Search This Blog

Tuesday 24 September 2013

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை!


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 285 ஏக்கர் நிலப் பரப்பிலான ஒரு சிறிய தீவு கச்சத்தீவு. எந்தவித உயிரினங்களும், குடியிருப்புகளும் இல்லாமல் சிறிய கற்குன்றங்களாலான இந்த தீவுப் பகுதி இந்தியாவின் கடற்கரைக்கு 10 மைல் தூரத்திலும் ஸ்ரீலங்காவின் கடற்கரைக்கு 8 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. இன்றைய நிலைமையில் “கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டது; அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்கள்’ எனும் சர்ச்சை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, இப் பிரச்னை ஒரு வழக்காக உச்சநீதிமன்றத்தில் உள்ளது.


1974-ஆம் ஆண்டும் பின் 1976-லும் இந்திய, இலங்கைக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இந்தியாவால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது எனவும், கச்சத்தீவை மறுபடியும் இந்தியா எடுத்துக் கொள்ளும் வகையில் மேலே சொல்லப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களையும் ரத்து செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


sep 24 - kacchadevu

 


இலங்கையின் பழங்கால பூகோள வரைபடங்கள் எதிலும் “கச்சத்தீவு’ எனும் ஒரு தீவுப் பகுதி இருக்காது. 1920-ஆம் ஆண்டு அன்றைய ஆங்கில ஆட்சியின் சென்னை ராஜதானி மற்றும் சிலோன் அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் முதன் முதலாக பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளை அளந்து இரண்டு ராஜதானி பிரதேசங்களுக்கும் இடையில் உள்ள எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


1921, அக்டோபர் 24-ஆம் தேதி கொழும்பு நகரில் இதுபற்றி விவாதிக்க, கூடிய கூட்டத்தில்தான் முதன் முதலாக அன்றைய இலங்கை அரசின் உயர் அதிகாரிகளின் தலைவர் ஹார்ஸ்பர்க், வரைந்து காட்டிய இரு நாடுகளுக்கிடையிலான எல்லைக்கோட்டில் கச்சத்தீவு இலங்கைக்குள் உள்ளடங்கிய வகையில் இருந்தது. அதை ஏற்றுக் கொள்ள மறுத்த இந்திய அதிகாரிகள், ராமநாதபுரம் அரசரின் ஆளுகையின்கீழ்வரும் ஒரு தீவு கச்சத்தீவு என வாதிட்டு அதற்கான அத்தாட்சி பத்திரங்களையும் காட்டினார்கள். அன்றைய சிலோன் அரசின் உயரதிகாரிகள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு மெüனமாகி விட்டனர் என்பது அந்த கூட்டத்தின் குறிப்புகளில் பதிவாகியுள்ளது.


அடுத்து, 1966-ஆம் ஆண்டு மே மாதத்தில், இதுபற்றி ஒரு பேட்டியில் அன்றைய இலங்கை அரசின் மந்திரி சபை செயலாளர் பி.பி. பெய்ரிஸ் கூறியது மிகவும் முக்கியமானது. “”நான் துணை சட்ட வரைவாளர், (டெபுடி லீகல் டிராஃப்ட்ஸ்மேன்) வேலையில் இருந்தபோது ஜாஃப்னாவின் வடக்கு மாவட்டங்களின் எல்லைக்கோட்டினை ஆராயும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அது சம்பந்தப்பட்ட கோப்புகளை படித்தபோது, விக்டோரியா மகாராணி காலத்தில் ஒரு பிரகடனத்தில், கச்சத்தீவு ஜாஃப்னாவின் வடக்குப் பகுதிக்குட்பட்ட தீவு அல்ல என்றும் அது ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தம் எனவும் ஆங்கில அரசால் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது” எனக் கூறினார்.


இதை நிரூபிக்கும் வகையில் 1977-ஆம் ஆண்டிற்குமுன் இலங்கையில் நடந்த தேர்தல்களில் எந்த தொகுதியிலும் கச்சத்தீவு இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால், 1974-ஆம் ஆண்டில் இந்தியா கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தபின், 1977-ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த தேர்தலில் ஜாஃப்னா மாவட்டத்தின் கய்த்ஸ் பாராளுமன்ற தொகுதியில் ஒரு இடமாக அது இடம்பெறத் தொடங்கியது.



சரித்திரத்தைப் புரட்டினால், 69 கடற்கரை கிராமங்களையும் பாக்ஜலசந்தியின் 11 சிறிய தீவுகளையும் உள்ளடக்கி ராமநாதபுரம் சமஸ்தானம் அன்றைய மதுரை நாயக்க மன்னர்களால் 1605-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது புரியும். இந்த 11 சிறிய தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவு. ராமனாதபுரம் ராஜா கூத்தன் சேதுபதி 1622 முதல் 1635 வரை ஆட்சியிலிருந்தார். அவர் காலத்து தாமிர செப்பேடு ஒன்றில் அவரது ஆளுகைக்கு கீழ் இருந்த இந்த தீவுகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் ராஜாவின் ராஜாங்க கணக்குப் பேரேடுகளில் கச்சத்தீவிலிருந்து குத்தகை வருமானம் வந்தது குறிக்கப்பட்டுள்ளது.


