவை வேகமாக குறைக்க வேறு வழி இல்லை. உயர்ந்த இதயத் துடிப்பு மற்றும் வியர்வை உடம்பை விட்டு வெளியேறுவதால், கொழுப்புத் திவலைகளை சிதைக்க உதவி புரியும். இது செல்லுலைட் என்ற தோலில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகமாக சிதைக்க உதவும். இதற்காக மிதிவண்டி ஓட்டுதல், ஓடுதல், நீந்துதல் மற்றும் நடனம் ஆடினால் சில கிலோகிராம் எடை நம் உடலை விட்டு ஓடும். எடை குறைப்புக்கு வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகமாக வைத்திருப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னரும் கூட, அதிகப்படியான வளர்ச்சிதை மாற்றமானது கொழுப்பை எரிக்கும். அதிக வளர்ச்சிதை மாற்ற வீதத்தை அடைய ஒருவர் அளவான உணவை போதிய இடைவெளியில் சாப்பிட வேண்டும்.

சில சமயங்களில் பளு தூக்குவதால், மீள்வரு தசைகளில் உண்டாகும் செல்லுலைட் என்ற தோல்களில் படியும் கொழுப்பை கரைக்க உதவும். பளு தூக்கும் பயிற்சி உடல் கட்டமைப்பை அதிகரிக்க உதவும். உடம்பில் உள்ள கொழுப்பை நீக்கியதும், சிக்ஸ் பேக் வயிற்றுடன் உடலை கட்டமைக்க தசைகளை வலுப் பெறச்செய்ய வேண்டும். அதற்கு சில உடற்பயிற்சிகளை செய்தால் சரியான கட்டமைப்புடன் வயிறு அமையும். வயிற்றுக்கான உடற்பயிற்சி செய்தோமானால், வயிற்று தசைகளுக்கு சரியான அளவு இழுவிசை இளக்கத் தன்மை கிடைக்கும். அதுவும் தரையில் படுத்து, முட்டியை மடக்கி கைகளை தலைக்குப் பின்னால் கட்டிக் கொண்டு, தலை, முட்டியை தொடும் அளவிற்கு உடம்பை தூக்க வேண்டும். இந்த உடற்பயிற்சி மேல் மற்றும் நடு வயிற்றை குறி வைக்கும். இந்த பயிற்சியை உடம்பின் இரு பக்கங்களாக செய்தால் சரிவுள்ள தசைகளை மேம்படுத்தும்.

கட்டுப்பாடான உணவு அவசியம்: காலை ஆறு மணிக்கு இரண்டு டீ, ஒன்பது மணிக்கு ஓட்ஸ் மற்றும் எட்டு முட்டைகளின் வெள்ளைக்கரு. காலை 11 மணிக்கு பப்பாளிப் பழம். சர்க்கரை இல்லாத புரதச் சத்து நிறைந்த பானம். மதியம் ஒரு மணிக்கு அரை கிலோ சிக்கன். எண்ணெய் சேர்க்காத கோதுமை ரொட்டி, மாலை ஐந்து மணிக்கு மீண்டும் புரதச்சத்து பானம், 7.30 மணிக்கு திரும்பவும் புரதச்சத்து பானம், இரவு ஒன்பது மணிக்கு எட்டு முட்டைகளின் வெள்ளைக்கரு, ஒரு ஆப்பிள். இவைதான் உணவு. மாவுச்சத்து, நார் சத்து, கொழுப்புச் சத்து, அடங்கிய உணவுப் பொருட்களை அறவே சாப்பிடக் கூடாது.

தண்ணீரின் அளவைப் படிப்படியாகக் குறைக்க வேண்டி இருக்கும். மேலும், சர்க்கரை, உப்பு, தண்ணீர் மூன்றையும் உடலை விட்டு சுத்தமாக நீக்க வேண்டும். ஆகையால், 16 வயதினருக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும்தான் சிக்ஸ் பேக் பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதைவிடக் குறைவான வயதுடையவர்கள் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. ஏனெனில் முதுகுத் தண்டு வளர்ச்சி முழுமையாகப் பாதிக்கப்படும்‘‘  என்கின்றனர் மருத்துவர்கள்.

இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கையில், சிக்ஸ் பேக் செய்பவர்கள், உடலில் உள்ள கொழுப்பை ஒன்பது சதவிகிதம் ஆகவும் நீரின் அளவினை 40 சதவிகிதம் அளவுக்கு குறைத்தே ஆக வேண்டும். மேலும், புரதச் சத்தை மட்டும் அதிகம் எடுத்துக்கொள்வதால், கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். ஒருகட்டத்தில் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்துவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது. அதிக அளவு உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் வெப்பம் அதிகரிக்கும். மாவுச்சத்து, பால் பொருட்களைத் தவிர்ப்பதால், உணவின் விகிதாச்சாரம் மாறுபட்டு, மயக்க நிலைக்குத் தள்ளப்படலாம், என்றனர்.

இதுபற்றி எலும்பு சிகிச்சை நிபுணர் தெரிவிக்கையில், சர்க்கரை, தண்ணீர், உப்பு ஆகிய மூன்றையும் நீக்கிவிட்டால் உயிர் வாழ்வது கடினம்தான். அதிலும் புரதம், மாவுச்சத்து இல்லாமல், கடும் உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் தசை நார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். மனிதனுக்கு வலிமையான தசைநார்களே தேவை. உடல் வலி, காயம் ஏற்படுவதைத் தடுக்கவும் முதுகுவலி வராமல் காக்கவும் தசை நார்கள் பயன்படுகின்றன. ஆனால், சிக்ஸ் பேக் வைப்பதால் தேவை இல்லாத வலிகள், பிரச்னைகள்தான் அதிகம், என்றனர்.

அழகுக்கு ஆசைப்பட்டுத்தான் சிக்ஸ் பேக் மாயையில் இளைஞர்கள் விழுகிறார் கள். ஆனால், நிரந்தர அழகுக்கு ஒருவர் முறையாக உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்குள் வைத்திருத்தலே முக்கியம். சிக்ஸ் பேக் அழகு என்பது தற்காலிகமானதே. நீடித்தது அல்ல. அழகைவிட ஆரோக்கியமே முக்கியம் என்பதையும் இளைஞர்கள் உணர வேண்டும், என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

காரணமில்லாமல் ஏதும் படைப்பதில்லை (நீதிக்கதை)



ஒரு நாள் எலி ஒன்றைப் பூனை ஒன்று துரத்த ...தன் உயிரைக் காத்துக்கொள்ள எலி வேகமாக தன் வலைக்குள் புகுந்தது.எலியைக் காணாத பூனை திரும்பிச் சென்றது.வெளியே வந்த எலி நத்தை ஒன்று  மெதுவாக ஊர்ந்து செல்வதைப் பார்த்தது.

நத்தையை கேலி செய்த எலி ....'நத்தையே உன் முதுகில் வீட்டை சுமந்து செல்கிறாயே ஏன்?நான் எவ்வளவு வேகமாக ஓடுகிறேன்.அதனால் ஆபத்திலிருந்து என்னால் தப்பிக்கமுடிகிறதுஆனால் அப்படி ஆகும்போது உன்னால் என்ன செய்ய முடியும் என்றது.

அதற்கு நத்தை ...'நீ உயிருக்கு பயந்து வேகமாக ஒடுகிறாய்..ஆனால் சமயத்தில் பூனையிடம் மாட்டிக்கொண்டால் உன் சாவு நிச்சயம்.ஆனால் நானோ....கூட்டை முதுகில் சுமந்து செல்வதால்...எப்போழுது ஆபத்து வந்தாலும் ...அந்த கூட்டுக்குள்ளையே பாதுகாப்பாக பதுங்கிக் கொள்வேன்..என்றது.

