Search This Blog

Friday 8 November 2013

சுற்றினால் .........கவிதை!


புவி சுற்றினால்
காலத்தின் ஓட்டம்!
-
சூரியன் சுற்றினால்
பகலிரவு மாற்றம்!
-
காற்று சுற்றினால்
சூறாவளித் தோற்றம்!
-
தலை சுற்றினால்
மனிதருக்கு மயக்கம்!
-
பூக்களைச் சுற்றினால்
மணத்தின் ஈர்ப்பு!
-
பேட்டையைச் சுற்றினால்
பயங்கரப் பேர்வழி!
-
நாட்டைசு சுற்றினால்
நாளைய தலைவன்!
-
எண்களைச் சுற்றினால்
பேசலாம் தொலைபேசி!
-
வீணாகச் சுற்றினால்
உயர்வேது நீ யோசி!

வாழ்வை மாற்றும் 10 வாக்கியங்கள்

அடுத்து வரும் வாக்கியங்கள் வாசிக்க மட்டுமல்ல. யோசிப்பதற்காகவும் கூட. அவற்றைப் புரிந்து கொண்டால் பார்வை விரியும். பார்வை விரிந்தால் பாதை தெரியும்.


1.பணிவு

பணிவு எப்போதும் தோற்றதில்லை; பயம் ஒருபோதும் வென்றதில்லை


2.கல்வி

தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்; வெற்றியின் போது அதை நினைவில் வைத்துக் கொள்


3.படைப்பு

காற்றால் நிரம்பிய வானத்திலும் கல்லாய் இறுகிய பாறையிலும் எதுவும் விளைவதில்லை


4.படிப்பு

யோசிக்க வைக்காத புத்தகம் உபயோகமில்லாத காகிதம்


5.தேடல்:

பேணி வளர்க்க வேண்டிய உறவுகள் மூன்று

உங்களுக்கும் மனதிற்குமான உறவு;

உங்களுக்கும் உலகிற்குமான உறவு;

உங்களுக்கும் கடவுளுக்குமான உறவு


6..இலக்கு

நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள் நிலவை ரசிக்கத் தவறிவிடுகிறார்கள்


7.முயற்சி

பனி பெய்து குடம் நிரம்பாது. கோஷங்கள் மட்டுமே லட்சியங்களை வென்றெடுக்காது


8.சாதனை

மைல் கற்கள் பயணிப்பதில்லை சாதனைகளைக் கடப்பதுவே சாதனை


9. எதிர்காலம்

எதிர்காலத்தை நம்புங்கள்; எறும்புகள் கூட சேமிக்கின்றன


10.நாளை

நாளை என்பது இன்று துவங்குகிறது.

காமன்வெல்த் மாநாடு மறுபடியும் அவமானம்!

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா  பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.  ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தியாவின் பிரதிநிதியாக அதில் கலந்து கொள்வார் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும்.


 இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. முன்னர் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதே கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன் வைத்தார்கள்.  ஆனால், இத்தனைக்கும் பிறகும் இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தியாவின் பிரதிநிதியாக அதில் கலந்து கொள்வார் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, அவமதிப்பதாகவும் ஆகும்.


அது என்ன காமன்வெல்த்?

இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற பின் பிரிட்டிஷ் அரசு பல நாடுகளில் இருந்து வெளியேறத் தீர்மானித்தது. ஆனால் அதன் கீழ் இருந்த எல்லா நாடுகளுக்கும் அது சுதந்திரம் அளித்துவிடவில்லை. சில நாடுகளை அரசுக்குக் கீழ்படிந்த தன்னாட்சி நாடுகளாக (டொமீனியன்) வைத்திருந்தது. சில சிறிய தீவுகளை தன்னுடைய அயலகப் பகுதிகளாக (British overseas Terrirories) வைத்திருந்தது (இன்று இந்தியாவில் யூனியன் பிரதேசங்கள் என்றிருப்பவை இந்தக் கருத்தாக்கத்திலிருந்து உதித்தவைதான்) சில இந்தியா போல முற்றிலும் தன்னாட்சி கொண்ட குடியரசுகள். இவை எல்லாவற்றிற்கும் சேர்த்து, ஐ.நா. சபை போல ஒரு பன்னாட்டு அமைப்பை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஐ.நா.வின் முன்னோடியான லீக் ஆஃப் நேஷன்ஸ் என்ற அமைப்பை உருவாக்கிய லார்ட் டேவிஸ், சர்ச்சிலின் ஆலோசனைப்படி ஓர் அமைப்பை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டார். அதுதான் காமன்வெல்த். இன்று அதில் 53 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன, அவற்றில் முப்பது நாடுகள் சிறியவை (பெரும்பாலும் தீவுகள்).


பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த எல்லா நாடுகளும் அதில் உறுப்பினர்களாகி விட்டனவா?

இல்லை. எகிப்து, ஈராக், இஸ்ரேல் (அதற்கு முன்பு பிரிட்டிஷ் பாலஸ்தீனம் என்று பெயர்), சூடான், சோமாலியா, குவைத், பஹ்ரைன், ஓமன், கத்தார், அமீரகம், மியான்மர், ஏடன் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இணைந்து கொள்ளவில்லை. புரட்சிக்குப் பின் ஃபிஜி நீக்கப்பட்டுவிட்டது. ஜிம்பாப்வே விலகிக் கொண்டுவிட்டது. ஹாங்காங் சீனாவோடு சேர்ந்த பின் உறுப்பினராக இல்லை. இங்கிலாந்திற்கு மிக அருகில் இருக்கும் அயர்லாந்து ஆரம்பத்திலிருந்தே உறுப்பினராக இல்லை.


இந்தியா?

இந்தியா 1950-இல் குடியரசாக மலர்ந்தபோது காமன்வெல்த்தில் இணைந்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், காமன்வெல்த் நாடுகள் இங்கிலாந்து அரசர் அல்லது அரசியின் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். கட்டுப்பாடற்ற உறவைக் கொண்ட சுதந்திர நாடு (free association pf its independent member) என்ற அடிப்படையில் சுதந்திரமான, சமமான உரிமைகள் கொண்ட உறுப்பினராக ஏற்பதானால் இணைகிறோம் என கிருஷ்ண மேனன் ஒரு கடிதம் எழுதினார். 1949-இல் லண்டனில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் பிரதமர்கள் மாநாட்டில் இந்தியாவின் நிபந்தனை ஏற்கப்பட்டது (கிருஷ்ண மேனனின் இந்த வாக்கியம் இப்போதும் அந்த லண்டன் பிரகடனத்தில் இருக்கிறது). இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவிற்கு அளித்ததைப் போன்ற உறுப்பினர் அந்தஸ்தை தனக்கு அளிக்க வேண்டும் எனக் குரலெழுப்பியது. அதைத் தொடர்ந்து அதற்கும் அது அளிக்கப்பட்டது. இன்று அமைப்பில் உள்ள 53 நாடுகளும் சுதந்திரமும் சமநிலையும் கொண்ட உறுப்பினர்கள். அன்று ஏழையாக இருந்தபோதும் இந்தியா தன் நிலையை உறுதிபடக் கூறித் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. ஹூம்ம்ம் இன்று?


பிரிட்டிஷ் காலனியாக இல்லாத நாடு காமன்வெல்த்தில் உறுப்பினராக முடியாதா?

பிரான்ஸை சேர்க்க ஒரு முயற்சி நடந்தது. ஆனால், 1957-இல் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், முன்னர் ஜெர்மானியர் ஆதிக்கத்திலிருந்த ஆப்ரிக்க நாடான ருவாண்டா காமன்வெல்த்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.


காமன்வெல்த்தில் இருப்பதால் என்ன லாபம்?

நேரடிப் பொருளாதார லாபம் இருக்கிறது எனச் சொல்வதற்கில்லை. கல்வி, மக்கள் நலம், பருவநிலை மாற்றம் போன்ற துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பும், உதவியும் கிடைக்கும். விளையாட்டு, ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும். காமன்வெல்த் நாடுகளில் உள்ள குடிமக்கள் இன்னொரு காமன்வெல்த் நாட்டிற்குச் செல்ல விரும்பினால் விசா இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று நீண்டநாள்களாகப் பேசப்பட்டுக் கொண்டேஏஏஏஏ இருக்கிறது. அது ஒருபோதும் சாத்தியமாகாது. ஐரோப்பிய யூனியனைப் போல காமன்வெல்த் யூனியன் என்ற ஒன்று உருவாக வேண்டும். அதில் பொதுக் கரன்சி, தடையற்ற வர்த்தகம் இதெல்லாம் இருக்க வேண்டும் எனச் சொல்லி வருகிறார்கள். இதுவும் நாளையே நடக்கக் கூடிய விஷயம் அல்ல. மக்கள் பிரதிநிதித்துவம் கொண்ட ஜனநாயகம், பாலின சமத்துவம், மனித உரிமைகள் இவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்ட நாடுகள்தான் காமன்வெல்த்தில் இருக்க முடியும். எனவே காமன்வெல்த் நாடு என்றால் இவையெல்லாம் இருக்கிறது என உலகம் எண்ணும். ஆனால், இலங்கையைப் பார்த்தபின் இனியும் உலகம் நம்புமா?


இலங்கை மாநாட்டில் என்ன பிரச்சினை?