1767-ஆம் ஆண்டில் டச்சு கம்பெனி ஒன்று ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்த கணக்கும் உள்ளது. 1802-ஆம் ஆண்டு (ஆங்கிலேயர் காலத்தில்) இந்தியாவின் எல்லாப் பகுதிகளும் சர்வே செய்யப்பட்ட கணக்குகளும் வரைபடங்களும் இன்றும் உள்ளன. அதில் கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமானது என குறிக்கப்பட்டுள்ளது.


1822-இல் ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி ராமநாதபுரம் ராஜா சேதுபதியிடமிருந்து கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்தது. 1845-ஆம் ஆண்டில் அன்றைய சிலோன் கவர்னர் ஒரு கடிதத்தில் கச்சத்தீவு ராமநாதபுரம் சேதுபதிக்கு சொந்தமானது என குறிப்பிட்டுள்ளார்.


இதை எல்லாம் விட மேலாக 1905-ஆம் ஆண்டில் ராமநாதபுர ஜமீன் சீனிக்குப்பன் படையாச்சி கச்சத்தீவில் புனித அந்தோனியாரின் ஆலயத்தை (மீனவர்களின் தெய்வம் அந்தோணியார்) கட்டியுள்ளார். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும், தொழுகை செய்யவும் இந்த ஆலயப் பகுதி அவசியம் என்பது சீனிக்குப்பனின் எண்ணம்.


1913-ஆம் ஆண்டில் கச்சத்தீவு பகுதியில் 15 வருடங்களுக்கு கடல் சங்குகளை சேகரிக்கும் உரிமையை ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து ஆங்கிலோ இந்திய அரசின் செயலர் குத்தகை எடுத்துள்ளார். அந்தப் பதிவுப் பத்திரம் இன்றளவும் காப்பகத்தில் உள்ளது. இந்த குத்தகை 1936 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஆக இந்த எல்லா ஆதாரங்களையும் வைத்துப் பார்த்தால் அன்றைய இந்தியா மற்றும் சிலோன் நாடுகளை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்கள், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே என ஒப்புக் கொண்டு ஆட்சி புரிந்தது விளங்கும்.
இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையிலிருந்த ஜமீன் பகுதிகள் இன்றைய ராமநாதபுரம் மாவட்டமாகி, தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்றாகியது.


ஆக கச்சத்தீவு எந்தக் காலத்திலும் இலங்கைக்கு சொந்தமாக இருந்ததில்லை என்பதற்கு சட்ட வழக்குகளின் மிக முக்கியமான சாட்சியமாகக் கருதப்படும் தாஸ்தாவேஜு எனப்படும் “டாக்குமென்ட்ரி எவிடன்ஸ்’ உள்ளது என்பது திண்ணம்.
பாரதத்தின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சிரிமாவோ பண்டார நாயகாவும் அன்றைய காலகட்டத்தில் சோவியத் ரஷ்யாவின் கூட்டாளிகள்.


இரு நாடுகளுக்கிடையிலும் நல்லெண்ணத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் அன்றைய இந்திரா காந்தி அரசு 1974-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் தேதி புது தில்லியில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. அன்றைய சூழ்நிலையில் பிற்காலத்தில் மீன்வளங்கள் இந்தியக் கடலோரத்தில் வற்றிப் போய், கச்சத்தீவு பகுதியின் மீன்வளம் தென்னிந்திய மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் என இந்திய அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை.


உலகெங்கிலும் இரண்டு நாடுகளுக்கு இடையே எல்லை நிர்ணயம் செய்யப்படும்போது இடையே நதியோ கடல் பகுதியோ இருந்தால் அதன் மையப்பகுதியில் எல்லைக் கோடு உருவாக்கப்படும். இப்போதும்கூட இரண்டு கிராமங்களின் எல்லை பிரிக்கப்படும்போது நடுவில் ஒரு நதி ஓடினால் நதியின் மையப்பகுதியில் கிராமங்களின் எல்லைக்கோடு வரையப்படுவது நம் மாநிலத்தில் பின்பற்றப்படும் சர்வே முறை. ஆனால் 1974-ஆம் ஆண்டு இந்திய அரசின் மிதமிஞ்சிய நல்லெண்ணத்தாலும், இலங்கை அரசுப் பிரதிநிதிகளின் சூட்சுமமான சாதுர்யத்தாலும் இந்த முறை தவிர்க்கப்பட்டது.