அப்போதுதான் எலிக்கு ஆண்டவன் காரணமில்லாமல் எதையும் படைப்பதில்லை என புரிந்தது.

கண்களுக்கு மேக்கப்!

Eye makeup

கண்ணுக்கு மை அழகு என்றது அந்தக் காலம். இன்று கண்ணழகுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் வந்தாச்சு. கண்களுக்கான மேக்கப்பிலும் எக்கச்சக்க  புதுமைகள்! ஐ மேக்கப் என்னவெல்லாம் லேட்டஸ்ட்? எந்த சந்தர்ப்பத்துக்கு எப்படி ஐ மேக்கப் செய்ய வேண்டும்? விளக்கமாகப் பேசுகிறார்  அழகுக்கலை நிபுணர் ஹசீனா சையத்.

கண்கள் தான் மனசைப் பிரதிபலிக்கிற கண்ணாடி. நம்ம மனசுக்குள்ள சந்தோஷமோ, சோகமோ, எது இருந்தாலும், அது கண்கள்ல தான் தெரியும்.  என்னதான் பிரமாதமா மேக்கப் போட்டாலும் கண்களுக்கு மேக்கப் இல்லைனா அந்த அழகு கொஞ்சங்கூட எடுபடாது. வெறுமனே மையும் ஐ லைனரும்  மட்டுமே கண்களுக்கு போதும்னு நினைக்குறதில்லை இன்றைய இளம் பெண்கள். சாதாரண காஜல்னு ஆரம்பிச்சு, மஸ்காரா வரைக்கும்  எல்லாத்துலயும் புதுமைகள் வந்தாச்சு.

கண்களுக்கான மேக்கப்னு சொன்னதும் முதல்ல நினைவுக்கு வர்றது மை. கருப்பான விஷயங்களுக்கு மையோட கருமையை உதாரணம் காட்டுவோம்.  ஆனா இப்ப சிகப்பு சிகிச்சை, பச்சை, கிரேனு எல்லா கலர்கள்லயும் கண் மை வருது. அதே மாதிரி பர்ப்பிள், ப்ளு பென்சில்களும் வருது. கண் இமைகள்  இயற்கையாகவே நீளமாக, அடர்த்தியாக காட்டலாம். முன்னல்லாம் மஸ்காராவும் கருப்பு கலர்ல மட்டும் தான் வந்திட்டிருந்தது.

இப்ப அதுலயும் நிறைய மாற்றங்கள் வந்திருக்கு. முக்கியமாக கலர்லெஸ் மஸ்காரா ரொம்ப பிரபலம். போட்டதே தெரியாது. ஆனா இமைகள்  தனித்தனியா நீளமா, அடர்த்தியா தெரியும். மஸ்காரா உபயோகப்படுத்த முடியாதவங்க, செயற்கையா கிடைக்கிற கண் இமைகளை வாங்கி  ஒட்டிக்கலாம். ஐ மேக்கப்ல ரொம்ப ரொம்ப லேட்டஸ்ட் என்ன தெரியுமா. புருவங்களுக்கு கீழே, டிராகன், சிறுத்தை, மயில், மண்டை ஓடு ஸ்டிக்கர்களை  ஓட்டிக்கிறதுதான்.

பார்ட்டிக்கு போற பெண்கள் இதை ரொம்ப விரும்பறாங்க என்கிற ஹசீனா ஐ மேக்கப் குறித்த சில டிப்ஸ் தருகிறார்.

முகத்துக்கு தினமும் கிளென்சர், டோனர், மாயிச்சரைசர், உபயோகிக்கணும். அதன் பிறகு ஃபவுண்டேஷன் போடணும். கண்களுக்கடியில் கருவளையம்  அதிகமிருக்கிறவங்க கண்சீலர் உபயோகிச்சு அதை மறைக்கலாம். அதுக்கு மேலே மேக்கப் போட்டா கருவளையம் தெரியாது.