காமன்வெல்த்தின் அடிப்படைக் கொள்கைகள் 16. அவற்றில் ஜனநாயகம், மனித உரிமைகள், சமாதானம், பிற மத, இன, நிறத்தவர் குறித்த சகிப்புத்தன்மை, அவர்கள் பால் மரியாதை, அவர்களைப் பற்றிய புரிந்துணர்வு, கருத்து சுதந்திரம், அதிகாரப் பங்கீடு, சட்டத்தின் ஆட்சி, நல்ல ஆளுகை என்பன சில.


இலங்கையில் நடந்த போருக்கு முன்பும், போரின் போதும், பின்னரும் என்ன நடந்தன என்பதை விவரிக்கத் தேவையில்லை. மேலே குறிப்பிட்ட எதையும் இலங்கை கடைப்பிடிக்கவில்லை. இந்தக் காரணங்களுக்காகவே அதை காமன்வெல்த்திலிருந்தே விலக்கி வைக்கலாம். அப்படியிருக்க, அங்கு காமன்வெல்த் நாடுகளின் அரசுத் தலைவர்கள் மாநாடு நடைபெறுவது என்பது கேலிக்கூத்தாக அல்லவா இருக்கும்?


மாநாட்டை நடத்துவதால் இலங்கைக்கு ஏதும் ஆதாயம் உண்டா?

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் நாடுகளில் உள்ள அரசுகளின் தலைவர்கள், அதாவது ஜனாதிபதி அல்லது பிரதமர்கள் கூடி பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசுவார்கள். எந்த நாட்டில் மாநாடு நடைபெறுகிறதோ, அந்த நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமர், காமன்வெல்த்தின் நிர்வாகத்  தலைவராக (Chair person in office) இருப்பார் (நிரந்தரத் தலைவர் அரசி).  இந்த முறை இலங்கையில் மாநாடு நடைபெறுவதால் 2015 வரை ராஜபக்‌ஷே தலைவராவார்.


முதலில் இந்த மாநாடு 2011-இல் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. அப்போதும் அதன் மீது போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கனடாவும், இங்கிலாந்தும் அங்கு மாநாட்டை நடத்த ஆட்சேபம் தெரிவித்தன. அதனால் ஆஸ்திரேலியாவில் மாநாடு நடந்தது. இப்போது இலங்கையில் நடைபெறுவது அந்தக் குற்றச்சாட்டுகள் மன்னிக்கப்பட்டதாக கருத இடமளிக்கிறது.


24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய நாடு ஒன்றில் இந்த மாநாடு நடைபெறுகிறது என்ற பெருமை இலங்கைக்குக் கிடைக்கும். நாங்கள் ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்கிறோம், சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது, யுத்தத்திற்குப் பிறகு மீண்டுவருகிறோம் என உலகின் தலைவர்களுக்குக் காட்ட ஒரு வாய்ப்பாக இலங்கை இதைப் பயன்படுத்தும்.


இதில் கலந்து கொள்ளாவிட்டால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்பது உண்மையா?

இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீறலைச் சுட்டிக் காட்டி கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். இங்கிலாந்தின் அயலுறவுத் துறைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கமிட்டி, மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் காமரூனுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இங்கிலாந்தில் ஆட்சியில் இல்லாத நிலையில், எதிர்க்கட்சி நிழல் அரசாங்கம் என்ற ஒன்றை அமைக்கும். அதற்கு அதிகாரங்கள் கிடையாது என்றாலும் ஒவ்வொரு துறைக்கும் ஒருவரை அமைச்சராக நியமித்து முக்கிய விஷயங்களை ஆராய்ந்து கருத்துக்களை அரசின் முன்னும் மக்கள் முன்பும் வைக்கும். அப்படி நிழல் அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சரான டக்ளஸ் அலெக்சாண்டர், மாநாட்டைப் புறக்கணிப்பதோடு காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை விலக்கி வைக்க வேண்டும் என்று கூடக் கோரியிருந்தார். எனவே, இந்தியா இந்த மாநாட்டைப் புறக்கணித்தால் தனிமைப்படுத்தப்படும் என்ற வாதத்தில் சாரமில்லை. காமன்வெல்த் நாடுகளில் மொத்தம் 200 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அதில் 117 கோடி மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அதாவது, காமன்வெல்த்தில் உறுப்பினராக உள்ள நாடுகளிலேயே இந்தியாதான் பெரிய நாடு. அதை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது.


காமன்வெல்த் அமைப்பிலிருந்து அதன் உறுப்பு நாடுகளை விலக்க முடியுமா?

நீக்க முடியாது. ஆனால் இடைநீக்கம் செய்யலாம். பாகிஸ்தான் இரண்டு முறை இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 1999-இல் பர்வேஸ் முஷாரப் ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியபோது ஐந்தாண்டுகளுக்கு அது விலக்கி வைக்கப்பட்டது. பின் 2007-இல் இரண்டாம் முறை இடை நீக்கம் செய்யப்பட்டது. நைஜீரியா, ஜிம்பாப்வே, ஃபிஜி ஆகிய நாடுகளும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன


இதில் கலந்துகொள்ளாவிட்டால் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க முடியாமல் போய்விடும், அது தமிழர்கள் நலனுக்குக் கேடாக அமையும் என்கிறார்களே?

மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம், நாம் இலங்கையுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொள்ளப் போவதில்லை. தூதர்கள் இருக்கும்வரை பேச்சுவார்த்தைகள் சாத்தியமே. அதுவும் தவிர, போரில் சிதைந்த இலங்கையைச் சீரமைக்கும் பணிக்கு இந்தியா ஏராளமாக உதவி வருகிறது. எனவே, இந்தியாவை எளிதாக இலங்கையால் புறக்கணித்துவிட முடியாது. அங்குள்ள தமிழர் கட்சிகளும், அண்மையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வட மாகாண அரசும் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன. அப்படியானால், இலங்கை அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தாமல் போய்விடுமா?


இந்தியா என்ன செய்திருக்க வேண்டும்?

இந்தியா, இலங்கையின் மீது அழுத்தத்தைக் கொண்டுவர இதை ஒரு வாய்ப்பாகப் பயனப்டுத்திக் கொண்டிருக்க வேண்டும். மாநாட்டில் கலந்துகொள்ள சில நிபந்தனைகளை விதித்து அவற்றை வற்புறுத்தியிருக்க வேண்டும்.  உலக நாடுகளுடன் உள்ள உறவை-குறிப்பாக கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் உள்ள உறவைப் பயன்படுத்தி அந்த நிபந்தனைகளுக்கு இலங்கையை இணங்க வைத்திருக்க வேண்டும். வைத்திருக்க முடியும். தன்னை உலகில் ஒரு வலிமையான தேசம் என நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும்.


தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானம் எந்த அளவு முக்கியத்துவம் கொண்டது?

இலங்கை விவகாரத்தில் இதற்கு முன்பும் தமிழக சட்டமன்றம் தீர்மானங்கள் இயற்றி இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். இது தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. தமிழக அரசியல் கட்சிகளின் நிலையை எதிரொலிக்கிறது. இந்தத் தீர்மானம் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேறியிருக்கிறது. இதற்கு முன்பும் பலமுறை இதைக் குறித்து முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரலெழுப்பி இருக்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு மத்திய அரசு மாநாட்டில் பங்கேற்பது என முடிவு செய்தால் அது தமிழர்களின் உணர்வுகளை அது பொருட்படுத்தவில்லை, அலட்சியப்படுத்துகிறது என்றே பொருள். இங்கே ஓர் ஒப்பீடு தவிர்க்க முடியாததாகிறது.


காமன்வெல்த் அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றாத இலங்கையில்  நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று கனடா நாட்டுப் பிரதமர் அறிவித்துள்ளார். தமிழர்கள் மிகக்குறைவாக வசிக்கும் கனடா நாடே இது போன்றதொரு முடிவை எடுத்துள்ள நிலையில், எட்டு கோடி தமிழர்கள் வசிக்கும் இந்தியா இது போன்ற முடிவு எதையும் அறிவிக்கவில்லை. ஏன்? தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.


தமிழ்நாட்டிற்கு வெளியில் இருப்பவர்கள் இந்தப் பிரச்சினை பற்றி அக்கறை காட்டவில்லை என்கிறார்களே, அப்படியான நிலைமையில் இந்தத் தீர்மானத்தால் என்ன பயன்?

தமிழர்கள் அல்லாத இந்தியர்கள் இந்தப் பிரச்சினையில் அக்கறை காட்டவில்லை என்பது உண்மைதான். ஐ.நா.வின் பொதுச் செயலாளராக பான் கீ மூன் இருப்பதைப் போல காமன்வெல்த்தின் பொதுச் செயலாளராக ஒருவர் இருக்கிறார். அவர் ஓர் இந்தியர். அவர் பெயர் கமேலேஷ் சர்மா. இலங்கைப் போரின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் நிகழந்தபோது அவர் அதைக் கண்டித்து ஓர் அறிக்கை கூட வெளியிடவில்லை. காமன்வெல்த் தலைமைச் செயலகப் பணியாளர்கள் அவர் ஓர் அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டபோது கூட அவரது வேலை அல்ல எனச் சொல்லிவிட்டார். தமிழர் அல்லாத இந்தியர்கள், ஏன் உலக நாடுகள் இதில் அக்கறை காட்டாததற்கு அங்கு நடந்த பயங்கரவாதச் செயல்களும், நம் அரசியல் தலைவர்களின் கிணற்றுத் தவளை மனோபாவமும் ஓரு காரணம்.