“இந்திய மீனவர்களும், சுற்றுலா பயணிகளும், இப்போது கச்சத்தீவுக்கு சென்று வருவது போல் சென்று வரலாம். இதற்கு தனியாக இலங்கை அரசின் விசா தேவை இல்லை’ என ஒப்பந்தத்தின் ஒரு விதி கூறுகிறது.


அதாவது இந்திய மீனவர்கள் கச்சத்தீவுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என்று விதியில் கூறப்படவில்லை. அதை அன்றைய இந்திய அரசின் உயரதிகாரிகள் கவனிக்கவில்லை. ஆனால், இலங்கை அதிகாரிகள் மிக சாதுர்யமாக அந்த ஒப்பந்த விதியை உருவாக்கி இந்திய பிரதமரிடம் கையெழுத்து பெற்றுவிட்டனர்.


1976-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி மற்றொரு ஒப்பந்தம் இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையில் கையெழுத்தாகியது.


அதன்படி, “இந்திய மீனவர்களும், அவர்களது மீன்பிடி ஓடங்களும் இலங்கையின் கடல் பகுதிக்குள் மீன் பிடிக்கக்கூடாது. அதுபோலவே இலங்கை மீனவர்களும் அவர்களது படகுகளும் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கக் கூடாது’ என்று கூறப்பட்டது.


இதுபோன்ற ஒரு ஒப்பந்தம், இந்தியா தனது அண்டை நாடுகளுடன் சுமுகமான நட்புறவுடன் நடந்து கொள்ளுவதற்கு அடிப்படை என மத்திய அரசால் அப்போது பாராளுமன்றத்தில் பெருமையுடன் பறைசாற்றப்பட்டது.



அன்றைய ஜனசங்க கட்சியின் பாராளுமன்றத் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய், “இது ஒப்பந்தம் அல்ல பணிந்து போதல்’ என பேசினார். அவரது வேண்டுகோளின்படி அன்றைய தமிழ்நாட்டின் ஜனசங்க தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என ஒரு வழக்கு தொடர்ந்தார். அது சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களும் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டதால் நீதிமன்றம் கேட்டபோது தங்களிடம் அது சம்மந்தமான ஆவணங்கள் இல்லை என மாநில அரசு தெரிவித்துவிட்டது. அதனால், வழக்கு தள்ளுபடியாகி விட்டது.


ஆகவே, இன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கைக்குச் சொந்தமான கச்சத்தீவை அவர்களிடம் ஒப்படைத்தோம் என உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. அன்றைய அரசு எடுத்த நடவடிக்கையினால்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை.

சர்க்கரை நோய் – கொஞ்சம் கசப்பான உண்மைகள்!


மனித உடம்பின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று சர்க்கரை. நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் மாவுச்சத்து தான் சர்க்கரையாக (குளுகோஸாக) மாறி, ரத்தத்தில் கலந்து மனிதனுடைய உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் சக்தியை அளிக்கிறது. இப்படி ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை, சக்தியாக மாறவேண்டுமானால் மனிதனின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையம் என்கிற உறுப்பு இன்சுலின் என்கிற ஹார்மோனை சுரக்க வேண்டும். 


இந்த இன்சுலின் தான் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை சக்தியாக மாற்றும். கணையத்தில் சுரக்கும் இன்சுலினின் அளவு குறைந்தாலோ, அல்லது முற்றாக நின்றுபோனாலோ, மனிதனின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அப்படியே தேங்கிவிடும். இப்படி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக போவது தான் சர்க்கரை நோய் என்று அறியப்படுகிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல்லையா என்பதை அவரின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை வைத்து கண்டுபிடிக்கலாம்.


ஒருவர் உணவு சாப்பிடுவதற்கு முன்னர் அவரது ரத்தத்தில், நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் எழுபது மில்லிகிராம் சர்க்கரை இருக்கும். அதே நபருக்கு சாப்பிட்ட பிறகு, அவருடைய ரத்தத்தில் நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் நூற்றி இருபது முதல் நூற்றி முப்பது மில்லிகிராம் சர்க்கரை வரை காணப்படும். இந்த அளவுக்கு மேல் ஒருவரின் ரத்தத்தில் சர்க்கரை காணப்பட்டால் அவருக்கு சர்க்கரை நோய் வந்திருப்பதாக கருதப்படும்.

sep 24 Symptomsof diabetes

 



இந்தியர்களை பெருமளவு தாக்கத் துவங்கியிருக்கும் நீரிழிவு நோயை சர்க்கரை நோய் என்று பொதுப் பெயரிட்டு அழைத்தாலும், சர்க்கரை நோயில் இருபதுக்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன. இவற்றில் நான்கு வகையான நீரிழிவு நோயின் உட்பிரிவுகள், அதாவது முதல் வகை சர்க்கரை நோய், இரண்டாவது வகை சர்க்கரை நோய், கர்ப்ப கால சர்க்கரை நோய், கணையத்தில் ஏற்படும் கற்களால் ஏற்படும் சர்க்கரை நோய் என்கிற நான்கு வகையான சர்க்கரை நோய்கள் தான் இந்திய உபகண்டத்தை சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை தாக்குவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.