வேலைக்கு போறவங்களும் காலேஜ் பொண்ணுங்களும் நேச்சுரல் ஷேடு ஐ மேக்கப் சாதனங்களை செலக்ட் பண்ணலாம். லைட் பிரவுன் கலர்  லைனரால கண்களோட ஒரங்கள்ல வரைஞ்சுக்கலாம். பிங்க் அல்லது பேபி பிங்க் நிற ஐ ஷேடோ பெஸ்ட்.

பார்ட்டி போகும் போது கிளிட்டர்னு சொல்ற பளபளக்கிற ஐ ஷேடோ உபயோகிக்கலாம். லென்ஸ் உபயோகிக்கிறவங்க, மேக்கப் போடறதுக்கு  முன்னாடியே லென்ஸ் போட்டுக்கணும். பாதாம் ஆயில் அல்லது விளக்கெண்ணெய் தடவினா கண் இமைகள் அடர்த்தியா வளரும். சுத்தமான  பன்னீரை கண்களுக்குள்ள ஒவ்வொரு சொட்டு விட்டா அழுக்குகள் நீங்கி கண்கள் சுத்தமாகும். எந்தக் காரணம் கொண்டும் கண்கல்ள மேக்கப்போட  தூங்கவே கூடாது.

திண்டுக்கல் மாவட்டத்தின் வரலாறு !


திண்டுக்கல் என்றதும் பூட்டு ஞாபகத்திற்கு வரும். ஆனால் இந்நகருக்கு பன்முகங்கள் இருக்கின்றன. திண்டுக்கல் வரலாற்றின் திசைகள் செல்லும் கோட்டை தலையணை திண்டுபோல் இருப்பதால் இந்நகருக்கு திண்டுக்கல் எனப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு முன் இருந்த பெயர் திண்டீஸ்வரம். இது புராணப் பெயர். திண்டி என்ற மன்னன் இந்நகரை ஆண்டபோது, மக்களை துன்புறுத்தினார். மக்கள் ஈசனை வேண்டி தவம் புரிந்தனர். திண்டி மன்னனை சிவனாகிய, ஈஸ்வரன் அழித்ததால் இந்த ஊர் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது.

மேலும் வெங்காயம், நிலக்கடலையின் மொத்தச் சந்தையாகத் இவ்வூர் திகழ்கிறது. இங்கிருந்து பிரியும் சாலைகள் கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களோடு இணைகின்றன. தமிழகத்தின் முக்கிய கோடை வாழிடமான மலைகளின் இளவரசியான கோடைக்கானல் இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் 2133 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பேரணை, சிறுமலை ஆகிய இரு சிறந்த உல்லாச ஓய்விடங்களும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளன.

திண்டுக்கல் வரலாறு

திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல்.திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் முக்கியமான படை தளங்களில் ஒன்று .

மலைக்கோட்டை கோவில்

திண்டுக்கல் மலையில் கி.பி.13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னன் முதலாம் சடைவர்மன் குலசேகர பாண்டியன் இக்கோவிலை கட்டினார். அன்று முதல் இக்கோவில் ராஜராஜேஸ்வரி கோவில் என்றழைக்கப்பட்டது. தற்போது இந்த மலைக்கோவிலில் ஐந்து கடவுள்களுக்கான கருவறைகள் தனித்தனியாக இருந்த போதிலும் எந்தக் கருவறையிலும் சிலைகள் இல்லை. எனவே இந்தக் கோவிலில் வழிபாடும் இல்லை. இந்தமலைக்கோட்டை முழுவதும் இந்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் இங்குள்ள கருவறை ஒன்றிலிருந்த சிவலிங்கத்தின் லிங்கமில்லாத ஆவடைப்பகுதி கருவறைக்கு வெளியே தனியே கிடக்கிறது.