பிரதமர் கலந்து கொள்வாரா?

அது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் அரசியல் காரணங்களை முன்னிட்டு அவர் தவிர்க்கலாம். 2011-இல் நடந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பாக துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி பங்கேற்றார். அதைப் போல இம்முறையும் நடக்கலாம்.



இடையறாத எதிர்ப்பு

இலங்கைக்கு எதிராக தமிழகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆனால், மத்திய அரசு அதைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை

 அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது ஈவு இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.


இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பி,  சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகைசெய்ய வேண்டும்.


அதுவரையில் அனைத்துக் குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8.5.2011 தமிழக சட்டமன்றத் தீர்மானம்



2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.


இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது.

25.3.2013 அன்று, பிரதமருக்கு முதல்வர்  எழுதிய கடிதம் 


இலங்கை நாட்டை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.


இலங்கை இனப்போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேசப் புலன் விசாரணை நடத்த வேண்டும்.


இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில் போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திட வேண்டும்.


தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும்.


ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தனி ஈழம் குறித்து இலங்கைவாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திட, ஐக்கிய நாடுகள்  சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- 27.3.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம்


இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கவும், சிங்களர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளவும் எதிர்ப்பு.


இலங்கை ராணுவ வீரர்களுக்கு, இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது.

ஜூன் 2013-இல் பிரதமருக்கு முதல்வரின் கடிதம்


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்.


பெயரளவிற்குக் கூட ஒருவரும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது.


இது போன்ற நடவடிக்கை, இலங்கைத் தமிழர்கள் மீது நியாயமான அணுகுமுறையை இலங்கை அரசு எடுக்க வழிவகுக்கும்.

17.10.2013 அன்று பிரதமருக்கு முதல்வர் கடிதம்


தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.


பெயரளவிற்குக்கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது.


இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்குத் தெரியப்படுத்த வேண்டும்.


இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும் சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

25 அக்டோபர் 2013 சட்டமன்றத் தீர்மானம்



குரல்கள்

மத்திய அரசு இனியும் தாமதம் செய்யாமல், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிப்பதே சரியாக இருக்கும் என்பதையும், பிரதமர் உடனடியாக அதற்கான அறிவிப்பைச் செய்யும் படியும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

- கருணாநிதி (திமுக)


கொழும்பில் காமன்வெல்த் மாநாடு நடப்பது, ஜீவகாருண்ய சபைக்கு கசாப்புக் கடைக்காரர் தலைவராக இருப்பதைப் போன்றது. இந்தத் தீர்மானத்துக்கு மத்திய அரசு எந்த அளவுக்கு மரியாதை தரும் என்பது புரியவில்லை.

-பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக)


உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் சமப்படுத்த வேண்டும். தமிழினம், தமிழ் வாழ வேண்டும். அந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொண்டால்தான் இலங்கையில் உள்ள தமிழர்களின் பொருளாதாரம் மேம்படும். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள வேண்டும்.

-மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்


அந்த மாநாட்டில் பெயரளவில் கூட இந்தியா கலந்து கொள்ளக்கூடாது.

-ஆறுமுகம்  (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)


காலனி ஆதிக்கத்தின் நினைவுச்  சின்னமாகத் திகழும் காமன்வெல்த் என்ற அமைப்பே தேவையில்லை என்பது எங்களின் எண்ணம்

-சவுந்தரராஜன்  (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

கண்ணீரை வரவழைக்காத வெங்காயம் கண்டுபிடிப்பு!

கண்ணீர் வரவழைக்காத வெங்காயத்தை, அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.


இது குறித்து இந்த வெங்காயத்தை உருவாக்கியுள்ள விஞ்ஞானி, கோலின் இயாடி கூறியதாவது:


சமையலில் பெரும் பங்கு வகிக்கும் வெங்காயம், அதை உரிப்பவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. வெங்காயத்தில் உள்ள கந்தக அமிலம் தான் கண்ணீரை வரவழைக்கிறது. எனவே, கந்தக அமில தன்மையில் மாற்றம் செய்து, புதுவகை வெங்காயத்தை உருவாக்கியுள்ளோம்.


இந்த புது வெங்காயம், கண்ணீரை வரவழைக்காது. பூண்டில் உள்ள அனைத்து குணங்களும், புது வெங்காயத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.


ரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை, பூண்டுக்கு உண்டு. அந்த குணங்கள், புது வெங்காயத்தில் உருவாக்கியுள்ளோம்.


இதன் மூலம் இதய சம்பந்தமான நோய்கள் தவிர்க்கப்படும். உடல் எடையும் குறையும் என கோலின் மேலும் தெரிவித்தார்.


இந்த வெங்காயம் எப்போது சந்தைக்கு வரும் என்பதை, அவர் குறிப்பிடவில்லை.

தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான்.!

மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படையே, தெரியாத உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் முனைப்புதான். ஆதிமனிதர்கள் இயற்கையின் ரகசியங்களைக் கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கினார்கள். நமது முன்னோர்களது கண்டுபிடிப்புகளின் பலன்களை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நமது கண்டுபிடிப்புகளின் பலன்களைத் தருவது நமது கடமை. இந்தத் தொடர்ச்சி அறுந்துவிடக்கூடாது. நமது நாட்டில் மதங்களும் சாதிகளும் பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளும் மனித முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, அவ்வப்போது அந்தத் தொடர்ச்சியை அறுத்துவிட்டுள்ளன.


nov 8 edit isro


நாட்டில் வறுமையும் பிணியும் கல்லாமையும் தொடர்கிற நிலையில், 450 கோடி ரூபாயில் செவ்வாய்க் கோள் ஆராய்ச்சி தேவைதானா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம் நாட்டில் எல்லாத் துறைகளிலும் இருக்கின்றன. விளையாட்டுத் துறையை எடுத்துக்கொண்டால் கிரிக்கெட்டுக்குத் தரப்படுகிற முக்கியத்துவம் நமது பாரம்பரிய விளையாட்டுகளுக்குக் கூட அளிக்கப்படுவதில்லை. அந்த விளையாட்டுகளுக்கு சமமான முக்கியத்துவம் அளியுங்கள் என்றுதான் வலியுறுத்த வேண்டுமே தவிர, நம் மக்களின் வாழ்வோடு கலந்துவிட்ட கிரிக்கெட்டை நிராகரித்துவிட முடியாது. அதுபோல் வறுமை ஒழிப்பு, பொதுக் கல்வி, பொது மருத்துவம் ஆகியவற்றுக்கு முழுமையான முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்திப் போராட வேண்டுமேயன்றி அறிவியல் ஆராய்ச்சி தேவையில்லை என்ற முடிவுக்குப் போய்விடக் கூடாது.

சொல்லப்போனால் அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக மிகவும் குறைவாகச் செலவிடும் நாடு இந்தியா. ‘பிரிக்ஸ்’ (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) அமைப்பில் உள்ள நாடுகளில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்காகச் செலவிடுவதில் கடைசி இடத்தில்தான் இந்தியா இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீத நிதிதான் அறிவியலுக்காக ஒதுக்கப்படுகிறது. 2 சதவீதமாகவாவது அதை உயர்த்த வேண்டும் என்ற அறிவியலாளர்கள் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்ற நியாயமான ஆலோசனை புறக்கணிக்கப்படுவது போலத்தான்.

இந்தியாவின் பல வல்லுநர்கள் அமெரிக்காவின் ‘நாசா’ போன்ற நிறுவனங்களுக்குச் சென்றிருப்பது வேலைவாய்ப்பு, நல்ல ஊதியம் என்பதற்காக மட்டுமல்ல. தாங்கள் கற்றறிந்த அறிவியலை இங்கே ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கத்தாலும்தான்.

மக்களின் வறுமைக்குக் காரணம் அறிவியல் ஆராய்ச்சிக்காக இத்தனை கோடி ஒதுக்குவதல்ல. விவசாய வளர்ச்சி, உள்நாட்டுத் தொழில் வளர்ச்சி, கல்வி மேம்பாடு போன்றவற்றிற்கு வழிவகுக்காத அரசின் பெருமுதலாளித்துவ ஆதரவுக் கொள்கைகளே காரணம். அந்தக் கொள்கைகளை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கின்றன. அந்தப் போராட்டங்களில் பெருந்திரளாகப் பங்கேற்று அவற்றை வெற்றிபெறச் செய்வதே மாற்றுக் கொள்கைகள் காலூன்றுவதற்குக் களம் அமைக்கும்.

‘மங்கள்யான்’ திட்டத்தால் நாட்டிற்கு எவ்வளவு வருமானம் கிடைத்துவிடப்போகிறது என்றும் கேட்கிறார்கள். இவ்வளவு முதலீடு செய்தேன், இவ்வளவு லாபம் கிடைத்தது என்று பார்க்கிற வியாபார விசயம் அல்ல இது. மற்ற நாடுகளின் செயற்கைக் கோள்களைக் கட்டண அடிப்படையில் விண்ணில் செலுத்துகிற ஒரு வர்த்தகத் திட்டமும் அல்ல. இப்படிப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிகளால் நேரடி பலன் என்று உடனடியாகக் கிடைத்துவிடாதுதான். ஆனால் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்படும் பல புதிய தொழில்நுட்பங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு வருகிறபோது மக்களுக்குப் பெரிதும் பலனளிக்கின்றன.