முதல் ரக சர்க்கரை நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் சர்க்கரை நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது. இந்த முதல் பிரிவு சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை. மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று கணையத்தை தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் லாங்கர்ஹரன் திட்டுக்களை முற்றாக அழித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை கணையம் இடிந்து விடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதி செல்கள், இன்னொரு பகுதி செல்களை ஏன் தாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியவில்லை.



ஒருவகையான வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக சமீபத்திய கண்டுபிடிப்புகள் கூறினாலும் அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனால் இந்த முதல் ரக சர்க்கரை நோயைப் பொறுத்ததவரை, இது ஒருவருக்கு வந்ததால் அவருக்கு ஆயுட்காலம் முழுமைக்கும் இன்சுலின் ஊசிமூலம் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான் ஒரே வழி. அதேசமயம் உலக அளவிலும், இந்தியாவிலும், எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது ரக நீரிழிவுநோய். இந்த இரண்டாவது ரக சர்க்கரை நோயைப் பொருத்தவரை, அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.



பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 80%. அது தவிர கூடுதல் உடல் பருமன் மூலமும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணங்கள் ஒருவருக்கு சர்க்கரை நோயை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாவது வகையான கர்ப்பகால சர்க்கரை நோய் சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகமாக இருப்பதாலும் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும் பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து அவர்களுக்கு நீரிழிவு நோய் உண்டாகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு சர்க்கரை நோய் மறைந்துவிடும்.



நான்காவது ரக சர்க்கரை நோயைப் பொருத்தவரை கணையத்தில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இது உருவாவதற்கு காரணமாக கூறப்படுகிறது.



இதற்கிடையில் ஒருவர் அதிகம் சர்க்கரை சாப்பிட்டால் அவருக்கு சர்க்கரை நோய் வருமா என்கிற கேள்வி பலரின் மனதிலும் எழுவது இயற்கை. இந்த கேள்விக்கு, உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும் அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் நேரடி தொடர்பில்லை என்கிறார். அதே சமயம் அவரது பெற்றோர் இருவருக்கும் நீரிழிவு நோய் இருந்து, அவர் உடற்பயிற்சி செய்யாதவராகவும் இருந்து, அவருடைய உடல் பருமனும் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபுக் காரணிகளும், சுற்றுப்புறக் காரணிகளும் அதிகபட்சமாக இருக்கும் பின்னணியில், ஒருவர் அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், அது அவரது உடல் எடையை அதிகரிக்கச்செய்து, அதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை ஊக்குவிக்கும் காரணியாக இந்தக் கூடுதல் சர்க்கரை அமைவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் பதில் கிடைத்துள்ளது.



அடுத்ததாக சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்கு பொதுவான அறிகுறிகள் சில இருக்கின்றன. அதிக பசி, அதிக சோர்வு, எடை குறைதல், அடிக்கடி சிறுநீர்கழித்தல், ஆறாத புண்கள் ஆகிய அறிகுறிகள் நீரிழிவு நோய் வந்திருப்பதை குறிப்புணர்த்துவதாக கருதப்படுகின்றன. இப்படிப்பட்ட அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால் அவர்கள் அவசியம் நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் ரத்த பரிசோதனையை செய்து கொள்வது மிகவும் அவசியம். அதே சமயம் நீரிழிவு நோய் தாக்கியவர்களில் சுமார் ஐம்பது சதவீதம் பேருக்கு இத்தகைய அறிகுறிகள் தெரிவதில்லை. சில சதவீதம் பேருக்கு இந்த அறிகுறிகள் வெளியில் தெரியாமலே இருக்கும் என்பது தான் நீரிழிவு நோயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவ அவலம். இப்படியான அறிகுறிகள் அற்ற நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை நோயின் பாதிப்புகள் வெளியில் தெரியும்போது, அவர்களில் பலருக்கு பாதிப்புகள் கடுமையாக இருக்கும். இதைப் போக்க வேண்டுமானால் நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது அவசியமாகிறது.