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-05

வேத காலம்
                   உலோக காலத்தை தொடர்ந்து வந்த காலம் வேதகாலம்  என்றழைக்கபடுகிறது. கி.மு1000 லிருந்து  வேதகாலம்  ஆரம்பமாகிறது. நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் நாகரீக வாழ்வை அடைந்ததும் மொழிகள் தோன்ற ஆரம்பித்தன  மொழிகள் தோன்ற ஆரம்பித்ததும் வேதங்களும், புராணங்களும்  தோன்றியது.

                  இப்படி படிப்படியாக முன்னேறிய மனித சமுதாயம் ஒரு சீரிய முன்னேற்றத்தை அடைந்தது வேத காலத்தில் தான். இந்தியாவின் பழமையான வேதங்களாக கருதப்படும் ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்கள், உபநிடதங்கள் இக்காலக்கட்டத்தில்  எழுதப்பட்டன, மேலும் இந்தியாவின் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் ஹிந்து மதம் தோண்டியது, உலகில் மூன்றாவது பெரிய மதம் நம் ஹிந்து மதம் தான், புத்த மதம், சமண மதம் தோன்றியது வேத காலத்தில் தான். இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் நடந்ததும் இயற்றப்பட்டதும் இக்காலகட்டத்தில் தான் .

                   தென்இந்தியாவை பொறுத்தவரை திராவிட மொழி தோன்றியது, மதுரையை தலைநகராக கொண்டு பாண்டியர்கள்  தென்இந்தியாவை ஆண்டு வந்தனர். தமிழ் சங்கம் தொடங்கப்பட்டது மேலும் தமிழின் பழமையான நூலான தொல்காப்பியம் இயற்றப்பட்டது. இனி வேத கால வரலாற்றை பற்றி படிப்படியாக பார்ப்போம்.

                   கி.மு1200 ஆண்டு வாக்கில் சிந்துசமவெளி நாகரிகம் அழிந்த பின்பு வட இந்தியா முழுவதிலும் பல இடங்களில் சிற்றரசுகளும், பேரரசுகளும் தோன்றி வளர ஆரம்பித்தன. இதில் முக்கியமானதாக கருதப்படுவது மகாஜனபதங்கள் என்றழைக்கபடும் 16 பேரரசுகள் அல்லது நாடுகள் ஆகும். இவற்றின் காலம் கி.மு1000 இல் இருந்து கி.மு 400 வரை.



 .

மகாஜனபதங்கள்
                மகாஜனபதங்கள் என்பது பண்டைய இந்தியாவில் காணப்பட்ட பேரரசுகள் அல்லது நாடுகளைக் குறிக்கும். இவை இந்திய உபகண்டத்தின் வடமேற்கிலுள்ள காந்தாரம் முதற்கொண்டு கிழக்குப் பகுதியில் காணப்பட்ட அங்கம் வரையிலான பதினாறு அரசுகளாகும். 



1. அங்கம் (anga)

2. கோசலை (kosala)
 
3. காசி (kashi)

4. மகதம் (magadha)

5. வஜ்ஜி (vajji)

6. மல்லம் (malla)

7. சேதி (chedi or cheti)

8. வத்சம் (vatsa or vamsa)

9. குரு (kuru)

10. பாஞ்சாலம் (panchala)

11. மத்சம் (matsya or machcha)

12. சூரசேனம் (surasena)



13. அஸ்மகம் (ashmaka or assaka)

14. அவந்தி (avanti)

15. காந்தாரம் (gandhara)

16. காம்போஜம் (kamboja)

அங்க நாடு

            அங்க நாடு என்பது கி.பி. 6ம் நூற்றாண்டில் இந்திய உபகண்டத்தில் காணப்பட்ட ஒரு ராச்சியமாகும். அதே நூற்றாண்டில் மகதத்தால் ஆக்கிரமிக்கப்படும் வரை மிகவும் சிறப்பான நிலையில் இருந்தது. மேலும் பதினாறு மகாஜனபதங்களில் ஒன்றாக அங்கம் உள்ளது. ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் பல இடங்களிலும் அங்க நாடு வருகிறது.