செவ்வாய்ப் பயணம் தேவையா என்ற விவாதங்களையே கூட மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே, அது விண்வெளி ஆராய்ச்சியால் கிடைத்த தொழில்நுட்பம் அல்லவா? செல்போன், பெர்சனல் கம்ப்யூட்டர் இரண்டும் இல்லாத உலகத்தை இன்று கற்பனை செய்தாவது பார்க்க முடியுமா? இவை விண்வெளி ஆராய்ச்சி வாகனங்களில் பயன்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களிலிருந்து கிடைத்தவைதான். எளிதில் கணக்குப் போடுவதற்கான கால்குலேட்டர், காலணிகளுக்குக் கூட பயன்படும் வெல்க்ரோ, வலியற்ற அறுவைக்குப் பயன்படும் லேசர் சர்ஜரி, சர்வசாதாரணமாகப் புழக்கத்துக்கு வந்துவிட்ட டிஜிட்டல் கடிகாரம், உடலின் உட்பகுதிகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்திடும் இன்ஃப்ரா ரெட் கேமரா, இதய சிகிச்சையில் முக்கிய வளர்ச்சியாக வந்துள்ள பேஸ் மேக்கர் பேட்டரி, கதிர் வீச்சுத் தடுப்புக் கண்ணாடிகள், அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை முறைகள், நோய்க்கிருமிகளற்ற தண்ணீர் தயாரிப்பதற்கான சுத்திகரிப்புக் கருவிகள், கார்களை இயக்குவதற்கான நேவிகேசன் அமைப்பு, எங்கே இருக்கிறோம் என்று அறிய உதவும் செல்போன் வழிகாட்டி என்று பல நன்மைகள் கிடைத்திருக்கின்றன. நாட்டிற்கு இன்று முக்கியமாகத் தேவைப்படுகிற மின்சாரத்தை சூரிய சக்தியிலிருந்து பெறுவது குறித்து இன்று பெரிதும் பேசப்படுகிறது. அந்த சூரிய மின்சாரத் தொழில்நுட்பமும் செயற்கைக்கோள்களுக்கான மின்சார ஏற்பாட்டிலிருந்து வந்ததுதான். இத்தகைய எண்ணற்ற பலன்கள் பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சிகளால் உலக மக்களுக்குக் கிடைத்துள்ளன.

செவ்வாய் ஆராய்ச்சியும் இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளை எதிர்காலத்தில் வழங்கக்கூடும். புயல்கள் உருவாவதைக் கண்டறிவதில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இந்த ஆராய்ச்சி வழிவகுக்கும் என்று இத்திட்டத்தில் பங்கெடுத்துள்ள வல்லுநர்கள் சொல்கிறார்கள். அப்படிச் செல்கிறபோது மோசமான புயல்தாக்குதல்களிலிருந்து மக்களைப் பெருமளவுக்குக் காக்க முடியும். இதற்கான உலகளாவிய ஆய்வுகளில் இந்தியாவின் பங்களிப்பாக அது அமையும். உலகத்தின் ஒரு அங்கம்தான் நாம். உலகத்திலிருந்து நாம் பெறுகிறோம், நாமும் உலகத்திற்கு வழங்குவோம்.

இன்னொரு முக்கியமான பயன் இருக்கிறது: செவ்வாய் என்பது பூமியைப் போல கல்லும் மண்ணும் உள்ள ஒரு செந்நிறக் கோள்தான், அதற்கென்று இயற்கைக்கு அப்பாற்பட்ட மகிமை எதுவும் கிடையாது என்ற உண்மை உறுதிப்படும் அல்லவா? செவ்வாய் தோஷம் என்பதன் பெயரால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்கெல்லாம் முடிவுகட்ட இந்த ஆராய்ச்சியும் தன் பங்கிற்கு உதவுமே! நட்சத்திரங்களும் கோள்களும் மனித வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை என்ற உண்மை பரவுமானால் அது சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய நன்மை!

அறிவியல் என்பது வெறும் பிப்பெட், பியூரட் மட்டுமல்ல. இந்தியாவின் அரசமைப்பு சாசனத்தில், மக்களிடையே அறிவியல் மனப்போக்கை வளர்த்தல் ஒரு லட்சியமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்பு சாசனத்தில் சொல்லப்பட்டிருப்பதை நிறைவேற்றுவது அரசின் கடமை. பள்ளிகள், கல்லூரிகளில் இயற்பியல், வேதியல் உள்ளிட்ட அடிப்படை அறிவியல் கல்வியை ஊக்குவிப்பது, அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் தங்களது சொந்த முயற்சியில் செய்கிற அறிவியல் விழிப்புணர்வுத் திட்டங்களை அரசாங்கமே மேற்கொள்வது, அறிவியல் திட்டங்களை முறைகேடுகள் இல்லாமல் செயல்படுத்துவது, ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவாக உருவாக்குவது என்று பல முனை நடவடிக்கைகள் தேவை. அதேவேளையில் அருமையான அறிவியல் திட்டங்களைத் தொடங்குகிறபோது, ஏதோவொரு கோவிலுக்குச் சென்று கடவுள் சிலையின் பாதத்தில் திட்டத்தின் சிறு வடிவத்தை வைத்துப் பூசை செய்கிற அபத்தங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

ஸ்ரீஹரிகோட்டா போல தமிழகத்தின் குலசேகரபட்டினம் ஒரு பயனுள்ள தளமாக உருவாக முடியும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். கோள்களுக்கு செலுத்து வாகனத்தை ஏவுகிற எரிபொருள் செலவு அதனால் குறையும் என்கிறார்கள். தளத்திற்குத் தேவையான நிலம் அரசாங்கத்திற்கே சொந்தமானதாக இருந்தும் இந்த ஆலோசனையை ஏனோ மத்திய அரசு ஏற்காமலிருக்கிறது. இதை ஏற்றுச் செயல்படுத்த முன்வர வேண்டும்.

அறிவியல் கண்டுபிடிப்புத் திறன் எப்போது வளரும்? தாய்மொழி வழியாகக் கல்வி வழங்கப்படும்போதுதான் வளரும். அறிவியல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் இருக்கும் நாடுகளிலெல்லாம் தாய்மொழியில்தான் கல்வி வழங்கப்படுகிறது. இங்கே ஆங்கிலத்தின் வழியாகப் படித்துவிட்டு மொழிபெயர்த்து மொழிபெயர்த்தே மூளையின் கண்டுபிடிப்பு ஆற்றல் பின்னுக்குத் தள்ளப்பட்டு காப்பியடிக்கிற வேலைதான் நடக்கிறது. தொழில்நுட்ப வல்லுநர்கள் புறப்படுகிறார்களே தவிர, கண்டுபிடிப்பு அறிவியலாளர்கள் மிகக்குறைவாகவே உருவாகிறார்கள். தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான். ஆங்கில வழிக் கல்வியைத் திணிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு தாய்மொழியே பயிற்றுமொழி என்பதை மத்திய – மாநில அரசுகள் எல்லா மாநிலங்களிலும் உறுதிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன.

அறிவியல் திட்டங்களை நிராகரிப்பதற்கு மாறாக, இப்படிப்பட்ட மாற்று அணுகுமுறைகளுக்கான குரல்கள் வலுவாக ஒலிப்பதன் மூலமே மக்களுக்கான அறிவியல் ஓங்கிடும்.

பேஸ் புக் செய்திகள் பற்றிய ஓர் ஆய்வு!

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் பயன்படுத்துவது என்பது இளைஞர்களின் லேட்டஸ்ட் பேஷனாகவே மாறி விட்டது பஸ் புக்கை ஒரு நாள் அதை பயன்படுத்தாவிட்டாலும் அவர்கள் நிலை தடுமாறிதான் போய் விடுகிறார்கள் அந்த அளவுக்க மக்களை இந்த பேஸ்புக் தனக்கு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. இதற்கிடையில் பேஸ்புக் அனைத்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு போனிலும் பேஸ்புக் (Facebook for every phone) என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றை, பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டு இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


சென்ற ஆண்டைக் காட்டிலும் 54 சதவீதம் பேர் கூடுதலாக பேஸ்புக் இணைய தளத்தைப் பயன்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாதந்தோறும் மொபைல் போன்கள் வழியாக இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்க்ள் எண்ணிக்கை 75 கோடியே 10 லட்சம் பேர். உலக அளவில் பேஸ்புக் வாடிக்கையாளர் எண்ணிக்கை தற்போது 110 கோடி என்கிறார்கள்.

nov 8 - online media


இந்த நிலையில் பேஸ்புக் வலைத்தளத்துக்கு வரும் எவரும் சுடச் சுட செய்திகளை தெரிந்து கொள்வதற்காக வருவதில்லை. என்றாம், செய்திகளை கொண்டு சேர்ப்பதில் பேஸ்புக்கும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.அதே சமயம் பிச்புக்கில் பல தகவல்கள் பொய்யாக பரப்பப் படுகிறது என்றும் ஆய்வில் தெரிய வருகிறது
சமீபத்தில் தி பியூ ஆரய்ச்சி மையம் (The Pew Research Center) ஆய்வின்படி, பேஸ்புக் பயனாளர்களில் 47% பேர், செய்திகளை பேஸ்புக் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் தங்கள் நண்பர்கள் ஸ்டேடஸ் வாயிலாகவோ அல்லது தாங்கள் பின்பற்றும் வேறு சில செய்தி நிறுவனங்கள் வாயிலாகவோ அறிந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.