இதன் ஒரு பகுதியாக பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு 25 வயதாகும்போது கண்டிப்பாக நீரிழிவு நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று சர்க்கரை நோய் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதுவும் தவிர, பொதுவாக தங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதை யார் வேண்டுமானாலும் அறிந்து கொள்வதற்கு ஒரு எளிய வழிமுறை இருக்கிறது என்கிறார் நீரிழிவுநோய் நிபுணர் மருத்துவர் மோகன். அதாவது ஒருவரின் வயது, அவர் செய்யும் உடற்பயிற்சியின் அளவு, அவரது இடுப்பின் சுற்றளவு மற்றும் அவரது பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா இல்லையா என்கிற நான்கு காரணிகளை கணக்கிடுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா இல்லையா என்பதை யார் வேண்டுமானாலும் கணக்கிட்டு பார்த்துக் கொள்ள முடியும் என்கிறார் மோகன். இப்படியாக நீரிழிவு நோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், அதை கட்டுப் படுத்துவதும் எளிது. நீரிழிவு நோய் உண்டாக்கக் கூடிய இதர உடல் நலக் கோளாறுகளையும் தவிர்க்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.



நீரிழிவு என்பது நோயா அல்லது ஒருவித உடல் குறைபாடா என்பது தொடர்பில் மருத்துவ உலகில் இன்றளவும் சர்ச்சை தொடர்கிறது. உடலின் சகல பாகங்களையும் பாதிக்கும் பல்வேறு நோய்களை இது தோற்றுவிக்கும் என்பதால் இதை மதர் ஆப் ஆல் டிசீசஸ், அதாவது மற்ற பல நோய்களின் தாய் என்றும் இவர்கள் அழைக்கிறார்கள். அதேசமயம் இது ஒரு வித உடற்குறைபாடு என்றும் இதை சரியான முறையில் கையாண்டால் இதைக் கண்டு யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்றும் கூறுகிறார்கள்.




முதலாவதாக நீரிழிவு நோயாளர்கள் தங்கள் உணவில் இனிப்பை முற்றாக தவிர்க்க வேண்டும். தினந்தோறும் மூன்று வேளை வயிறு நிறைய சாப்பிடும் பழக்கத்திற்கு பதிலாக, சராசரியாக மூன்று மணிநேர இடைவெளியில், சிறுகச் சிறுக சாப்பிடுவது நீரிழிவு நோய்க்கு நல்லது. மேலும் விரதம் என்கிற பெயரில் நீண்ட நேரம் உணவு சாப்பிடாமல் இருப்பது கூடவே கூடாது. இந்த உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் ஒருவர் என்னதான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் அவரது நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் வராது என்று எச்சரிக்கிறார் உணவியல் நிபுணர் இந்திரா பத்மாலயம். உணவுக்கு அடுத்தபடியாக அன்றாய உடற்பயிற்சி அவசியம். இதில் எல்லோராலும் செய்யக்கூடிய அன்றாட உடற்பயிற்சி என்பது நடைப்பயிற்சி ஆகும்.



உடற்பயிற்சிக்கு அடுத்ததாக நீரிழிவு நோய்க்கான மருந்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்து மாத்திரைகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுப்படாவிட்டால் இன்சுலின் பரிந்துரைக்கப்படும். உடற்பயிற்சி, மருந்து மாத்திரைகள் என்று நீரிழிவுக்கான சிகிச்சை முறைகள் மூன்று வழிகளில் மேற் கொள்ளப்பட்டாலும் இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது நீரிழிவு நோய் தாக்குதலுக்குள்ளானவரின் ஒத்துழைப்பு என்பதை மருத்துவர்கள் பலரும் வலியுறுத்து கிறார்கள். மேலும் நீரிழிவு குறித்த விழிப்புணர்வு என்பது நீரிழிவு நோயாளி மட்டுமல்ல, அவரது குடும்பத்திற்கும் தெரிந்திருப்பது மிகவும் அவசியம். முறையான சிகிச்சை, இதற்கு தேவையான மனக் கட்டுப்பாடும் உறுதிப்பாடும் நீரிழிவு நோயாளர்கள் பலரிடம் காணப்படவில்லை என்பதோடு, நீரிழிவு நோயின் மிகத்தீவிரமான பாதிப்புகள் உடனடியாக வெளியில் தெரிவதில்லை என்பதாலும் பலர் இதற்கான சிகிச்சைகளை உரிய முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்வதில்லை என்கிறார்கள் நீரிழிவு நோய் நிபுணர்கள்.



மேலும் நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து அதை கட்டுப் பாட்டில் வைத்திருந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழமுடியும் என் பது எவ்வளவு உண்மையோ, அதேயளவு, உண்மை நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விட்டால் அதன் மோசமான பக்க விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்பது. ஆனால் இது தொடர்பில் நீரிழிவு நோயாளிகள் பலரும் உரிய கவனம் செலுத்துவதில்லை என்ரம் சொல்கிறார்ர்கள் இதேநீரிழிவு நோய் நிபுணர்கள்.

நூற்றாண்டை கடந்த ஏற்காடு சாலையின் வரலாறு!