 

 
மகாபாரதம் (I.104.53-54) மற்றும் புராண இலக்கியங்கள் அங்கம் எனும் பெயர் அதனைத் தோற்றுவித்த இளவரசர் அங்கன் பெயரால் ஏற்பட்டதாகக் கூறுகின்றன.

ராமாயணம், (1.23.14) காமதேவனை எரித்து அவனின் உடல் பாகங்கள் (அங்கம்) சிதறிய இடமே இது எனக் குறிப்பிடுகிறது.


மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளபடி அங்க தேசம் என்பது இன்றைய பீகாரிலுள்ள மாவட்டங்களான பகல்பூர், பங்கா, பூர்னியா, மங்கர், கதிகார் மற்றும் ஜமுய் ஆகியவற்றையும், ஜார்க்கண்டிலுள்ள தியோகார், கொட்டா மற்றும் சகேப்கஞ் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு பிரதேசமாகும். பிற்பகுதியில் இதன் எல்லைகள் வங்காளத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன. சம்பா நதி மகதத்தையும் அங்கத்தையும் பிரிக்கும் எல்லைக்கோடாகும். அங்கத்தின் வடபகுதி எல்லையில் கோசி நதி காணப்பட்டது. மகாபாரதத்தின் படி துரியோதனன் கர்ணனை அங்கத்தின் மன்னனாக முடிசூட்டினான். 

மகாபாரதத்தின் சபா பர்வம் (II.44.9) அங்கம் மற்றும் வங்கம் ஆகியன இணைந்து ஒரே தேசமானதாகக் குறிப்பிடுகிறது. கதா சரித சாகரம் எனும் நூலின் படி விதங்கபூர் எனும் கடலோர நகரம் அங்க தேசத்தில் இருந்ததாக அறிய முடிகிறது. எனவே அங்கத்தின் எல்லைகள் கிழக்குப்பகுதியின் கரையோரம் வரை வளர்ந்திருந்ததென அறியலாம்.

                    அங்கத்தின் தலைநகராக சம்பா காணப்பட்டது. மகாபாரதம் மற்றும் ஹரிவம்சத்தின்படி சம்பா என்பது மாலினி என அழைக்கப்பட்டது.. சம்பா நதி கங்கையுடன் கலக்குமிடத்தில் கங்கையின் வலது கரையில் சம்பா அமைந்திருந்தது. இந்த நகரம் மிகவும் வளமான நகராகும். இது பண்டைய இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது.

கோசல நாடு

                  கோசல நாடு என்பது பண்டைய இந்தியாவில் அமைந்திருந்த ஒரு பகுதியாகும். இப்பிரதேசம் இன்றைய இந்தியாவின் உத்திரப்பிரதேசத்திலுள்ள அவாத் பிரதேசத்தில் அமைந்திருந்தது. கி.மு.6ம் நூற்றாண்டில் காணப்பட்ட பதினாறு பெருங் குடியேற்றங்களுள்(மகா ஜனபதங்கள்) இதுவும் ஒன்றாகும். கி.மு. 4ம் நூற்றாண்டளவில் மகதத்தினுள் உள்வாங்கப்பட்டுவிட்டது. கோசல நாட்டில் அயோத்தி, சாகெத், சிராவஸ்தி ஆகிய மூன்று முக்கிய நகரங்கள் காணப்பட்டன.  புராணங்களின் அடிப்படையில், இஷ்வாகு மற்றும் அவரது வழிவந்தோரின் ஆட்சியின்கீழ் கோசலையின் தலைநகரமாக அயோத்தி அமைந்திருந்தது. 

ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களில் கோசல நாட்டின் ஆட்சியாளர்கள் இஷ்வாகுவின் வழிவந்தவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். புராணங்களில் இஷ்வாகு முதற்கொண்டு பிரசன்னஜித் வரையான இஷ்வாகு வம்ச அரசர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.  மச்சிம நிக்காய என்ற பௌத்த நூல் புத்தரை கோசல நாட்டவர் எனக் குறிப்பிடுவதோடு  சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் கோசலையில் கல்வி போதித்ததாகவும் குறிப்பிடுகின்றது.


காசி நாடு

         காசி ராச்சியம், பிரதிஸ்தனவின் சோமவன்ச குலத்தைச் சேர்ந்த அயுசின் மகனான சேத்திரவிரதனால் உருவாக்கப்பட்டது.

பண்டைய பிராமண வழக்கப்படி காசியின் மன்னர் உணவருந்துவதை எவரும் பார்த்ததில்லை. மேலும் எந்தவொரு மன்னரும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை. இவ்வாறு தமது பிராமணச் சட்டங்களை அம்மன்னர்கள் பேணி வந்தனர்.  





 


         காசியின் மன்னரின் விருந்தினராக பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா, பண்டித ஜவகர்லால் நேரு, ராஜேந்திரப் பிரசாத், இந்திரா காந்தி, இரண்டாம் எலிசபெத், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, கோச்செரில் ராமன் நாராயணன் மற்றும் அவரது பர்மிய மனைவி போன்றோர் சென்றுள்ளனர்.


மகத நாடு

           மகத நாடு மகாஜனபதங்களில் குறிப்பிடப்படும் 16 சிறப்பான நாடுகளுள் ஒன்றாகும். இதன் முதன்மை நிலப்பகுதி கங்கை ஆற்றுக்குத் தெற்கே அமைந்துள்ள பீகாரின் பகுதி ஆகும். இதன் தலைநகரம் ராஜககா (இன்றைய ராஜ்கிர்) என்பதாகும். கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகாரின் பெரும்பகுதி, வங்காளம் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி இது விரிவாக்கப்பட்டது. இராமாயணம்,மகாபாரதம், புராணங்கள் ஆகியவற்றில் மகத நாடு பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பௌத்த, சமண நூல்களிலும் மகதம் பற்றிப் பெருமளவு குறிப்புக்கள் உள்ளன. மகதம் பற்றிய மிகப் பழைய குறிப்புஅதர்வண வேதத்தில் காணப்படுகின்றது.




         கி.மு 684 இல் மகத நாடு  தோற்றுவிக்கப்பட்டது. ப்ரிஹ்றத ராஜ்ஜியம், பிரத்யோட ராஜ்ஜியம், ஹரயங்க ராஜ்யம், சிசுங்க ராஜ்ஜியம் போன்ற பலதரப்பட்ட ராஜ்யதால் கி.மு684 முதல் கி.மு424 வரை ஆளப்பட்டுள்ளது.
          இந்தியாவின் பெரிய சமயங்கள் இரண்டு மகத நாட்டிலேயே உருவாயின. இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு பேரரசுகளான மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு ஆகியவற்றின் மூலமும் இதுவே. இப் பேரரசுகளின் காலத்திலேயே இந்தியா அறிவியல், கணிதம், வானியல், சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பெரும் முன்னேற்றங்களைக் கண்டது. இது இந்தியாவின் பொற்காலம் எனக் கருதப்படுகின்றது.


மகாஜனபதங்களில் உள்ள மற்ற ராஜ்ஜியங்களை பற்றியும் வேத காலத்தில் தென் இந்தியாவின் வரலாறு பற்றியும் அடுத்த பதிவில் சிந்திப்போம்...
              அடுத்த பதிவு அடுத்த வெள்ளிக்கிழமை பதிவிடப்படும்,. இனி பிரதி வெள்ளிக்கிழமை பதிவிடப்படும்...

                பதிவு பற்றிய கருத்துக்களும் கேள்விகளும் வரவேற்க்கபடுகின்றன...