ஆனால் இவர்களில் 4% பேர் மட்டுமே பேஸ்புக் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு முக்கிய வழியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், பேஸ்புக் பயன்படுத்தும் 73% பேர் பொழுதுபோக்கு செய்திகள்தான் மிகவும் பிரபலமடைவதாக தெரிவித்துள்ளனர்.மேலும் சில தகவல்கள் பொய்யாக பரப்பப்படுவதாக குறிப்பிட்டனர்.


அதிலும் செய்திக்காக பேஸ்புக்கை நாடும் நபர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் அவர்களில் மூன்றில் ஒரு சதவீதத்தினர் வழக்கமான செய்திகள் பக்கம் தலை காட்டுவதில்லை என்கிறது அந்த ஆய்வு.இது குறித்து பியூ ஆரய்ச்சி மையத்தின் இயக்குனர் ஏமி மிட்செல் கூறுகையில், “செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஃபேஸ்புக் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான அனுகுமுறையை முன்னிலைப்படுத்துகிறது.



இந்த ஆராய்ச்சிக்காக 5,173 பேரிடம் கருத்துக்களைப் பெற்றபோது, நாம் செய்தியை மெனக்கிட்டு தேடாதபோதும் நாம் செய்தியை அறிந்து கொள்ள ஃபேஸ்புக் சிறந்தத் தளம் என ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார்.
பேஸ்புக் வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து கணிசமான அளவில் செய்திகளை பகிரும் செய்தி நிறுவனங்களின் இணையதளத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு வாசகர்கள் வட்டம் அதிகரிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


எந்த மாதிரியான செய்திகள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் வர வேண்டும் என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவினாலும், மேலோட்டமாக செய்திகள் தங்களது பேஸ்புக் முகப்புப் பக்கத்தில் வந்து சேர்வதை அனைவரும் விரும்புவதாகவே ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது..

உங்கள் நட்பை உரசிப் பார்க்க…


நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்

ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் – ஆங்கிலப் பழமொழி.


அன்பாக இரு
அனைத்து மதங்களின் போதனை இது. அன்புடன் இருப்பது என்பது பொறுப்புடன் கூடிய ஒரு முடிவு.


இன்றைய நட்புகளை எடை போட்டால் பெருமூச்சுதான் பெரிதாய் வரும். ‘உல்லாசத்துக்காக ஒன்று சேர்ந்தவையே நட்பாக இருக்கின்றன’ என்ற ஒருவரின் விமர்சனம் இன்றைய நட்புலகத்துக்கு வெகுவாகப் பொருந்தும்.



இன்று பெரும்பாலானவர்களின் அன்பு பாரபட்சம் பார்த்தே ஏற்படுகிறது. தேவையானபோது தொடர்பு கொள்வதும், தேவைக்காக பழகுவதும், கூடிப் பொழுதுபோக்குவதுமே நட்பென்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிஜத்தில் அது நட்புமல்ல, அன்புமல்ல, வெறும் சுயநலமே!


பிறரைப் பார்த்து நீ புன்னகைப்பது கூட ஒரு அறச்செயல்” என்று நபிகள் நாயகம் சொல்கிறார். ஆனால் வாய்விட்டுச் சிரித்தாலோ, அனைவரிடமும் சிரித்துப் பழகினாலோ சமூக வழக்கில் தப்பாய்ப் பார்க்கும் கண்ணோட்டம் பரவி இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாமே வலியவந்து எல்லோரிடமும் சிரித்துப் பழகி தொடர்ந்து அன்புறவில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்றுதான். இருந்தாலும் நாம் எத்தனை பேருடன் நட்புறவுடன் இருக்கிறோமோ, அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்ததற்கான அடையாளம்.



“என்னை நேசிப்பவரை நான் நேசிப்பேன், எனக்கு உதவி செய்தவருக்கு நான் உதவி செய்வேன்” என்பதுவே பலரின் எழுதப்படாத அன்பு இலக்கணம். பழிக்குப் பழி என்பதற்கும், இதற்கும் வித்தியாசமே இல்லை.



“மற்ற எல்லோருமே வெளியே செல்லும்போது உள்ளே வருபவன் தான் உண்மையான நண்பன்” என்று அறிஞர் டாக்டர் பில் மெக்கிராவ் சொல்வார். ஆமாம், உங்களிடம் எதைஎதையோ எதிர்பார்த்துப் பழகியவர்கள் எல்லாம் உங்களிடம் ஏதுமில்லை என்று அறிந்து விலகிச் செல்லும்போது, உங்களுடன் கரம் கோர்க்க, உங்களின் துயர் போக்க வருபவனே உண்மையான நண்பன் ஆவான். இதைத்தான் “இடுக்கண் களைவதே நட்பு” என்று வள்ளுவர் இலக்கணப்படுத்துகிறார்.


நீங்கள் நட்பு நிறைந்தவரா? என்பதை சோதிக்க உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள்…



    உங்களிடம் எதுவுமே சரியில்லை என்கிறபோதும் அணுகிப் பேசும் நண்பனை பெற்றிருக்கின்றீர்களா?

    ஒத்துப்போகாத விஷயங்களின்போது அவனுக்கு தனித்தன்மை இருப்பதை ஆமோதிக்கின்றீர்களா?

    வருத்தத்தில் இருக்கும் நண்பனின் சூழலை சமாளிக்க உங்களுக்குத் தெரிகின்றதா?
    நண்பனின் சில பழக்கவழக்கங்கள் பிடிக்காதபோது அதைப்பற்றி அவனிடம் வெளிப்படையாக பேசுகின்றீர்களா?
  
 தேவையென்றால் நண்பனிடம் தயக்கமின்றி உதவி கேட்கின்றீர்களா? உதவிக்கு நன்றி கூறுகின்றீர்களா?

    நண்பனின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நடக்கின்றீர்களா?
    நண்பன் ஒரு புதிய நண்பனைச் சந்திக்கும்போது, நம் நட்புக்கு இடைïறு வந்துவிட்டது என்று எண்ணுகின்றீர்களா?



கடைசி இரு கேள்விகளைத் தவிர மற்ற கேள்விகளுக்கு ‘ஆம்’ என்ற பதில் வராவிட்டால் நீங்கள் உண்மையான நண்பனை அடையவோ, உண்மையான நண்பனாக மாறவோ இன்னும் நிறைய பயணிக்க வேண்டும்.



உங்கள் நட்புறவை பரிசீலிக்க விரும்பினால் உங்கள் வாழ்வின் முக்கியமான 3 உறவுகளை பட்டியலிடுங்கள். அவர்கள் ஏன் உங்களுக்கு முக்கியமானவர்கள்? அவர்களுக்கு அந்த விசேஷ இடத்தைப் பெற்றுத் தந்த குணங்கள் என்ன? அவர்களின் கஷ்டங்களைப் போக்க நீங்கள் என்ன செய்ய தயாராக இருக்கிறேன்? என்று பட்டியலிடுங்கள். அவர்களின் சிறப்பு குணங்கள் உங்களுக்கு ஏற்படவும், அதே குணத்துடன் பிறருடன் நேசமாகப் பழகவும் முயற்சி செய்யுங்கள்.



ஒருவரோடு ஒருவருக்கு உள்ள உறவில் மட்டுமே நாம் முழுமையாக நாமாக இருக்கிறோம். நாமிலிருந்து பிரிந்த ‘நான்’ அழிந்து விடும். அப்படியென்றால் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா?


முகம் மலர பேசுவதல்ல, அகம் மலர பழகுவதே நட்பு என்கிறார் வள்ளுவர்.


ஒருவனுக்கு எப்படிப்பட்ட நண்பன் தேவை என்பதை ஆங்கிலக் கவிதை ஒன்று இப்படி வரையறுக்கிறது…



“தன் மனத்தை அப்படியே வெளிப்படுத்த முடிந்தவன்;


எப்போது வாயை மூட வேண்டும் என்று அறிந்தவன்;



அன்புடன் உணவையும், நல்ல நகைச்சுவைகளையும், சூரிய அஸ்தமனத்தையும் பகிர்ந்து கொள்பவன்;



உங்களுடன் பெரியவனாகவோ, சிறியவனாகவோ நடிக்காமல் தோழமையுடன் இருப்பவன்;



நீங்கள் நீங்களாகவே இருக்க அனுமதிப்பவன் எவனோ அப்படிப்பட்ட நண்பனே உங்களுக்குத் தேவை”



நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்! 

காணாமற்போன அடையாளங்கள்!