‘மலை முகடுகளை தொட்டுச் செல்லும் மேகங்கள், அந்த மேகங்களை தொட்டணைத்து நிற்கும் வானுயர்ந்த மரங்கள், வழியெங்கும் வகிடுகளாய் வளைவுகள், இதயம் வருடும் இனிய காற்று’ இத்தனையும் கடந்து சென்றால் பரந்து விரிந்த ஏரி, பசுமை போர்த்திய ரோஜாத்தோட்டம், பக்கவாட்டில் அருவிகள்’  என்று காண்போரின் கண்களுக்கு விருந்தளித்து மனதை நிறைவடையச் செய்யும் இயற்கையின் அதிசயம் தான் ‘ஏழைகளின் ஊட்டியான’  ஏற்காடு.  திருமணி முத்தாறு, வசிஷ்ட நதி  போன்ற புனிதங்களின் பிறப்பிடமான ஏற்காடு மலையில் பாதை அமைக்கப்பட்டு நூறாண்டு கடந்து விட்டது. நூற்றாண்டு மகிழ்வைக் கொண்டாடும் இத் தருணத்தில்  அதன் தொன்மையான வரலாற்றுப் பாதையை திரும்பிப் பார்ப்போம்.


சேலம் மாவட்டம் பாண்டிய, பல்லவ, சோழ மற்றும் ஹொய்சால ராஜ்ஜியத்தின் கீழ் ஆளப்பட்டு வந்தது. 14 வது நூற்றாண்டில் மாலிக்காப்பூராஸ் ஆட்சியின் கீழ் சேலம் மாவட்டம் நிர்வகிக்கப்பட்டது. 55 ஆண்டுகளுக்கு பின் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. பின் சேலம் கோட்டையினை ஹைதர் அலி கைப்பற்றினார். பின் திப்புசுல்தானின் தோல்விக்குப் பிறகு 1772ம் ஆண்டில் சேலம் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.  பிரிட்டிஷ் கிழக்கிந்திய படைக்கும் திப்புசுல்தானுக்கும் இடையே 1792ல் நடந்த போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திப்புசுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு பாராமஹால் மற்றும் சேலம் மாவட்டம் 1792ல் உருவாக்கப்பட்டது. 



1801ல் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டது.



பின்னர் 1808ல் இ.ஆர்.ஹார்கிரேவ் மாவட்ட கலெக்டராக இருந்த போது சேலம் மாவட்டம் உருவாயிற்று. 1820 முதல் 1829ம் ஆண்டு வரை சேலத்தில் கலெக்டராக இருந்த ஸ்காட்லாந்தை சேர்ந்த டேவிட் காக்பர்ன் ஏற்காட்டின் தந்தையாக பாவிக்கப்படுகிறார். ஏற்காடு மலைத்தொடர் முதன் முதலாக கண் டறியப்படுவதற்கு முன்னாள் இருளடைந்த காடுகளாக இருந்தது.  இவரது காலத்தில் தான் சேர்வராயன் மலைப்பகுதியில் காபி, பேரிக்காய் மற்றும் ஆப்பிள் பயிரிடப்பட்டது. சேர்வராயன் மலைக்கு பின்னரே தமிழகத்தின் நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களுக்கும் காபி பயிரிடுவது விரிவடைந்தது.  முதன் முதலில் 1827ல் சேர்வராயன் மலைப்பகுதியில் சர்வே மேற்கொள்ளப்பட்டது.



அப்பொழுது சேர்வராயன் மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. 19ம் நூற்றாண்டுகளில் யானைகளின் நடமாட்டம் இப்பகுதிகளில் இல்லை. இதனிடையில் 1836ம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த பிஷர் என்பவர் சேலம் ஜமீன்தாரின் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை விலைக்கு வாங்கினார். அவரைத் தொடர்ந்து சேர்வராயன் மலைப்பகுதியில் உள்ள தோட்டங்கள் உள்ளடக்கிய நிலங்களை பெரிய பணக்கார முதலாளிகள் வாங்க முன்வந்தனர். பாண்டிச்சேரியில் இருந்து வந்த சில பிரஞ்சுக்காரர்களும், கிறிஸ்தவர்களும் இதில் அடக்கம். இவர்களுடன் ஏற்காடு பகுதியில் குடியேறிய கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையினர் ஆவர்.


முதுமலை யானை முகாம் உருவானது எப்படி?





கோடை காலத்தில் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் முதுமலைக்கு போகாமல் திரும்ப மாட்டார்கள். அங்கு நடக்கும் யானை சவாரி பிரபலமானது. காட்டு யானைகளை கண்டாலே தொடை நடுங்கி ஓடும் நமக்கு, இந்த யானைகளை கண்டால் வருடி பார்க்க தோன்றும். கொஞ்சம் கூட பயம் வராது. இயல்பாக காட்சியளிக்கும். இதற்கு காரணமே முகாமில் யானைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி தான்.