காலச்சக்கரம் எவ்வளவு வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை கிராமங்களின் அடையாளங்கள் மாறிவருவதைக் கொண்டே அறிந்து கொள்ள முடியும். கிராமங்களின் தனித்துவமான அடையாளங்களாக விளங்கிய இடங்கள், பொருட்கள், பழக்கவழக்கங்கள் என அனைத்தும் இன்று மாறியும், காணாமலும் போய்விட்டன. இதனால் பலவகையான அடையாளங்களைக் கிராமங்கள் இழந்தாலும் சில பழக்கவழக்கங்களால் தனக்கான அடையாளத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன.

 கிராமங்களில் அன்றாடம் பயன்பாட்டில் இருந்த பொருட்கள், இடங்கள்கூட கால ஓட்டத்தில் காணாமற்போய்விட்டன. ஒருகாலத்தில் புழக்கத்தில் மக்களோடு ஒன்றியிருந்த பொருட்கள்கூட இன்று நினைவுப் பொருட்களாக மாறிவிட்டன. வீட்டின் முன்பு கால்நடைகள், தெருக்களில் விளையாடும் குழந்தைகள், வீட்டுத் திண்ணையில் முதியவர்கள், தாவணி போட்ட கன்னிப் பெண்கள் அன்றாட நிகழ்வுகளை அலசி ஆராயும் குடும்பப் பெண்கள் என்றிருந்த கிராமம்தான் இன்று எப்படியெல்லாமோ மாறிவிட்டது.

 தெருவெங்கும் தார் சாலைகள், கான்கிரீட் வீடுகள், சுடிதார் போட்ட சிறுமிகள், வீட்டின் முன்பு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என்றெல்லாம் நகரத்துக்கு இணையாக கிராமங்களும் மாறிவிட்டன. கால ஓட்டத்தில் காணாமற்போன கிராமத்து அடையாளங்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்:

 ஊர் கிணறு (பொது கிணறு): குடிநீருக்கும் மற்ற பயன்பாடுகளுக்கும் ஏரிகளே பிரதானமாக இருந்தன. ஆனால் நாளடைவில் சரியான பராமரிப்பு இல்லாமற்போனதால் கால்நடைகளுக்கும், மற்ற பயன்பாடுகளுக்கும் மட்டுமே ஏரிகளின் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் ஊர் கிணறு (பொது கிணறு) எனப்படும் கிணறுதான் மக்களின் தாகம் தீர்த்தது.

 ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி பயன்பட்டு வந்த ஊர் கிணறு காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் பரபரப்பாக இருக்கும். மற்ற நேரங்களில் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக இருக்கும். ஊர் கிணறு பெரும்பாலும் குடியிருப்புகளை ஒட்டினாற்போன்று ஒதுக்குப் புறத்திலும் ஏரியின் மையப்பகுதியிலும்தான் அமைந்திருக்கும்.

 ஆழ்துளை குழாய்களின் உபயம், குடிநீர் திட்டத்தினால் தெருக்களில் தண்ணீர் விநியோகம் போன்றவற்றால் காலப்போக்கில் ஊர் கிணறு காணாமற்போய்விட்டது. அன்று குடிநீர் விநியோகத்தில் பிரதானமாக விளங்கிய ஊர் கிணறு இன்று குப்பைத் தொட்டிகளாக மாறிவிட்டது. ஊர் கிணறு காணாமற்போக காரணமாக விளங்கிய கைப்பம்புகளை காண்பதும் இன்று அரிதாக உள்ளது.

 சுமைதாங்கி: உள்ளார்ந்த அர்த்தத்தோடும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் உண்மை என்றே எண்ணத் தோன்றும் பழக்கவழக்கங்களை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர் என்பதற்கு "சுமைதாங்கி' ஓர் உதாரணமாகும். கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் இறந்துவிட்டால் அவர்களின் நினைவாக அமைக்கப்படுவதுதான் "சுமைதாங்கி'. கர்ப்பிணி பெண், குழந்தையைப் பெற்றெடுக்கும் முன்பே சுமையுடன் இறந்துவிட்டதாகவும், இந்நிலை இனி எவருக்கும் வரக்கூடாது என்பதற்காகவும் சுமைதாங்கி அமைக்கப்படுகிறது.

 சுமைதாங்கி பெரும்பாலும் ஊருக்கு வெளியே வனப்பகுதியிலும் சாலையோரங்களிலும்தான் அமைக்கப்படும். செங்குத்து வடிவில் இரண்டு கற்களும் கிடைமட்டமாக ஒரு கல்லும் கொண்டு அமைக்கப்பட்ட சுமைதாங்கியில் எவ்வளவு கனமான சுமையையும் எவரது உதவியும் இல்லாமல் இறக்கிவைக்கவும், மீண்டும் சுமந்து செல்லவும் முடியும்.

கர்ப்ப கால மரணங்கள் இன்று வெகுவாகக் குறைந்துவிட்டாலும் மக்களின் பழக்கவழக்கங்கள் இன்று மாறிவிட்டதால், சுமைதாங்கி அமைப்பது இல்லாமற் போய்விட்டது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட சுமைதாங்கிகளும் பயனற்றுப் போய்விட்டன. அவையும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளன.
 திண்ணை: முதியவர்களின் கடைசிகால இருப்பிடமாக விளங்கும் திண்ணை கொண்ட வீடுகளை இன்று காணமுடிவதில்லை. இருக்கின்ற வீடுகளிலும் திண்ணைப் பகுதி பயன்பாடில்லாத இடமாகவே உள்ளது. வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்களை வரவேற்கும்போது திண்ணையைக் காட்டி, "உட்காருங்கள்' என்று சொல்வதே மிகப் பெரிய மரியாதையாகக் கருப்பட்டது.

 வயதான காலத்தில் தரையில் உட்காரவோ, எழுந்திருக்கவோ முடியாதபோது இந்த திண்ணைதான் உற்ற தோழனாக விளங்கியது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்து தெருக்களில் நடந்து செல்லும் போது வீட்டின் முன்புள்ள திண்ணையில் முதியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் காணமுடியும்.

 அதனால் முதியவர்கள் வசதிக்காக திண்ணையில் உட்கார்ந்து சுவறில் சாய்ந்து கொள்ளும் பொருட்டு சாய்வு தள அமைப்பும், அதற்கு மேல் சிறிய மாடமும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மாடம் விசேஷ காலங்களில் விளக்கேற்றி வைக்கும் இடமாகவும், மற்ற நாட்களில் முதியோருக்குத் தேவையான தண்ணீர் சொம்பு, வெற்றிலைப் பாக்கு பொட்டலம் வைக்கும் இடமாகவும் விளங்கும்.

 இன்று வீட்டில் திண்ணை என்பது இடத்தை ஆக்கிரமிக்கும் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. அதனால் திண்ணை வைத்த வீடுகளை எவரும் கட்டுவதுமில்லை, இருக்கின்ற திண்ணைகள் பராமரிக்கப்படுவதும் இல்லை.

 டூரிங் டாக்கீஸ்: "கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை' என்ற பக்திப் பாடல் எங்காவது ஒலிக்கக் கேட்டால் இன்றளவும் நம் நினைவுக்கு வருவது டூரிங் டாக்கீஸ்தான்.

 சிறு நகரங்களுக்குச் சென்று படம் பார்க்க நேரமில்லாத, அதிகக் கட்டணத்தில் படம் பார்க்க மனமில்லாத மக்களுக்கு டூரிங் டாக்கீஸ்தான் சிறந்த பொழுதுபோக்குக் கூடமாகும். தரை, பெஞ்சு, சேர் என மூவகைகள் மட்டுமே திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும். டூரிங் டாக்கீஸில் சேர் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பது அந்த காலகட்டத்தில் கெüரவமாகக் கருதப்பட்டது.

 மணற்பாங்கான தரையில் உட்கார்ந்து படம் பார்க்கும் சுகமே அலாதியானது. அப்போதெல்லாம் அறியாமை காரணமாக திரைக்கு அருகே அமர்ந்து படம் பார்ப்பதை சிலர் விரும்புவர். அதற்காக முன்னதாகவே டிக்கெட் வாங்கிச் சென்று திரைக்கு அருகில் மணலைத் திரட்டி மேடாக்கி அமர்ந்து படம் பார்ப்பதுண்டு.

 நடந்தும், சைக்கிளிலும் வந்து படம் பார்த்துச் செல்லும் மக்களுக்கு மத்தியில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் படம் பார்க்க வருவது அப்போது அந்தஸ்து மிக்கதாக எண்ணப்பட்டது. பட இடைவேளையின் போது மட்டுமின்றி எப்போதும் பார்வையாளர்கள் மத்தியில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படும். எத்தனை உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் எல்லோரும் விரும்பி வாங்குவது "கல்கோனா' எனப்படும் உருண்டை மிட்டாய்தான்.

 டூரிங் டாக்கீஸ்களில் மட்டுமே கிடைக்கும் இந்த மிட்டாயை படம் தொடங்கும் போது வாங்கி வாயில் போட்டால் முடியும் வரையில் அதன் சுவை இருந்து கொண்டே இருக்கும். டூரிங் டாக்கீஸ் என்று இல்லாமற் போனதோ அன்றே இந்த கல்கோனாவும் காணாமற்போய்விட்டது. ஆனால் இன்று வரையில் டூரிங் டாக்கீஸ் என்றால் கல்கோனாவும் கல்கோனா என்றால் டூரிங் டாக்கீசும் நம் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.