முதுமலை யானை முகாம் தோன்றியதில் ஒரு வரலாற்று பின்னணியே உண்டு. நூறு ஆண்டுகளுக்கு முன் வரை இந்த வனப்பகுதியில் மரங்களை வெட்டி எடுத்து செல்லும் பணிகளுக்கு யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மரங்களை கொண்டு செல்லும் யானைகள் தினமும் ஓய்வெடுப்பதற்கு 1910ம் ஆண்டு முதுமலை அருகே ஜேம்ஹட் என்ற இடத்தில் ஒரு முகாமை ஆங்கிலேய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.



பின்னர் அந்த பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் யானைகளுக்கு தண்ணீர் கிடைப்பது கூட சிக்கலானது. அப்போது மாயாற்றில் தண்ணீர் செல்லவே 1927ம் ஆண்டு தெப்பக்காட்டுக்கு முகாமை மாற்றியுள்ளனர். அப்போது முதல் தெப்பக்காட்டிலேயே முகாம் இயங்கி வருகிறது. இந்த முகாமில் பராமரிக்கப்பட்ட யானைகளுக்கு ஒவ்வொரு விதமான வேலைகளும் வழங்கப்பட்டுள்ளன. 6 வயது முதல் 15 வயது வரையிலான யானைகளுக்கு இலகுவான வேலைகளும், 15 வயது முதல் 25 வயது வரையிலான யானைகளுக்கு கொஞ்சம் கடினமான மரங்களை தூக்கும் வேலைகளும் வழங்கப்பட்டுள்ளன. 25 வயது முதல் 40 வயது வரையிலான யானைகளுக்கு தான் வேலையே அதிகம்.



மிக கடினமான அனைத்து வேலைகளையும் இந்த யானைகள் தான் செய்யவேண்டும். அதன் பின்னர் மீண்டும் கொஞ்சம் பணி சுமை குறையும். 58 வயதானால் போதும். ராஜ மரியாதை தான். அரசாங்க வேலையில் இப்போது 58 வயதினருக்கு ஓய்வு கொடுப்பது போல் இந்த யானைகளுக்கும் ஓய்வு கொடுப்பது இப்போதும் நடைமுறையில் உள்ளது. பின்னர் முகாமிலேயே பராமரிக்கப்படும். எந்த வேலையும் கொடுப்பதில்லை. மற்ற யானைகளுக்கு போல் அவ்வப்போது தேவையான உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்படும். முகாமில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடக்கும் போது மட்டும் இந்த யானைகளுக்கு முதல் மரியாதை உண்டு. இந்த முகாமில் அதிக ஆண்டுகள் வசித்த யானை ரதி. 77 வயதை கடந்து கடந்த 10 நாட்களுக்கு முன் மரணம் அடைந்தது. தற்போது 68 வயதான பாமா முகாமில் ஓய்வெடுத்து வருகிறது.



வனப்பாதுகாப்பு சட்டம் 1927ல் அமலுக்கு வந்த பின்னர் மரங்கள் வெட்டுவது குறைந்தது. அதன் பின்னர் முகாமில் வளர்க்கப்படும் யானைகளை சவாரிக்கு பயன்படுத்துவது, வனக்கொள்ளைகளை தடுப்பது, காட்டு யானைகளால் தொல்லை ஏற்படும் பகுதிகளுக்கு அழைத்து சென்று விரட்டியடிப்பது போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மொத்தம் 24 யானைகள் உள்ளன. இதில் 1972ல் ஒரே யானைக்கு பிறந்த இரட்டையர்கள் சுஜய், விஜய் ஆகியோரும் அடக்கம்.



தென்னிந்தியாவில் உருவான முதல் யானை முகாம் என்பது பலர் அறியாத விஷயம். 1910ம் ஆண்டு முதுமலை அருகே ஜேம்ஹட் என்ற இடத்தில் ஒரு முகாமை ஆங்கிலேய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். பின்னர் அந்த பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் யானைகளுக்கு தண்ணீர் கிடைப்பது கூட சிக்கலானது. அப்போது மாயாற்றில் தண்ணீர் செல்லவே 1927ம் ஆண்டு தெப்பக்காட்டுக்கு முகாமை மாற்றியுள்ளனர். அப்போது முதல் தெப்பக்காட்டிலேயே முகாம் இயங்கி வருகிறது.



வேடர்கள் தங்கிய வேடந்தாங்கல் பெயர் காரணம்!





ஆங்கிலேயர் காலத்தில் அங்கு வேடர்கள் தங்கி பறவைகளை வேட்டையாடினர். அதன் காரணமாக வேடந்தாங்கல் என்று பெயர் வந்தது. 