 கிராம விளையாட்டுகள்: கிராமத்து தெருக்களில் சிறார், சிறுமியர் விளையாடுவதைக் காண்பதற்கில்லை. முன்பு பள்ளி நாட்களில் மாலை நேரத்திலும், விடுமுறை நாட்களில் பகல் வேளையிலும் விளையாடிக் கொண்டிருப்பர். நொண்டி ஆட்டம், கண்ணாமூச்சி ஆட்டம், சில்லாட்டம், தாயம் போன்றவை சிறுமியர் விளையாட்டாகவும், கிட்டிப்புல், கோலி, கபடி போன்றவை சிறார் விளையாட்டாகவும் இருந்தது.

 ஆனால் காலப்போக்கில் நகரத்து சாயல், தகவல் தொடர்பு சாதனங்களால் இத்தகைய விளையாட்டுகள் இல்லாமற்போய்விட்டன. பண்டிகை நாட்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமே இவ்வகையான விளையாட்டுகளைக் காணமுடிகிறது.

 பத்தாயம்: அறுவடைக்குப் பின்னர் விவசாய விளைபொருட்களை ஆண்டுக்கணக்கில் சேமித்து வைக்க பயன்படுத்துவதுதான் பத்தாயம். அதிக அளவில் சாகுபடி செய்வோரும், வசதி படைத்தவர்களும்தான் பத்தாயம் வைத்திருப்பர். செவ்வக வடிவில் வசதிக்கேற்ப உயர்ரக அல்லது சாதாரண மரப்பலகைகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட பத்தாயத்தில் பொருட்களைக் கொட்டுவதற்கு அதன் மேற்புரத்திலும் வேண்டும்போது எடுத்துக் கொள்ள கீழ்புறத்திலும் வழிவகை உண்டு.
 உள்ளூரில் கிடைக்கும் களிமண், வைக்கோல் துகள் போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான குதிர் வட்ட வடிவில் விலைக்கேற்ற அளவுகளில் வடிவமைக்கப்பட்டிருக்கும். வசதி குறைவானவர்கள் வீட்டில் குதிர்தான் இடம்பெற்றிருக்கும்.

 நகை, பணம் போன்றவற்றையும் இதனுள்தான் வைத்திருப்பர். விளைபொருட்களையே உணவுப் பொருட்களாகவும் அப்போது பயன்படுத்தியதால் பத்தாயம், குதிர் ஆகியவற்றின் தேவை அவசியமாக இருந்தது.

 கிராமங்கள் என்றாலே இவையெல்லாம் இருக்கும் என்று உறுதியாகக் கூறப்பட்ட அடையாளங்கள் யாவும் இன்றைக்குக் குக்கிராமங்களில் கூட இல்லாமற்போய்விட்டன. அடையாளமாக விளங்கிய பொருட்கள், பழக்கவழக்கங்கள் யாவும் இன்று அடையாளத்தை இழந்துவிட்டன. பழக்கவழக்கங்கள் மட்டுமே இன்று பழக்கத்தில் இருந்தாலும் அதுவும் விசேஷ காலங்களில் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகிறது. 

ஒவ்வொரு நாட்டினருடன் எப்படிப் பேசுவது?

இங்கிலாந்து- நாட்டினருடன் பேசும்போது நெருக்கமாக நிற்காதீர்கள். எவரையும் திருவாளர், திருமதி, டாக்டர் என்று உரிய மரியாதையுடன் அழைக்க வேண்டும். முறையாக உடை அணிய வேண்டும். அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கேட்காதீர்கள். குடும்ப விஷயத்திலிருந்து பேச்சைத் தொடங்காதீர்கள். அதை அவர்கள் விரும்புவதில்லை.

சீன- நாட்டினருடன் எடுத்த எடுப்பில் வியாபார சமாச்சாரங்களைப் பேச வேண்டாம். உடலோடு ஒட்டி நிற்காதீர்கள். தொட்டுப் பேசாதீர்கள். தேநீரை ரசித்துக் குடியுங்கள். வியாபாரப் பேச்சு வார்த்தைகளின்போது அடிக்கடி தேநீர் தரப்படும். மரபு வழியிலான உடையை அணியுங்கள். வெள்ளை உடை அணிந்து பொது விழாக்களுக்குச் செல்லாதீர்கள். அங்கே வெள்ளை துக்கத்திற்கு அடையாளம்.

அரபு- நாட்டினருடன் உரையாடும்பொழுது உங்களுக்கு மிக அருகில் நெருக்கமாக நிற்பார்கள். அது அவர்கள் பழக்கம். அதைத் தவிர்க்க நீங்கள் பின்னே தள்ளி நிற்க முயற்சி செய்யாதீர்கள். அது அங்கே மரியாதைக் குறைவாகக் கருதப்படும். அராபியர்களிடம் அவர்களது குடும்பம் பற்றிக் கேள்வி கேட்காதீர்கள். அவர்கள் அதை விரும்புவதில்லை.

பிரான்ஸில் விருந்தினர் உள்ளே நுழையும்போதும் விடை பெற்று வெளியே செல்லும்போதும் கை குலுக்குங்கள். பேச்சு வார்த்தைக்கு

பிரெஞ்சு மொழியில் முன்னதாகவே கடிதம் எழுதுங்கள்.

சில பழைய வார்த்தைகளும், அதற்கான புதிய அர்த்தங்களும்!

பொதுவாக சொல் அகராதி எனப்படும் டிக்ஸ்னரியில், வார்த்தைகளும், அதற்கு ஏற்ற அர்த்தங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். இங்கும் அதுபோன்ற ஒரு அகராதிதான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது பழைய வார்த்தைகளுக்கு புதிய அர்த்தங்களை கொடுத்துள்ளது.

என்னவென்று பார்ப்போம்.

சமரசம் – ஒவ்வொருவரும், தனக்குத்தான் மிகப்பெரிய கேக் துண்டு வந்ததாக எண்ணும் வகையில் ஒரு கேக்கை வெட்டும் கலை.

கருத்தரங்கு – ஒருவருக்கு வந்துள்ள குழப்பத்தை, பலர் சேர்ந்து அதிகமாக்குவது.

கருத்தருங்கு அறை – இங்கு அனைவருமே பேசுவார்கள், ஒருவரும் கேட்கமாட்டார்கள், சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்ள இயலாது என்று அனைவருமே நிராகரிக்கும் இடம்.

மருத்துவர் – எவர் ஒருவர் மாத்திரையால் உங்களது நோயைக் கொன்று, மருத்துவக் கட்டணத்தால் உங்களைக் கொல்பவரோ அவரே.

புன்னகை – பல சொல்ல முடியாத வார்த்தைகளின் மறைமுக சமிக்ஞை.

கண்ணீர் – ஆண்களின் சக்தியை வெல்லும் பெண்களின் சக்தி.

மேலதிகாரி – நீ தாமதமாக அலுவலகம் வரும் போது, சீக்கிரம் வந்து, நீ சீக்கிரம் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது காலம் தாழ்த்தி கிளம்புபவர்.

சம்பளம் – இது காற்று போன்றது. வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. உணர மட்டுமே முடியும்.

அலுவல விடுப்பு – வீட்டில் இருந்தே பணியாற்றுவது

விரிவுரை – மாணவர்களுக்கு எந்த வகையில் சொன்னாலும் புரியாமலேயே இருப்பது

சற்று ஓய்வு – கோடைக் காலங்களில் இலையை உதிர்த்துவிட்டு இருக்கும் மரங்கள்.

வழுக்கை – மனிதனால் மாற்ற முடியாத கடவுள் செய்யும் ஹேர் ஸ்டைல்.

ரகசியம் – யாரிடமும் கூற வேண்டாம் என்று எல்லோரிடமும் சொல்லும் ஒரு விஷயம்.

படிப்பது – புத்தகத்தை திறந்து மடியில் வைத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்ப்பது.

பெற்றோர் – உங்களது சிறு வயது சுட்டித் தனங்களை நினைத்துக் கொண்டே வாழ்பவர்கள்.

விவாகரத்து – திருமணத்தின் எதிர்காலம்

ஆங்கில அகராதி – இதில்தான் முதலில் விவகாரத்தும், பிறகு திருமணமும் வரும்.

கொட்டாவி – திருமணமான ஆண்கள் வாயைத் திறக்க உள்ள ஒரே வழி

அனுபவம் – மனிதன் செய்யும் தவறுகளுக்கு அவன் வைக்கும் பெயர்

அணு குண்டு – புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தையும் அழிக்க மனிதன் கண்டுபிடித்தது.

வாய்ப்பு – நதியில் தவறி விழுந்தவன் குளித்துக் கொள்வது.

வேட்பாளர் – வாக்குறுதிகளை விற்றுவிட்டு வாக்குகளை வாங்குபவர்.

இன்னும் இதுபோல ஏராளமாக உள்ளன.. இவை வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே.

முதுமையை தடுக்கும் செம்பருத்தியின் மருத்துவ பலன்கள்!

செம்பருத்தி மிதவெப்ப மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் அழகிய பூச்செடி வகையைச் சேர்ந்ததாகும்.
பல்வேறு வகைகளில் வளரும் இந்த செடியில் தனித்தன்மை வாய்ந்த அழகிய பூக்கள் பூக்கும்.

செம்பருத்தி அபரிமிதமான மருத்துவ குணங்கள் உள்ள செடியாகும்.

செம்பருத்தி இலைகள் மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு வழிமுறைகளிலும் கையாளப்பட்டு வருகிறது.

செம்பருத்தி பூவிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் புகழ் பெற்று விளங்குகிறது.

ஆயுர்வேதத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை செம்பருத்தி உயர்ந்த மருத்துவ குணம் கொண்டவைகளாவும், இருமல், முடி உதிர்தல் மற்றும் நரைத்தல் போன்றவற்றிற்கு அருமருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

முடி உதிர்தலை தடுத்தல்

செம்பருத்தி இலைகள் மற்றும் பூவின் இதழ்களை அரைத்து செய்யப்பட்ட கலவை முடி உதிர்வதை தடுப்பதற்கான இயற்றையான பொருளாக உள்ளது.

அது முடியின் நிறத்தை கருமையாக வைத்திருக்கவும், ஷாம்பு போட்ட பின்னர் தலைக்கு போடும் போது பொடுகுகளை நீக்கவும் உதவுகிறது.

தேநீர்

செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட தேநீர் பல்வேறு நாடுகளிலும் அதன் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிறுநீரகத்தின் பிரச்னைகளின் போது, இயற்கையான முறையில் அதனை சரி செய்ய சர்க்கரை இல்லாமல் இந்த செம்பருத்தி தேநீரை பருக வேண்டும் மற்றும் மன அழுத்தத்துடன் இருக்கும் வேளைகளில் நம்மை சாந்தப்படுத்தவும் இந்த தேநீர் உதவுகிறது.

சரும பாதுகாப்பு

அழகு சாதன பொருட்களில், சரும பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் பொருட்களை செம்பருத்தி கொண்டிருக்கிறது.

சீன மருத்துவத்தில், செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு சூரிய-கதிருக்கு எதிரான புறஊதாக் கதிர்வீச்சினை ஈர்க்கவும் மற்றும் தோலில் ஏற்படும் சுருக்கங்களை அகற்றவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இரத்த அழுத்தத்தை குறைத்தல்

செம்பருத்தி இலை தேநீரை பருகுவது தொடர்பான ஆய்வுகளின் முடிவில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்ப்பட்டிருந்து பல நபர்களின் இரத்த அழுத்த அளவை குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, இரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக தொடர்ச்சியாக சாப்பிட வேண்டிய மருந்தாக செம்பருத்தி இலை உள்ளது.

காயங்களை குணப்படுத்துதல்

திறந்த காயங்கள் மற்றும் புற்றுநோயினால் உருவான காயங்களின் மேல் போடுவதற்காக செம்பருத்தியில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணைய் பயன்படுகிறது.

புற்றுநோயின் ஆரம்ப காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. திறந்த காயங்களை வேகமாக குணப்படுத்த செம்பருத்தி சாறு உதவுகிறது.

கொழுப்பை குறைத்தல்

செம்பருத்தி இலை தேநீர் LDL கொழுப்பின் அளவை குறைப்பதில் மிகவும் திறன் வாய்ந்த மருந்தாக உள்ளது. தமனிகளின் உள்ளே உள்ள அடைப்புகளை நீக்குவதன் மூலம், கொழுப்பின் அளவை இவை குறைக்கின்றன.

இருமல் மற்றும் ஜலதோஷம்

செம்பருத்தி இலைகளில் பெருமளவு குவிந்து கிடக்கும் வைட்டமின் சி-யை தேநீராகவும், சாறாகவும் பிழிந்து குடிக்கும் போது அது சாதாரண ஜலதோஷம் மற்றும் இருமலுக்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

உங்களுடைய ஜலதோஷத்தை வெகு சீக்கிரத்தில் வெளியே அனுப்ப செம்பருத்தி உதவுகிறது.

எடையை குறைத்தல் மற்றும் ஜீரணம்

இயற்கையாகவே பசியை குறைக்கும் குணத்தை கொண்டிருக்கும் செம்பருத்தியை உணவில் சேர்த்துக் கொள்வதால் எடையை குறைக்க முடியும்.

செம்பருத்தி இலை தேநீரை குடிப்பதன் மூலம் நீங்கள் மிகவும் குறைவாக உணவு உண்ணவும் மற்றும் உண்ட உணவை வேகமாக ஜீரணம் செய்ய வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கவும் முடியும்.

மாதவிடாயை முறைப்படுத்துதல்

குறைந்த அளவே ஈஸ்ட்ரோஜன் உள்ள பெண்கள் செம்பருத்தி இலை தேநீரை தொடர்ந்து பருகி வந்தால் அது அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இதன் மூலம் உடலின் ஹார்மோன் அளவு சமச்சீராகவும், மாதவிடாய் சீராகவும் இருக்க உதவுகிறது.

மூப்பினை தள்ளிப் போடுதல்

செம்பருத்தி இலைகளில் ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்கள் மிகவும் அதிக அளவில் உள்ளன.

இந்த பொருட்கள் உங்கள் உடலிலுள்ள கிருமிகளை எதிர்த்து நாசம் செய்யும் வல்லமை படைத்தவையாக இருப்பதால், உங்களுக்கு வயதாவது தள்ளி வைக்கப்பட்டு, நீங்கள் நீண்ட இளமையுடன் இருக்க வைக்க உதவுகிறது.

பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு ஒருசில உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டியிருக்கும்.
அதேப் போல் குழந்தைப் பிறந்த பிறகு ஒருசில உணவுகளின் மீது ஆசை அதிகம் எழும்.

அதிலும் அத்தகைய உணவுப் பொருட்கள் அனைத்தும் கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடக்கூடாதவையாக இருக்கும். ஏனெனில் அவற்றில் கலோரிகள் அதிகப்படியாக இருப்பதால், அவற்றை தவிர்க்க வேண்டுமென்று சொல்வார்கள்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை பிரசவத்திற்கு பின் பெண்கள் எந்த ஒரு பயமின்றியும் சாப்பிடலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பாஸ்தா

இத்தாலியன் உணவுப் பொருட்களில் ஒன்றான பாஸ்தாவை பிரசவத்திற்கு பின் சாப்பிட பெண்கள் பயப்படுவார்கள்.

ஆனால் அப்படி பயப்படத் தேவையில்லை. இதில் கலோரிகள் அதிகம் இருப்பதோடு, நீண்ட நேரம் எனர்ஜியுடன் இருக்க உதவியாக இருக்கும். இருப்பினும் அளவாக சாப்பிடுவதே நல்லது.

சீஸ்

பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்று தான் சீஸ்.

ஏனெனில் பிரசவத்தின் போது பெண்கள் அதிகப்படியான கால்சியம் சத்தை இழக்க நேரிடும். ஆகவே கால்சியம் அதிகம் நிறைந்த பால் பொருட்களில் ஒன்றான சீஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களைக் கூட பிரசவத்திற்கு பெண்கள் சாப்பிடலாம்.

இருப்பினும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, அன்னாசி, திராட்சை போன்றவற்றை அளவாக உட்கொள்வது நல்லது. ஏனெனில் அதிகமாக சாப்பிட்டால், ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும்.

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதைகளில் ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. இந்த சத்து பிரசவம் ஆன பெண்களுக்கு மிகவும் இன்றியமையாதது.

அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டியது. எனவே குழந்தைக்கு பால் கொடுக்கும் முன், ஒரு கையளவு சூரியகாந்தி விதைகளை சாப்பிட வேண்டும். இதனால் அது தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்கும்.

காபி

கர்ப்பமாக இருக்கும் போது காப்ஃபைன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளக் கூடாது.

ஏனெனில் அது கருவின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் பிரசவத்திற்கு பின் காபி குடித்தால், அது உடலை ரிலாக்ஸ் அடையச் செய்து, புத்துணர்ச்சிக் கொடுக்கும்.

பால்

ஒவ்வொரு புதிய தாய்மார்களும் பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் பால்.

ஏனெனில் பாலில் அவர்களுக்கு தேவையான கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, பாலானது தாயப்பாலின் சக்தியை அதிகரிக்கும்.

ஆகவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் 1 மணிநேரத்திற்கு முன், ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் கே அதிகம் நிறைந்துள்ளது.

இத்தகைய வைட்டமின் கே நிறைந்துள்ள உணவுப் பொருட்களை பெண்கள் தங்கள் பிரசவத்திற்கு பின் சாப்பிட்டால், தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளின் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும்.

மீன்

மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டி நிறைந்துள்ளது. அதிலும் சால்மன், டூனா போன்ற மீன்களில் இச்சத்து மிகுந்த அளவில் உள்ளது.

ஆகவே இதனை பெண்கள் சாப்பிட்டால், குழந்தைகளின் மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். அதிலும் வாரத்திற்கு 2 முறைக்கு மேல் மீனை சாப்பிடக்கூடாது.

ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்

பிரசவத்தின் போது இழக்கப்பட்ட உடலின் எனர்ஜியை அதிகரிப்பதற்கு, கார்போஹைட்ரேட் மிகவும் அவசியமானதாக உள்ளது.

ஆகவே பிரசவத்திற்கு பின் பெண்கள், ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களான கைக்குத்தல் அரிசி அல்லது பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.