அதன் பிறகு பறவைகளை வேட்டையாட தடை விதிக்கப்பட்டது. 



இப்போதும் வேடந்தாங்கல், மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பறவைகளை வேட்டையாடுவது, துன்புறுத்துவது போன்றவற்றில் ஈடுபடுவது இல்லை.



 பறவைகள் பயப்படும் என்பதால் வேடந்தாங்கல் மக்கள் தீபாவளிக்கு பட்டாசு கூட வெடிப்பது இல்லை. 



பறவைகளின் எச்சம் கலந்த ஏரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவதால் நல்ல மகசூல் கிடைக்கிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

சிறுநீரகக் கற்கள் ஏற்பட முக்கிய காரணம்!



இன்றைய கால கட்டத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது எனலாம்.


சிறுநீரகத்தில் கல் உள்ளவர்களுக்கு தாங்க முடியாத அளவிற்கு வயிற்று வலி ஏற்படும். நாளடைவில் சிறுநீர் பாதையில் தடையை உண்டாக்குகிறது. சில உணவுப் பொருட்களை தவிர்ப்பதன் மூலம் சிறுநீரக கல் வராமல் தடுக்கலாம். இதற்குமுக்கிய காரணம் தண்ணீர் அதிகளவு எடுத்துக் கொள்ளாததே.


பால், தயிர். மோர் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளாவிட்டால் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். கால்சியத்தின் தேவை காரணமாக, குடல் அதிக அளவில் ஆக்ஸலேட்டை ஈர்த்துக் கொள்ளும். இவ்வாறு ஈர்க்கப்பட்ட ஆக்ஸலேட் ரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்திவிடும்.


வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல், சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பினால் உடலில் திரவம் மற்றும் தேவையற்ற வீணான பொருட்கள் சேர்ந்து இவை இரத்தத்திலும் அதிகரிப்பதினால் கற்கள் ஏற்படுத்துகின்றது.


அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூமிரியா போன்ற நைட்ரஐன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூமிரியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும்.


அதிக அளவு வெப்பத்தால் உடலில் அதிகம் வியர்க்கிறது. வெளியேறும் வியர்வைக்கு ஏற்ற அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால், சிறுநீரகக் கற்கள் உருவாகிவிடுகின்றன. நம் உட்கொள்ளும் உணவு முறைகளில் இப்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. புரச்சத்து, நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகளைத் தேவையான அளவு உட்கொள்வதில்லை. இவை சீறுநீரகக் கற்கள் உருவாகக் முக்கிய காரணம்.

உப்பு வியாபாரியும்..கழுதையும் (நீதிக்கதை)!





ஒரு ஊரில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான்.அவனிடம் ஒரு கழுதை இருந்தது.அவன் ஊரில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது.பக்கத்து ஊருக்குச் செல்லக் கூட ஆற்றைக் கடக்க வேண்டும்.


அவன் தினமும் அடுத்த ஊருக்குச் சென்று உப்பு மூட்டையை கழுதையின் முதுகில் ஏற்றி ஆற்றைக் கடந்து தன் ஊருக்கு வந்து உப்பு வியாபாரம் செய்து வந்தான்.


அப்படி செய்கையில், ஒரு நாள் உப்பு மூட்டையுடன் கழுதையை ஆற்றில் இறக்கி நடந்து வந்த போது..ஆற்றின் நீர் மட்டம் உயர..உப்பு மூட்டை நனைந்து அதில் இருந்த உப்பு சற்று கரைய..கழுதைக்கு சுமந்து வந்த சுமை சற்று குறைந்தது.இதனால் மனம் மகிழ்ந்த கழுதை..அடுத்தடுத்த நாட்களில் உப்பை சுமந்து வரும்போது..வேண்டுமென்றே தண்ணீரில் அமிழ்ந்து உப்பைக் கரைத்தது.


இதனால்..வியாபாரத்தில் நஷ்டமடைந்த வியாபாரி..ஒருநாள் கழுதை செய்யும் தந்திரத்தை அறிந்தான்.உடன் கழுதைக்கு பாடம் கற்பிக்க எண்ணினான்.


அடுத்த நாள் அவன் கழுதையை கட்டிப் போட்டுவிட்டு..உப்புக்கு பதில்..பருத்தி பஞ்சை ஒரு மூட்டை வாங்கி வந்து கழுதையின் முதுகில் கட்டினான்.


வழக்கம் போல ஆற்றைக் கடக்கையில் கழுதை தண்ணீரில் அமிழ்ந்தது.பஞ்சு மூட்டை தண்ணீரில் நனைய ..மூட்டையின் சுமை ஏறியது.கழுதையும் கடக்க முடியாமல் ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.


தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது.இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.


நாமும்..நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது.அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும்.அன்று அவமானம் அடையும் நிலை வரும்.அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.